டெல்லி: கொரோனாவின் பாதிப்புக்கு பின்பு ஒவ்வொரு துறையும் குறையில்லாமல் அடி வாங்கி வருகின்றன. அதிலும் சர்வதேச சந்தைகளை சார்ந்திருக்கும் ஐடி துறையினையும் விட்டு வைக்கவில்லை இந்த கொரோனா.
ஐடி துறையினை பொறுத்த வரையில், ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார்கள் என்றாலும், தேவையான புராஜக்ட் திட்டங்கள் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
ஆக வேலை செய்வதற்கு ஆட்கள் இருந்தாலும், வேலையினைத் தான் காணவில்லை.
பணி நீக்கம் செய்யலாம்
அடுத்த மூன்று காலாண்டுகளில் உலகப் பொருளாதாரம் மேம்படவில்லை என்றால், இந்திய ஐடி நிறுவனங்கள் செலவினைக் குறைக்க வேலை குறைப்புகளை செய்ய வேண்டியிருக்கும் என்றும் தொழில் துறை அமைப்பு நாஸ்காம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் தொழில்துறைக்கான முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு திறமையான ஊழியர்களை பணிக்கு எடுக்க நிறுவனங்கள் நிர்பந்திக்கப்படலாம்.
நிச்சயம் பாதிப்பு இருக்கும்
இது குறித்து நாஸ்காமின் தலைவர் டெப்ஜனி கோஷ் (Debjani Ghosh), பொருளாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுவதால், தொடர்ந்து வணிக பாதிப்பு இருக்கும். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் செலவு குறைப்பு என்பது கட்டாயம் ஏற்படும். ஆக நிச்சயமாக குறுகிய காலத்தில் நிச்சயமாக பாதிப்பு இருக்கும். அது எவ்வளவு இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. எனினும் மிகக் குறைவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கோஷ் கூறியுள்ளார்.
பணி நீக்கம் இருக்கும்
மேலும் அடுத்த 6 -10 மாதங்களில் வணிகம் பிரச்சனையில் இருந்து மீளவில்லை எனில், சில பணி நீக்கங்கள் இருக்கும் சூழ்நிலை வரலாம். அது உயிர் வாழ்வதற்கும், மில்லியன் கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தினை உறுதி செய்வதற்கும் தேவைப்படலாம். ஐடி துறையில் தற்போது கடிமான காலத்தினை எதிர்கொண்டுள்ளது.
பல துறைகளில் பாதிப்பு
ஐடி வாடிக்கையாளர்கள் பலர் பல கடினமான நேரத்தினை எதிர்கொண்டுள்ளதால், தங்களது வணிகத்தினை மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சொல்லப்போனால் தகவல் தொழில் நுட்ப துறையானது கடினமான காலத்தில் சென்று கொண்டு இருக்கிறது. குறிப்பாக பயணம், விருந்தோம்பல், விமான போக்குவரத்து, சில்லறை விற்பனை, வாகன மற்றும் உற்பத்தி துறைகளில் உள்ள நிறுவனங்கள் கடந்த மூன்று மாதங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதெல்லாம் தாமதம்
இந்த பாதிப்பினால் அவுட்சோர்ஸிங் திட்டங்களை ரத்து செய்வதிலும், புதிய திட்டங்களை புதுப்பிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த கஷ்டங்கள் இருந்தபோதிலும் கூட, இந்த தொழில்நுட்ப துறையில் அதிகளவு வேலை குறைப்பை நாடவில்லை. தற்போது மற்ற செலவுகளை குறைத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
கேம்பஸ் இண்டர்வியூ
ஐடி துறையில் முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் ஹெ.ச்.சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ மற்றும் டெக் மகேந்திரா போன்ற நிறுவனங்கள் கல்லூரிகளில் தொடர்ந்து கேம்பஸ் இண்டர்வியூவினை நடத்த உள்ளதாகவும், இது குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், நிச்சயம் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
சம்பளம் குறைத்தல்
ஐடி நிறுவனங்களை பொறுத்த வரையில் திறமைமிக்கவர் மிக அவசியம். ஆக ஒரு திறமையை விடுவிப்பது என்பது ஒரு நிறுவனம் எடுக்கும் கடினமான முடிவு ஆகும். ஆக நிறுவனங்கள் வேலைகளை சேமிக்க சம்பளங்களைக் குறைத்தல் உட்பட அனைத்து வகையான நடவடிக்கைகளையும் முயற்சி செய்து வருகின்றன.
பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராகலாம்
இந்த தொழில் துறை அமைப்பின் படி, மே மாத இறுதிக்குள் சுமார் 10 சதவீத ஊழியர்கள் அலுவலகலத்தில் இருந்து பணியில் ஈடுபட வாய்ப்புள்ளது. இது ஜூன் மாதத்தில் 15 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளது.
ஆக ஐடி துறையானது மேற்கொண்டு இனி வரும் மாதங்களில் இன்னும் பிரச்சனைகளை, எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.