உலக பொருளாதாரத்தில், ஒரு புதிய ரத்தத்தைப் பாய்ச்சிய துறைகளைப் பட்டியலிட்டால், அதில் நிச்சயம் ஐடி துறைக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
ஐடி துறையில் நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தை லே ஆஃப். இந்த கொரோனா பேரிடர் காலத்தில், ஐடி ஊழியர்கள் அதிக மன சிக்கலுக்கு உள்ளான விஷயம் லே ஆஃப் தான்.
ஒரு சில கம்பெனிகளில் வெறும் 120 நிமிடங்கள் மட்டுமே கால அவகாசம் கொடுத்து லே ஆஃப் செய்யப்பட்ட செய்திகளை எல்லாம் படித்தோம்.
நிலைபடுத்திக் கொண்ட கம்பெனிகள்
இந்த கஷ்ட காலம் எல்லாம் நீங்கி, தற்போது ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள் எல்லாம் கொடுக்கும் அளவுக்கு தன்னை நிலைப்படுத்திக் கொண்டது இந்திய ஐடி துறை. ஆம், இந்திய ஐடி துறையில் மெல்ல பதவி உயர்வுகளைக் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அதைப் பற்றித் தான் நம் இங்கு பார்க்கப் போகிறோம்.
பதவி உயர்வுகள்
விப்ரோ கம்பெனி, தன் ஊழியர்களுக்கு இந்த டிசம்பர் முதல் பதவி உயர்வுகளைக் கொடுக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறது. டிசிஎஸ் தேர்ந்தெடுத்து பதவி உயர்வுகளைக் கொடுக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறது. காக்னிசண்ட் கம்பெனி, தன் ஊழியர்களுக்கு அக்டோபர் முதல் பதவி உயர்வு கொடுக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறது. இன்ஃபோசிஸ் பதவி உயர்வு கொடுப்பது பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
வியாபாரம் ஓகே
இப்படி பதவி உயர்வு கொடுக்க என்ன காரணம்? ஐடி கம்பெனிகளின் வியாபாரம் சிறப்பாக இருக்கிறதாம். உதாரணத்துக்கு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) கம்பெனியின் ஆர்டர் புத்தகம், ஜூன் 2020 காலாண்டில் 6.9 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது. டிசம்பர் 2019-ல் 6 பில்லியன் டாலராக இருந்தது தற்போது அதிகரித்து இருக்கிறதாம்.
வருவாய் உயர்வு
இதே டி சி எஸ் கம்பெனியின் கன்சாலிடேடட் வருவாய் கடந்த ஜூன் 2020 காலாண்டில் 38,322 கோடி ரூபாய். ஜூன் 2019-ல் வருவாய் 38,172 கோடி ரூபாய். இன்ஃபோசிஸ் கம்பெனி, இதே ஜூன் 2020 காலாண்டில் 23,665 கோடி ரூபாயை கன்சாலிடேடட் வருவாயாக ஈட்டி இருக்கிறது. ஜூன் 2019-ல் 21,803 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தக்க வைத்துக் கொள்ள வேண்டும்
கம்பெனியில் சிறப்பாக பணியாற்றியவர்களை ஊக்குவிக்க வேண்டும், அவர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு தான் பதவி உயர்வுகளை அறிவித்து இருப்பதாக சில மனித வள மேம்பாட்டுத் துறை சார்ந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். தற்போது ஐடி கம்பெனிகளில், நல்ல திறன் வாய்ந்தவர்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
யாருக்கு பதவி உயர்வு
முன்பே சொன்னது போல, ஐடி கம்பெனிகள் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் ஊழியர்கள் மற்றும் அபரிவீதமாக வேலை பார்த்த, அசாத்திய திறமை வாய்ந்த ஊழியர்களுக்கு மட்டுமே ஐடி கம்பெனிகள் பதவி உயர்வுகளைக் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறது மணி கண்ட்ரோல் வலைதளம்.
எவ்வளவு சம்பளம் அதிகரிக்கலாம்
ஐடி கம்பெனிகளில் சம்பள உயர்வு பெறும் ஊழியர்கள், சராசரியாக 5 சதவிகிதம் தான் சம்பள உயர்வு பெறுகிறார்களாம். மேலே சொன்னது போல அபரீவிதமாக உழைத்த ஊழியர்களுக்கு 10 - 15 சதவிகிதம் சம்பள உயர்வு கொடுக்கப்படலாம் என்கிறது மணி கண்ட்ரோல் வலைதளச் செய்திகள்.