நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான மைண்ட்ட்ரீ மூன்றாவது காலாண்டில் வலுவான வளர்ச்சி விகிதத்தினை சுட்டிக் காட்டியுள்ளது.
இதற்கிடையில் வலுவான ஒப்பந்தங்களையும் போட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. உலகம் தற்போது ,மற்றொரு கொரோனாவின் அலையின் மத்தியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் வந்துள்ளது.
இந்நிறுவனம் அட்ரிஷன் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. இது இந்த நெருக்கடியான காலகட்டத்தில் கவலையளிக்கும் ஒரு விஷயமாகவும் மாறியுள்ளது. இந்த நிலையானது அடுத்து வரும் சில காலாண்டுகளுக்கும் நீடிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
தேவை அதிகரிப்பு
சர்வதேச அளவில் பரவி வரும் ஒமிக்ரான் தாக்கம் மத்தியில், பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது மேம்படுத்தப்பட்டு வருகின்றது. ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆக டிஜிட்டல் தேவையானது கூடியுள்ளது. பலரும் தங்களது வணிகத்தினை டிஜிட்டல் மயமாக்கி வருகின்றனர். இதற்கும் டிஜிட்டல் தேவையானது அதிகரித்துள்ளது. இவற்றை எல்லாம் பாதுகாக்க, சைபர் செக்யூரிட்டிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது.
அட்ரிஷன் விகிதம் அதிகரிப்பு
இதனால் சர்வதேச அளவில் ஐடி நிறுவனங்கள் பெரும் அளவிலான ஒப்பந்தங்களை செய்துள்ளன. இந்த ஒப்பந்தங்களை சரியான காலகட்டத்தில் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஊழியர்களின் தேவையானது பெரும் அளவில் அதிகரித்துள்ளது. நிறுவனங்கள் திறனுள்ள ஊழியர்களை பணியமர்த்த அதிகளவிலான சம்பளம் என பல ஆஃபர்களை கொடுத்து பணியமர்த்திக் கொண்டு வருகின்றன. இதனால் ஊழியர்கள் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் போக்கு அதிகரித்துள்ளது.
ஒப்பந்தம் அதிகரிக்கலாம்
இதற்கிடையில் தொடர்ந்து பரவி வரும் ஒமிக்ரான் மத்தியில் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக ஒப்பந்தங்கள் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஏற்கனவே கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளதாகவும், இந்த போக்கு இன்னும் சிறிது காலத்திற்கு தொடரலாம் என எதிர்பார்ப்பதாகவும் மைண்ட் ட்ரீ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாற்றங்கள்
இதற்கிடையில் தற்போது கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நிறுவனம் தனது உள்கட்டமைப்புகளிலும் சில மாற்றங்களை சில இடங்களில் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரில் எதிர்கால தேவைக்காக ஒரு புதிய அலுவலகத்தினை நிறுவி வருவதாகவும், இது விரைவில் திறக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெக் மகேந்திராவின் திட்டம்
இதேபோல டெக் மகேந்திரா நிறுவனமும் கோயம்புத்தூரில் தனது அலுவலகத்தினை திறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது கொரோனாவின் மத்தியில் பல்வேறு ஐடி நிறுவனங்களும், ஐடி சார்ந்த நிறுவனங்களும் டயர் 2 நகரங்களில் தங்களது அலுவலகங்களை தொடங்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோயம்புத்தூர் பக்கம் திரும்பும் ஐடி நிறுவனங்கள்
இப்படி டயர் 2 நகரங்களில் திறக்கப்படும் பட்சத்தில் டயர் 2 நகரங்கள் இன்னும் பெரும் வளர்ச்சி காண உதவிகரமாக இருக்கும் எனலாம். குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி நிறுவனங்களின் கவனம் தமிழகத்தில் கோயம்புத்தூரின் பக்கம் திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.