ஆட்டோமொபைல் உலகில் கடந்த 15 வருடங்களாகத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது அதிலும் குறிப்பாக அதிவேக கார்கள், அதிநவீன எலக்ட்ரிக் கார், தானியங்கி கார் தொழில்நுட்பம், கார்பன் பைபர் கார்கள், அதிகவேக எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்கள் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இவை அனைத்திற்கும் மேலாகப் பெட்ரோல், டீசல் பயன்பாடு இல்லாத கார்களைத் தாயாரிக்கும் பணிகளிலும், ஆராய்ச்சியிலும் உலகில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சிறிதும் பெரிதுமாகப் பல நிறுவனங்கள் இதில் ஈடுபட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் மூலம் இயக்கப்படும் கார்கள் உருவாக்கும் பணிகள் கடந்த சில வருடங்களாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்தியில் தீவிரம் அடைந்து வருகிறது. இதில் ஒரு நிறுவனம் தான் இந்தியாவிற்கு வரவும், இந்தியாவிலேயே தொழிற்சாலை அமைக்கவும் தயாராக உள்ளது.
அர்பன் ஏரோநாட்டிக்ஸ்
இஸ்ரேல் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் தான் அர்பன் ஏரோநாட்டிக்ஸ். இந்நிறுவனம் தற்போது ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் (hydrogen fuel cells) மூலம் இயங்கும் ஒரு பறக்கும் கார்-ஐ உருவாக்கி வருகிறது.
இந்தப் பறக்கும் காரின் பெயர் CityHawk.
டாடா முதலீடு
இந்த அர்பன் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் டாடா குழுமம் முதலீடு வாயிலாகச் சிறிய அளவிலான பங்குகளைக் கைப்பற்றிய கடந்த 20 வருடங்களாக இந்நிறுவனத்தின் முதலீட்டாளராக இருந்து வருகிறது.
இந்நிலையில் அர்பன் ஏரோநாட்டிக்ஸ் தற்போது கடைசி முதலீட்டுச் சுற்றில் நிதி திரப்படுவதும் மட்டும் அல்லாமல் ஒரு கூட்டாளியையும் பெற வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது.
இந்தியா
எங்கள் பறக்கும் CityHawk கார்களை உற்பத்தி செய்யச் சரியான இடம் இந்தியா இருக்கும் என்றும், இந்தியாவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் போன்ற சிறப்பான நிறுவனங்கள் உள்ளது என்று அர்பன் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
40 மில்லியன் டாலர்
மேலும் அர்பன் ஏரோநாட்டிக்ஸ் துணைத் தலைவர் Janina Frankel-Yoeli கூறுகையில், தற்போது எங்களது தேவை 40 மில்லியன் டாலர், இந்தத் தொகை முழுமையாகவும் தேவையில்ல, பகுதி பகுதியாகக் கிடைத்தாலும் சரி. மேலும் இந்த முதலீட்டைக் கொண்டு முழு வடிவம் கொண்ட கார்களைத் தயாரிக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். எனத் தெரிவித்துள்ளனர்.
டாடா
அர்பன் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் டாடா மிகவும் குறைந்த அளவிலான முதலீட்டை மட்டுமே செய்துள்ள நிலையில், அடுத்த முதவீடுகள் செய்வதற்காக எவ்விதமான திட்டமும் தற்போது இல்லை என்று டாடா கூறியுள்ளது.
இந்நிலையில் பறக்கும் CityHawk காரின் வடிவமைப்பாளர் Rafi Yoeli, கூறுகையில், நாங்கள் பல அமைப்புகள் உடன் ஒப்பந்தம் செய்துள்ளோம், ஆனால் இந்தியாவுடன் இதுவரை எவ்விதமான ஒப்பந்தமும் செய்தது இல்லை. இந்தியாவில் பல விமான நிறுவனங்கள் இருப்பதும், டாடா எங்களின் கூட்டணியில் இணைவதன் மூலமும் பெரிய அளவிலான வாய்ப்பை சாத்தியப்படுத்த முடியும் எனக் கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பது எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
பறக்கும் கார்
ஏற்கனவே Comran என்ற பறக்கும் காரை தயாரித்துச் சுமார் 300 முறை பறக்கவிடப்பட்டுள்ள நிலையில், பறக்கும் கார் வெறும் கட்டுக்கதை இல்லை என்பதை விலங்கியுள்ளது.
தற்போது உருவாக்கப்படும் CityHawk 6 இருக்கைகள் கொண்ட ஒரு வேன் வடிவிலான பறக்கும் கார். இந்தக் கார் சுமார் 100 கிலோ வரையிலான எடையை ஏந்தும் சக்தி கொண்டு Rafi Yoeli தெரிவித்துள்ளார்.