கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நாடுகளின் செயற்கைக் கோளை ஏவியதன் மூலமாக, இஸ்ரோ நிறுவனம் 1,245 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்ததோடு, அரசுக்கு வருவாயும் ஈட்டித் தருகிறது.
இது குறித்து மாநிலங்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அணுசக்தி மற்றும் விண்வெளி அமைச்சர் ஜிஜேந்திர சிங், கடந்த 5 ஆண்டுகளில் 26 நாடுகளின் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ 1,245 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வெளிநாட்டு நிதி பணப் பரிமாற்றம் மூலம் ரூ.91.63 கோடி வருவாய் கிடைக்க உதவியதாகவும் கூறியுள்ளார். மேலும் 2019 நிதியாண்டில், செயற்கைக் கோள் ஏவுதல் மூலம் 324.19 கோடி ரூபாய் வருவாயும், 2018-ம் நிதியாண்டில் 232,56 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த டிசம்பர் 11ம் தேதியன்று, ரேடார் இமேஜிங் புவி கண்காமிப்பு செயற்கைக் கோள் RISAT-2BR1-யை பிஎஸ்எல்வி ராக்கெட்டைப் பயன்படுத்தி செயற்கைக் கோளை நிலை நிறுத்தியது. பிஎஸ்எல்வி இத்துடன் ஒன்பது வெளிநாட்டு செயற்கைக் கோள்கைகளையும் எடுத்துச் சென்றது.
முன்னதாக அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர், நெதர்லாந்து, ஜப்பான், மலேஷியா, அல்ஜீரியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுடன், வணீக ரீதியாக, 10 நாடுகளுடன் இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா கடந்த 1999 முதல் 319 வெளிநாட்டு செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்தியுள்ளது என்று மத்திய அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சந்திரயான், செவ்வாய், ஆஸ்ட்ரோசாட், எஸ் ஆர் இ-1 நாவிக் ஆகிய முக்கிய விண்கலங்கள் செயற்கைக் கோள்கைகளை ஏந்தி விண்ணில் பாய்ந்த பெருமை கொண்டது பிஎஸ்எல்வி. விண்ணில் பாய்வதில் பொன்விழா காண்கிறது. இதுவரை 49 முறை செயற்கைக் கோள்கள் விண்கலங்களை சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி ராக்கெட்களில் 46 முறை வெற்றியும், 2 முறை தோல்வியும் ஒரு பகுதியளவு வெற்றியும் இருந்திருக்கிறது.
சமீபத்தில் சந்திராயன் 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது குறிப்பிடத்தக்கது.