கொரோனா வைரஸ் என்கிற பெயரைச் சொன்னால் உயிர் பயம் வந்த காலம் எல்லாம் போய்விட்டது. அடுத்த மாதம் ஒழுங்காக சம்பளம் வருமா? பார்க்கும் வேலை நீடிக்குமா? என்கிற பயம் தான் தற்போது அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
அதிலும் குறிப்பாக ஐடி ஊழியர்களுக்கு இந்த அழுத்தம் சகட்டு மேனிக்கு அதிகரித்து இருக்கிறது. இப்படி ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை பறி போகும் நிலை இருக்கிறது என்றால், புதிதாக எப்படி வேலை வாய்ப்புகள் உருவாகும்.
இப்போது ஐடி கம்பெனிகளில் வேலைக்குச் சேர வேண்டுமென்கிற கனவோடு, கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களின் கனவு என்ன ஆவது? அதைத் தான் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
வேலை வாய்ப்பு
இந்தியாவில், நமக்கு அறிவு தெரிந்த காலம் முதல், ஒருவர் நன்றாக படிக்க வேண்டும். நல்ல சம்பளத்தில் வேலைக்குச் சேர வேண்டும். அதன் பிறகு வீடு வாசல், கார், கல்யாணம், குழந்தை என வாழ்கையில் செட்டிலாகிவிட வேண்டும். இது தான் ஒரு சராசரி இந்தியரின் கனவு. இந்த கனவின் முதல் படி நல்ல வேலை.
இப்போது மிகவும் சிரமம்
கல்லூரிகளில் படித்துக் கொண்டு இருக்கும் மாணவர்களில், கணிசமானவர்கள் கேம்பஸ் இண்டர்வியூ வழியாக கம்பெனிகளுக்கு செல்வார்கள். இப்போது கம்பெனிகள் கேம்பஸ் இண்டர்வியூக்களுக்குச் செல்ல முடியாமல் இருக்கிறார்கள். அதையும் மீறி கேம்பஸ் இண்டர்வியூ சென்றாலும் முந்தைய ஆண்டுகளில் மாணவர்களை தேர்வு செய்ததைப் போல, இந்த ஆண்டில் தேர்வு செய்து வேலைக்கு எடுப்பார்களா என்பது சந்தேகம் தான்.
நடைமுறை சிக்கல்
அதை எல்லாம் மீறி, ஐடி கம்பெனிகள் ஏற்கனவே வேலைக்கு தேர்வு செய்த மாணவர்கள் கூட, வேலையில் சேர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் கல்லூரி தேர்வுகள். தேர்வுகள் நடைபெறததால், வேலையில் சேர முடியவில்லை. ஜூன் மாத வாக்கில் தேர்வு முடிவுகள் எல்லாம் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் தற்போது கல்லூரிகளில் தேர்வு நடப்பதே இங்கு கேள்விக் குறியாக இருக்கிறதே?
சில தனியார் கல்லூரிகள்
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கூடுதலாக இன்னொரு பிரச்சனையும் சேர்ந்து இருக்கிறது. சில தனியார் கல்லூரிகள், தங்கள் மாணவர்களுக்கு, அடித்துப் பிடித்து ஆன்லைனில் தேர்வுகளை எல்லாம் நடத்தி தேர்வு முடிவுகளையே அறிவித்து விட்டார்கள் என்கிறது தி இந்து நாளிதழ். அப்படிப்பட்ட பெரிய தனியார் கல்லூரிகளில் யாராவது கேம்பஸ் இண்டர்வியூக்களில் தேர்வு செய்யப்பட்டு இருந்தால் அவர்கள் வேலைக்கு சேர்ந்து விடுகிறார்களாம்.
மற்ற கல்லூரி மாணவர்கள் பாவம்
ஆனால் மற்றா தனியார் & அரசு கல்லூரிகளில், ஆன்லைனில் தேர்வு நடத்த முடியாமல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே மற்ற அரசு & தனியார் கல்லூரிகளில் இருந்து ஐடி கம்பெனிகளில் வேலைக்குத் தேர்வானவர்கள் கூட, தேர்வு நடக்காததால் வேலையில் சேர முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்களாம். ஒரு ஐடி கம்பெனி, ஒரு இளைஞருக்கு வேலை வாய்ப்பு கொடுத்த பின், சொன்ன தேதியில் வந்து வேலைக்கு சேரவில்லை என்றால், வேறு ஆட்களை தேர்வு செய்துவிடலாம் என்று தானே நினைப்பார்கள்..?
ஐடி கம்பெனிகள்
ஒரு சில ஐடி கம்பெனிகள், கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு, வேலையில் சேர கால அவகாசம் கொடுத்து இருக்கிறார்களாம். பல ஐடி கம்பெனிகள், என்ன செய்யப் போகிறார்கள் என்கிற திட்டத்தையே இன்னும் வெளிப்படையாகச் சொல்லவில்லையாம். கிட்டத்தட்ட மாணவர்களை ஒரு பயத்திலேயே வைத்திருக்கிறது ஐடி கம்பெனிகள். இதில் ஐடி கம்பெனிகள் மீது வருத்தப்பட ஒன்றும் இல்லை.
சூழல் மோசம்
ஏற்கனவே கொரோனாவால், பழைய படி, ஐடி கம்பெனிகளில் ஆட்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என கை விரித்துவிட்டார்கள் ஐடி கம்பெனிகள். சொல்லப் போனால் தற்போது வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கே வேலை நீடிக்குமா எனத் தெரியவில்லை. இந்த சூழல், நம் கல்லூரி மாணவர்களுக்கு வேலை கிடைப்பதே பெரிய விஷயம்.
அரசு கவனத்துக்கு
அந்த வேலை வாய்ப்பும் தேர்வு நடத்த முடியாததால் இளைஞர்களின் கைகளில் இருந்து பறி போனால் அவர்கள் என்ன தான் செய்வார்கள். அரசு தான் இதை கொஞ்சம் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தேர்வு நடக்காத மற்ற தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது வெறுமனே தேர்வு சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, லட்சக் கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது.