நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்கள் இன்றைய காலகட்டத்தில் எதிர்கொண்டு வரும் சவாலான பிரச்சனைகளில் ஒன்று அட்ரிஷன் விகிதம். இதனை குறைவாக வைத்துக் கொள்ள நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை ஊழியர்களுக்காக அறிவித்து வருகின்றன.
ஆனால் அது எதுவும் கைகொடுத்ததாக தெரியவில்லை. ஏனெனில் தற்போது வரையில், நிறுவனங்களின் அட்ரிஷன் விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
நிறுவனங்கள் தொடர்ந்து ஒரு புறம் பணியமர்த்தலை செய்து வந்தாலும், அதே அளவுக்கு வெளியேறும் விகிதமும் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் ஊழியர்களுக்காக அதிகளவு செலவிடும் நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
அதிக கட்டணம்
ௐமிக்ரான் பரவலுக்கும் மத்தியில் டிஜிட்டல் தேவையானது அதிகரித்து வருகின்றது.இதனால் ஐடி நிறுவனங்களுக்கு பல மிகப்பெரிய ஒப்பந்தங்களும் கிடைத்து வருகின்றன. இதனையடுத்து தான் திறனுள்ள பணியாளர்களை பணியமர்த்த ஐடி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன. இதுவரையில் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள பல விதங்களில், வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக சேவை செய்து வந்த நிறுவனங்கள், தற்போது தங்களது வாடிக்கையாளர்களிடம் டிஜிட்டல் ஒப்பந்தங்களுக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்க தொடங்கியுள்ளன.
அதிக செலவு
இது ஐடி துறையில் நிலவி வரும் திறமை போருக்கு மத்தியில், ஐடி நிறுவனங்கள் திறமையானவர்களை தக்க வைத்துக் கொள்ளவும், திறமையானவர்களை பணியில் அமர்த்தவும் ஆகும் செலவினை, இப்படி வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்ய தொடங்கி விட்டன.
நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களில் டிசம்பர் காலாண்டில், மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு அட்ரிஷன் விகிதத்தினை தொட்டுள்ளன.
இன்ஃபோசிஸ் கருத்து
விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், டிஜிட்டல் மாற்றத்தினை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள், குறிப்பாக வங்கி, நிதிச் சேவைகள், இன்சூரன்ஸ் தொடர்பான நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் சூழலுடன் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளன.
இது குறித்து இன்ஃபோசிஸ் CFO நிலஞ்சன் ராய் கூறுகையில், புதிய ஒப்பந்தங்களுக்கு விலை நிர்ணயம் செய்ய தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் இதற்கு இன்னும் கொஞ்சம் காலம் எடுக்கும். ஒட்டுமொத்த துறையும் இதே போன்ற மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விப்ரோவின் கருத்து
இதே விப்ரோவின் தலைமை நிதி அதிகாரி ஜதின் தலால், நிறுவனம் சமீப காலமாக ஒப்பந்தங்களுக்கு விலை நிர்ணயம் செய்வதில் சாதகமான முன்னேற்றத்தினை கண்டு வருகின்றது. ஊழியர்களுக்கு நிலவி வரும் பற்றாக்குறைக்கு மத்தியில் , நிறுவனம் சரியான சமயத்தில் பணிகளை செய்து வருகின்றது. இது வாடிக்கையாளர் மத்தியில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது விலையில் ஒரு நேர்மறையான நிலையை உருவாக்கியுள்ளது என கூறியுள்ளார்.
மார்ஜின் விகிதம்
சமீபத்தில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக நிறுவனம், அதன் துணை ஒப்பந்தங்கள், மற்றும் ஊழியர்களுக்கு பல ஊதிய உயர்வு மற்றும் அதிகரித்த செலவினங்கள் காரணமாக, மார்ஜின் விகிதமானது குறைந்துள்ளது. குறிப்பாக சம்பள உயர்வு, லேட்டரல் பணியமர்த்தல் உள்ளிட்ட பல காரணங்களுக்கு மத்தியில் அதன் செயல்பாட்டு மார்ஜின் 17.6% ஆக உள்ளதாகவும், இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மார்ஜின் விகிதம் 23.5% ஆக உள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. எப்படியிருப்பினும் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் அதன் வருவாய் அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கையில் உள்ளன.
டிசிஎஸ் கருத்து
இதே டிசிஎஸ் நிறுவனத்தின் CFO சமீர் செக்ஸாரியா, விலை நிர்ணயம் என்பது அதிகரிக்கலாம் ('stable with an upward bias') என்று கூறியுள்ளார். புதிய சேவைகள் அதிக விலை கொண்டவை. குறிப்பாக புதிய டிஜிட்டல் ஒப்பந்தங்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்படலாம். ஆனால் முந்தைய வாடிக்கையாளர்களுக்கு அதே விலையில் கட்டணத்தில் சேவை செய்ய வேண்டியிருக்கும். நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக கட்டணத்தை அதிகரிக்க முடியாது. அதற்கு ஒரு வழிமுறை தேவை என கூறியுள்ளார்.
ஜாக்பாட் தான்
எது எப்படியோ ஐடி துறையில் உருவாகியுள்ள திறனுக்கான போருக்கு மத்தியில், விரைவில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு செய்யும் ஒப்பந்தங்களில் விலையினை அதிகரிக்கலாம். இதன் மூலம் நிறுவனங்களுக்கு வருவாய் அதிகரிக்கலாம். ஆக வழக்கம்போல வரவிருக்கும் ஆண்டுகளிலும், ஊழியர்களுக்கு நடப்பு ஆண்டினை போலவே சம்பள உயர்வு மற்ற சலுகைகள் இருக்கலாம். அதேபோல தேவையும் அதிகரித்து வரும் நிலையில் பணியமர்த்தலும் அதிகரிக்கலாம். மொத்தத்தில் திறமையான ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.