டெல்லி: இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா தாக்கத்தினை அடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மக்கள் பின்பற்ற வேண்டிய விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு கடந்த புதன்கிழமையன்று வெளியிட்டுள்ளது.
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 14-ம் தேதி முடிவடைந்த ஊரடங்கினை, வரும் மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
சில தளர்வு
இதற்கிடையில் தான் பொதுமக்களுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஏப்ரல் 20-ம் வரை ஊரடங்கு விதிமுறைகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும். பின் ஏப்ரல் 20-க்கு பிறகு சில கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்த அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளன.
50% ஊழியர்களுடன் அனுமதி
அதிலும் ஐடி நிறுவனங்களுக்கும், ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள், இ-காமர்ஸ் நிறுவனங்கள் என சில நிறுவனங்களுக்கு அரசின் வழிகாட்டுதல் படி அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனங்கள் 50% வரை ஊழியர்களை வைத்து பணி புரிய அனுமதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ஊழியர்களின் போக்குவரத்து சேவைகளை சம்மந்தப்பட்ட நிறுவனங்களே உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வளர்ச்சிக்கு முக்கிய தேவையாகும்
டிஜிட்டல் பொருளாதாரம் என்பது சேவை துறையில் முக்கியமானது ஆகும். அது மட்டும் அல்ல இது தேசிய வளர்ச்சிக்கு தேவையான ஒன்றாகும். இ-காமர்ஸ் துறை செயல்பாடுகள், ஐடி மற்றும் ஐடி துறைகள் செயல்படுத்தப்பட்ட சேவைகளின் செயல்பாடுகள், அரசு நடவடிக்கைகளுக்கான தரவு மற்றும் அழைப்பு மையங்கள், ஆன்லைன் கற்பித்தல், தொலைத்தூரக் கற்றல் அனைத்தும் இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஐடி துறைக்கு அனுமதி
ஐடி துறை மற்றும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் முதல் பூட்டுதல் போது, ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்தன. இந்த நிலையில் தற்போது அரசின் வழிகாட்டுதல் படி, இரண்டாவது கட்டத்தில் ஏப்ரல் 20க்கு பிறகு 50% ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆய்வாளர்கள் கருத்து
இதே நாஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நாட்டில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த விதிகப்பட்டுள்ள லாக்டவுனை தொடர்ந்து, பிபிஎம், ஜிசிசி மற்றும் ஐடி துறையின் சில பகுதிகள் அதிகபட்சம் 70% திறனுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையினால் சில பகுதிகளில் இன்னும் திறம்பட செயல்பட முடியும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவர்களுக்கும் அனுமதி
ஐடி துறை மட்டும் அல்ல, ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சு வேலை, மெக்கானிக் தொழில் செய்வோர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி உள்ளிட்ட தொழில்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கட்டுமானத்திற்கு அனுமதி
மேலும் கட்டுமானப் பணிகள் நடைபெற அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் தங்களது பணிகளைத் தொடரலாம். ஆனால், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும். ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.
மருந்து தயாரிப்புக்கு அனுமதி
மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க மத்திய அரசு தொடர்ந்து அனுமதி. மேலும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் ஏப்ரல் 20 முதல் இயங்கலாம். அதே நேரத்தில் சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளை கண்டிப்பாக தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டும்.
இவற்றிற்கு எல்லாம் தடை
மக்கள் நெருக்கம் குறைவான பகுதிகளில் தொழிற்சாலைகள் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்னர் இயங்க அனுமதி. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் கனரக வாகன பழுதுபார்ப்பு கடைகள் மற்றும் அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்கள் திறக்கலாம். எனினும் மே 3ம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.