1990க்குப் பின் இந்தியா மிகப்பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீனாவில் ஏற்பட்ட பொருளாதாரப் புரட்சி இந்தியாவிலும் நிகழும் என 30 வருடங்களாகப் பேசப்பட்டும், பரப்புரை செய்யப்படும் வருகிறது. இதே நிலையில், பொருளாதார ரீதியில் இந்தியாவை விடவும் பின்தங்கிய பங்களாதேஷ் நாடு இன்று தனி நபர் வருமானத்தில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி சர்வதேச நாடுகள் முன்னிலையில் மிகப்பெரிய தோல்வியைக் கொடுத்துள்ளது.
சீனாவிற்கு இணையான ஒரு நாட்டை உருவாக்க வேண்டும், இது கண்டிப்பாக இந்தியாவாகத் தான் இருக்க முடியும் என மேற்கத்திய நாடுகளுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. ஆனால் இன்று வரையில் இந்தியாவால் கீழ் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியாமல் தவித்து வருகிறது.
இந்நிலையில் பங்களாதேஷ் நாட்டின் தனிநபர் வருமானத்தில் ஏற்பட்ட வளர்ச்சி இந்தியாவின் தோல்வியை உலகநாடுகளுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
கொரோனா
தனி நபர் வருமானத்தில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சிக்கு கொரோனா முக்கியக் காரணம் என்றால் மிகையில்லை. காரணம் பங்களாதேஷ்-ல் ஜூன் மாதம் தான் அதிகக் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பின்பு படிப்படியாகக் குறைந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
165 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பங்களாதேஷ் நாட்டில் கொரோனாவால் 5,600 பேர் இறந்துள்ளனர். ஆனால் இந்தியாவில் பங்களாதேஷ் நாட்டை விடவும் 8 மடங்கு அதிக மக்கள் தொகை இருந்தாலும், இறந்தவர்களின் எண்ணிக்கை 20 மடங்கு அதிகமாக உள்ளது.
10.3% உற்பத்தி
இந்தக் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தின் காரணமாக இந்தியாவில் 10.3 சதவீத உற்பத்தி முழுமையாகக் குறைந்துள்ளது என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் சர்வதேச நாடுகளின் சராசரி பொருளாதார வீழ்ச்சி அளவு கணிப்பை விடவும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி 2.5 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாக்குப் பின்
நிதி நெருக்கடி, குறைந்த முதலீட்டில் இயங்கும் இந்திய நிதியியல் துறை, பல வருடங்களாகத் தேங்கிக் கிடக்கும் முதலீட்டுத் திட்டங்கள் ஆகியவை கொரோனா-க்கு பின்பும் நாட்டின் வளர்ச்சியைப் பெரிய அளவில் பாதிக்கும்.
கொரோனா இல்லாமல் இருந்தால் கூட அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா தனி நபர் வருமானத்தில் பங்களாதேஷ் உடன் தோற்றுப்போயிருக்கும் எனப் பொருளாதார வல்லுனர் Shoumitro Chatterjee மற்றும் முன்னாள் இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் வெளியிட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெற்றிக்குக் காரணம் என்ன..?
பங்களாதேஷ் நாடு தற்போது 2ஆம் உலகப் போருக்குப் பின் மிகப்பெரிய பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்திய ஏசியன் டைகர்ஸ் எனப்படும் ஜப்பான், தைவான், தென் கொரியா, சீனா ஆகிய நாடுகளின் வெற்றிப்பாதையைப் பின்பற்றி வருகிறது.
குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்கள் அதிகம் கொண்ட பங்களாதேஷ் தற்போது பல நாடுகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இதேபோல் பங்களாதேஷ் உடன் வியட்நாம் இதே பாதையைப் பின்பற்றி வருகிறது.
இதன் சீனாவின் இடத்தைப் பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் நாடுகள் பங்குபோட்டுக்கொள்ளும் அளவிற்குத் தற்போது இரு நாடுகளும் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்தியா
சீனாவின் இடத்தைப் பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் நாடுகள் பங்குபோடத் துடிக்கும் அதேவேளையில் இவ்விரு நாடுகளுக்கும் மிகப்பெரிய வெற்றியைத் தேடி கொடுத்த low-skilled உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பைச் சந்தையை இந்தியா கவனிக்க மறந்துள்ளது. இந்தியாவில் அதிகளவிலான இளைஞர்கள் இருந்தும் இப்பிரிவை கவனிக்கத் தவறியதால் 140 பில்லியன் டாலர் அளவிலான சந்தை இந்தியா இழந்துள்ளது.
இது இந்திய ஜிடிபியில் 5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரக் கொள்கைகள்
இந்த நிலையிலும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளைக் கவனிக்காமல் இறக்குமதிக்குத் தடை விதித்து உள்நாட்டுத் தேவைகளை உள்நாட்டு உற்பத்தி மூலம் சரி செய்யலாம் என்றும். இதன் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம் என்றும் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
இது 1960 மற்றும் 70களில் இருந்த self-reliance கொள்கைகள் மீண்டும் புழக்கத்திற்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.