இந்தியாவில் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், கருப்புப் பணத்தை மறைக்கவும் கிரிப்டோ முதலீட்டுத் தளங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் கிரிப்டோகரன்சியில் சிறு முதலீட்டாளர்களை விடவும் பெரும் முதலீட்டாளர்கள் அதிகப்படியான லாபத்தையும், ஆதிக்கத்தையும் செலுத்தும் காரணத்தால் சிறு முதலீட்டாளர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தப் பிரச்சனைகளைச் சரி செய்ய மத்திய அரசு மிகவும் தீவிரமான முறையில் பல கட்ட ஆலோசனைகள் அடிப்படையில் செபி மற்றும் ஆர்பிஐ இணைந்து புதிய கிரிப்டோகரன்சி மசோதாவை உருவாக்கி வருகிறது.
சமீபத்தில் கிரிப்டோகரன்சி குறித்து வெளியான செய்திகள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.
ஸ்ரீகிருஷ்னா ரமேஷ்
கர்நாடகாவில் ஸ்ரீகிருஷ்னா ரமேஷ் என்பவர் பல போக்கர் விளையாட்டு தளத்தையும், பிட்காயின் எக்ஸ்சேஞ்ச் தளத்தையும், பெங்களூரு அரசின் இணையத் தளம் என 10க்கும் அதிகமான தளத்தை ஹேக் செய்து பணத்தைத் திருடியது மட்டும் அல்லாமல் சாமானிய மக்கள் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்தில் முதலீடு செய்து சேமித்து வைத்திருந்த கிரிப்டோகரன்சியையும் திருடியுள்ளார்.
31 பிட்காயின்
ஸ்ரீகிருஷ்னா ரமேஷ் பிடிபட்ட போது அவரின் கையில் 9 கோடி ரூபாய் மதிப்பிலான 31 பிட்காயின்-ஐ காவல் துறை கைப்பற்றியுள்ளனர். பெங்களூரு அரசின் eProcurement இணையத்தளத்தில் ஹேக் செய்து ஹேமந்த் முடப்பா என்பவர் கொடுத்த 46 கோடி ரூபாய் பணம் கொண்ட இரு கணக்கில் இருக்கும் பணத்தைத் திருடியுள்ளனர். இந்தத் தகவலை Ayub என்ற நிறுவனம் கொடுத்த தகவல் படி செய்ததாக ஹேமந்த் முடப்பா தெரிவித்துள்ளார். இதற்குச் சுமார் 11 கோடி ரூபாய் கமிஷன் பெற்றுள்ளார்.
5240 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம்
மேலும் ஸ்ரீகிருஷ்னா ரமேஷ் பிட்காயின் விலை 100, 200 டாலர் விலையில் இருந்த போதே திருடி வந்ததை ஒப்புக்கொண்டு உள்ளார். மேலும் இந்தப் பிரச்சனை வெளியான பின்பு டிசம்பர் 1 2020 மற்றும் ஏப்ரல் 14, 2021 ஆகிய இரு நாளில் மட்டும் 5240 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அரசியல் தலைவர்கள்
இந்தப் பிட்காயின் மற்றும் அரசு இணையத் தள ஹேக்கிங் மற்றும் அதன் பின்பு நடந்த பணப் பரிமாற்றத்தில் பல அரசியல் தலைவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் கூறினார். இதே தொடர்ந்து கர்நாடக முதல்வர் பசரவாஜ் பொம்மை-யும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி
இந்தப் பிரச்சனை முழுமையாகத் தணிவதற்குள் தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செய்த ரெய்டு-ல் கிரிப்டோகரன்சியில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதற்கான விபரங்களைக் கண்டுபிடித்துள்ளதாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.
தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை
தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களுக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள் மட்டும் அல்லாமல் சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், செங்கல்பட்டு, ஆந்திரா, கர்நாடகா என 69 இடங்களில் தங்கமணிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருக்கு நெருங்கியவர்களுக்குத் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
50 கோடி ரூபாய் கிரிப்டோ சொத்துக்கள்
இந்தச் சோதனையில் சேலத்தில் தங்கமணி அவர்களுக்குச் சொந்தமான வீட்டில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான கிரிப்டோகரன்சி முதலீடு சொத்துக்களை வைத்துள்ளது கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் இந்த முதலீடு குறித்து அவர் தனது சொத்து விபரத்திலும் குறிப்பிடவில்லை.
கிரிப்டோ சொத்து விபரம்
தங்கமணி நேரடியாகக் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யவில்லை, ஆனால் அவரின் மகன் டி.தரணிதகன் மற்றும் மருமகன் தினேஷ் குமார் ஆகியோர் கிரிப்டோ முதலீடுகளை நிர்வாகம் செய்து வருகின்றனர். முதல்கட்ட சோதனையில் பிட்காயின் (Rs 36.58 lakh/யூனிட்), எதிரியம் (ரூ. 3.07 lakh/யூனிட்), Ada (ரூ. 101.50/யூனிட்), டெதர் ( (ரூ. 80.44/யூனிட்) மற்றும் சோலானா (ரூ. 12,912/யூனிட்) விலையில் சுமார் 50 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மறுப்பு
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி நான் கிரிப்டோகரன்சியில் எந்த முதலீட்டையும் செய்யவில்லை எனக் கடமையாக மறுப்புத் தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சோதனையில் 2.16 கோடி ரூபாய் ரொக்க பணம், ஒரு கிலோ அளவிலான தங்கம், 40 கிலோ அளவிலான வெள்ளி மற்றும் பல செல்போன்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. இதேபோல் சில வங்கி லாக்கர் விபரங்களையும், கம்பியூட்டர் ஹார்ட் டிஸ்க்-ஐயும் கைப்பற்றப்பட்டு உள்ளது.
கிரிப்டோ முதலீடுகள்
வருமான வரி துறை மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இதற்கு முன் நடத்திய பல்வேறு சோதனையில் பலர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ள தகவல் கிடைத்துள்ள காரணத்தால், அதை அடிப்படையாக வைத்தும் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அரசியல் வட்டம் மட்டும் அல்லாமல் பெரும் முதலீட்டாளர்கள், பெரும் பணக்காரர்கள் வட்டத்திலும் கிரிப்டோ முதலீடு குறித்த தரவுகளை வருமான வரி துறை சேகரிக்க துவங்கியுள்ளது.