கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும் விடுமுறை அல்லது வீட்டிலேயே இருந்து பணியாற்ற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் துறையில் இருக்கும் அனைத்துத் தரப்பு நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் உற்பத்தித் துறையில் இருக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சேவையில் இருக்கும் பல துறை நிறுவனங்கள் இணையம் மூலம் இயங்கும் வசதி உள்ளதால் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது, இதில் முக்கியமாக ஐடி துறை.
ஆனால் கொரோனா கொடூரமாகப் பரவி வரும் இந்தச் சூழ்நிலையிலும் சில ஐடி நிறுவனங்களில் சில ஊழியர்களுக்கு மட்டும் work from home ஆப்ஷன் கொடுக்க முடியாது என நிர்வாகம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
ஐடி நிறுவனங்கள்
இந்தியாவின் முன்னணி 2 ஐடி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) தங்கள் சமூக வலைதளத்தில், நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பை தவிர்க்க லாக்டவுன் செய்யப்பட்டாலும் எங்களது சில ஊழியர்கள் கண்டிப்பாக அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ்
டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ ராஜேஷ் கோபிநாத் மற்றும் இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் தங்களது சமூக வலைத்தளத்தில், பல முன்னணி நாடுகளின் வங்கி சேவை நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், அரசு சேவைகள், பொதுமக்கள் சேவை எனப் பல முக்கியமான சேவைகளை எங்களது நிறுவனம் தான் நிர்வாகம் செய்து வருகிறது. இச்சேவைகளை எவ்விதமான தடையும் இல்லாமல் நிர்வாகம் செய்யக் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டியிருக்கும். இதைத் தவிர்க்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
டெக்லானஜி சேவை நிறுவனங்கள்
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், நாட்டின் சப்ளை செயின், ஊழியர்களின் சம்பளம் சரியான நேரத்திற்குக் கிடைக்கும் சேவை, மருத்துவ நிறுவனங்களின் ஆராய்ச்சி என அனைத்து துறையிலும் டெக்லானஜி சேவை நிறுவனங்களின் பங்கு மிகவும் அதிகம். அந்த வகையில், இவர்கள் இல்லையெனில் பல கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது தான் உண்மை.
சுருக்கமாகச் சொன்னால் பங்குச்சந்தை, நெட்பேங்கிங் சேவை, இணையச் சேவை ஆகியவை டெக்லானஜி சேவை நிறுவனங்களின் கையில் தான் உள்ளது. கோளாறு காரணமாக முடங்கினால் சரிசெய்யக் குறைந்தபட்சம் அரை நாள் ஆகும் அப்போது நாடு முழுவதும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும்.
46 நாடுகள்
மேலும் இன்போசிஸ் சலில் பாரிக் கூறுகையில், இன்போசிஸ் வர்த்தகம் செய்யும் 46 நாடுகளிலும், எங்களது ஊழியர்களையும் வர்த்தகச் சேவையும் பாதிக்காத வண்ணம் உள்நாட்டு அரசு அறிவுரைகளுடன் இயங்கி வருகிறோம் எனக் கூறியுள்ளார். மேலும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவர்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளோம். இதனால் ஊழியர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
43.6 லட்சம் ஊழியர்கள்
இந்திய ஐடி நிறுவனங்களின் 43.6 லட்ச ஊழியர்களின் 3இல் 2 பங்கு ஊழியர்களுக்குத் தற்போது வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஊழியர்கள் இந்திய ஐடி துறையின் 150 பில்லியன் டாலர் வர்த்தகத்தைப் பாதுகாக்க அலுவலகத்திற்கு வந்து பணியாற்றி வருகின்றனர்.
பயம்
ஆயிரம் இருந்தாலும் சமானிய ஊழியர்கள் மத்தியில் கொரோனா குறித்த பயம் இருக்கத்தான் செய்கிறது. இந்த பயத்தை தனிக்கும் வகையில் சில நிறுவனங்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்தால் கூடுதல் சம்பளம் கொடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. ஒரு பக்கம் ஐடி துறையின் 150 பில்லியன் டாலர் வர்த்தகத்தை காப்பாற்றினாலும் மறுபக்கம் உயிர் பயத்துடன் தான் பணியாற்றி வருகின்றனர்.