கொரோனா வைரஸால், உலக பொருளாதாரத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டு இருக்கிறது. கொரோனாவால் வியாபாரம் வளரவில்லை. ஸ்தம்பித்துவிட்டது.
எனவே குட்டி குட்டி கம்பெனிகள், ஸ்டார்ட் அப் கம்பெனிகள் தொடங்கி, இண்டிகோ, கோ ஏர், பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்ற பெரிய பெரிய கம்பெனிகள் கூட லே ஆஃப் முதல் சம்பளம் கட் வரை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அது சரி, ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு வரும் பிரச்சனை தானே பரவா இல்லை என்றால், புதிதாக வேலைக்கு எடுப்பதையும் இந்த கொரோனா பாதித்து இருக்கிறது. எப்படி?
புதிய நபர்கள்
ஒரு கம்பெனியில் புதிதாக வேலைக்கு எடுப்பது, ஏற்கனவே புதிதாக வேலைக்கு தேர்வானவர்களை, கம்பெனியில் வேலைக்குச் சேரச் சொல்வது என எல்லாவற்றிலும், இந்த கொரோனாவால் தடை ஏற்பட்டு இருக்கிறது. அவ்வளவு ஏன்... ஐஐடி ஐஐஎம் கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு கொடுத்த வேலை வாய்ப்புகளைக் கூட, பல கம்பெனிகள் திருப்பி வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
ஐடி கம்பெனிகள்
ஆனால் சில ஐடி கம்பெனிகள் தங்கள் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு தேர்வானவர்களை, சொன்ன படி பணியில் எடுத்துக் கொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதுவும் கொரோனா லாக் டவுன் காலத்திலும், சொன்ன படி வேலையைக் கொடுப்பது எல்லாம் உண்மையாகவே பெரிய விஷயம் தானே..! அப்படி வேலை கொடுக்கும் நிறுவனங்களின் விவரங்களைத் தான் பார்க்கப் போகிறோம். டிசிஎஸ்-ல் இருந்து தொடங்குவோம்.
டிசிஎஸ்
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி கம்பெனியான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், சுமார் 40,000 பேரை தேர்வு செய்து இருக்கிறார்களாம். அத்தனை பேரையும் வேலையில் எடுத்துக் கொள்ள இருப்பதாகச் சொல்லி இந்திய இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை வெளிச்சத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். அதோடு லே ஆஃப்-ம் செய்யமாட்டோம் எனச் சொல்லி பழைய ஊழியர்களுக்கும் நிம்மதி கொடுத்து இருக்கிறார்கள்.
கூகுள்
உலக புகழ்பெற்ற கூகுள் சர்ச் இன்ஜினின் தாய் நிறுவனம் தான் அல்ஃபபெட் (Alphabet). இந்த கம்பெனியே, இந்த 2020-ம் ஆண்டில் சில முதலீடுகளை பின் வாங்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள் என்றால் கொரோனாவின் படு பயங்கரமான பொருளாதார தாக்குதலை புரிந்து கொள்ள முடிகிறது. முதலீடுகள் பின் வாங்குவதை ஆட்களை புதிதாக வேலைக்கு எடுப்பதில் இருந்து தொடங்கி இருக்கிறார்கள்.
சுந்தர் பிச்சை
"கூகுள் நிறுவனத்தில், கணிசமாக புதிய நபர்களை வேலைக்கு எடுப்பதை குறைக்க வேண்டிய நேரம் இது என நம்புகிறோம். இருப்பினும், ஒரு சில முக்கிய துறைகளில் ஆட்களை வேலைக்கு எடுப்போம்" என நம் கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சையே ஒரு மெமோவில் சொல்லி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
வேலையில் சேர்தல்
வேலைக்கு புதிதாக ஆட்களை எடுப்பதை குறைப்பதுடன், வேலைக்குத் தேர்வானவர்களையும், கம்பெனியில் வேலைக்குச் சேர்வதை கொஞ்சம் தாமதப்படுத்த இருக்கிறார்களாம். ஆனால் இப்போது வரை தாமதப்படுத்தத் தொடங்கவில்லை என, கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் (Spokes person) உறுதி செய்து இருக்கிறார். ஒரு சில மாதங்கள் தாமதமானால் கூட சொன்ன படி வேலை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை, ஓரளவுக்கு இளைஞர்களை வாழ வைத்துவிடுமே!
மற்ற நிறுவனங்கள்
இந்த வரிசையில் டாப் ஐடி நிறுவனங்களான Capgemini, Accenture, Wipro, Cognizant போன்ற கம்பெனிகள் இந்த நிதி ஆண்டிலும் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்க இருக்கிறார்களாம். ஏற்கனவே பணிக்குத் தேர்வானவர்களையும் வேலையில் சேர்த்துக் கொள்ள இருப்பதாக பிசினஸ் இன்சைடர் வலை தளம் சொல்லி இருக்கிறது.
வாழ்த்துக்கள்
படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், இளைஞர்கள், தங்கள் எதிர்காலத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிதைந்துவிடும். அந்த நம்பிக்கையை சிதைக்காமல், அவர்களை இந்த கடுமையான சூழலிலும் வேலைக்கு எடுக்கும் ஐடி கம்பெனிகளுக்கு மன மார்ந்த வாழ்த்துக்கள்.