பெங்களூரு: உலகமே இன்று கொரோனாவினால் அரண்டு போய் கிடக்கும் நிலையில், அதற்கு அதிகமாக பலிகிடா ஆகியுள்ளது அமெரிக்கா தான்.
அதோடு கொரோனா என்னும் அரக்கன் உலக நாடுகளூக்கிடையே நாளுக்கு நாள் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
அப்படிப்பட்ட இந்த கொரோனாவால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் ஒட்டுமொத்த தொழில் துறையும் துவண்டு போயுள்ளது எனலாம்.
செலவுகள் குறைப்பு நடவடிக்கை
அதிலும் இந்தியாவில் கணிசமான அளவில் வேலை வாய்ப்பினை வழங்கிவரும் தகவல் தொழில் நுட்ப துறையில் பெரும் பிரச்சனைகள் உருவாகியுள்ளது எனலாம். சில நிறுவனங்கள் பணி நீக்கம், சம்பள குறைப்பு, ஊதிய உயர்வு, பதவி உயர்வு நிறுத்தம் என தங்களால் முடிந்த அளவுக்கு செலவுகளைக் குறைத்து வருகின்றன எனவும் முன்னதாக கூறப்பட்டது.
ஒரு நல்ல செய்தி
அதன் பிறகு புதியதாக பணியமர்த்தலை நிறுத்தி வைப்பதாகவும் பல ஐடி நிறுவனங்கள் அறிவித்தன. அதிலும் கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்களே இப்போதைக்கு பணியமர்த்தல் இல்லை என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆக ஐடி துறையின் ஜாம்பவான்களே இப்படி இடி மேல் இடி கொடுத்து வரும் நிலையில், சிறு நிறுவனங்கள் என்ன செய்யும். அவர்களிடம் அவுட்சோர்ஸிங்க் செய்யும் நிறுவனங்கள் என்ன செய்யும்.
விரைவில் அமெரிக்காவில் செயல்பாடு தொடங்கலாம்
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவினை கட்டுப்படுத்தும் விதமாகத் தான், உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகள் முழு ஊரடங்கினை அறிவித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் என பலவும் ஊரடங்கினை அறிவித்துள்ளன. இதன் காரணமாக அங்கு சில்லறை கடைகள் என பலவும் மூடப்பட்டுள்ளன.
இந்திய நிறுவனங்களின் முக்கிய வாடிக்கையாளர்கள்
குறிப்பாக இந்தியாவின் முக்கிய வாடிக்கையாளரான அமெரிக்காவில் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில், அவை விரைவில் செயல்பாட்டுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய நிறுவனங்களின் முக்கிய வாடிக்கையாளர்களான அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பிராண்டுகள் கடைகளையும் அனைத்தும் அமெரிக்காவில் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீழ்ச்சியைக் காணலாம்
ஆக அமெரிக்காவில் ஒரு கடை மூடப்பட்டுள்ள நிலையில், இங்கு இந்திய ஐடி நிறுவனங்களில் அது எதிரொலிக்கிறது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களும் வீழ்ச்சியடைக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் முக்கியாக இன்போசிஸ் மற்றும் டாடா கன்சல்டன்ஸி, விப்ரோ ஆகியவை அமெரிக்காவின் சில்லறை வர்த்தக துறைக்கு சேவை செய்து வருகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
செலவினை குறைக்கலாம்
ஆக தற்போது அமெரிக்காவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில், அவர்கள் தற்போது மீண்டும் சேவைகளை தொடங்கினாலும் ஒட்டுமொத்த வரவு செலவு திட்டங்களையும் குறைப்பார்கள் என்றும் ஆய்வாளார்கள் கூறுகின்றனர். அதிலும் சாப்ட்வேர்களுக்காக அவர்கள் செலவிடும் தொகையையும் குறைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
திவால் நிலைக்கு தள்ளப்பட்ட நிறுவனங்கள்
இதற்கு உதாரணமாக அமெரிக்காவின் ஆடம்பர பேஷன் நிறுவனமும் சில்லறை விற்பனையாளாருமான நெய்மன் மார்க்ஸ் (Neiman Marcus), கொரோனா தொற்றினை தொடர்ந்து கடந்த வாரம் திவாலாகி விட்டதாக அறிவித்தது. மேலும் இதனால் 40க்கும் மேற்பட்ட கடைகளை மூடியதாகவும் கூறப்படுகிறது. இதை போலவே சிறப்பு ஆடை சில்லறை விற்பனையாளரான ஜே க்ரூவும் திவால் நிலைக்கு விண்ணப்பித்தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடைகள் மூடல்
அதே போல அமெரிக்காவின் சிறந்த சில்லறை விற்பனையாளர்களில் ஒருவரான கேசி பென்னியும் பல கடைகளை மூடிவிட்டதாகவும், மேலும் திவால் நிலைக்கு தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக கொரோனாவினைக் கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா மாநிலங்கள் பலவேறு வகையான கட்டுப்பாடுகள் காரணமாக நுகர்வோர் அத்தியாவசியமற்ற பொருட்கள் வாங்குவதை தவிர்த்ததால், சில்லறை வர்த்தகர்களின் ஆஃப் லைன் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பயனும் குறைவு
ஆக அவற்றில் பயன்படுத்தப்படும் முக்கிய சாப்ட்வேர்களின் பயனும் குறைந்தது. அதோடு அமெரிக்காவில் தற்போதைக்கு நிலவி வரும் நிலையில் இப்பிரச்சனையில் இருந்து மீண்டு வர அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகலாம். அவற்றில் சாப்ட்வேர்களின் பயன் 50 - 75% வரை குறையக்கூடும் என்றும் ஹெஎஃப் எஸ் ரிசர்ச்சின் தலைமை செயல் அதிகாரி பில் பெர்ஷ்ட் கூறியுள்ளார்.
இந்திய ஐடி நிறுவனங்களில் எதிரொலிக்கலாம்
இதனையடுத்து இந்த ஆண்டில் சில்லறை விற்பனையாளர்கள் பொருளாதாரத்தினை மீட்டுக் கொண்டு வரவும், செலவினைக் குறைக்கவும் ஐடி துறைக்கு செலவுகளை 50% வரைக் குறைக்ககூடும் என்றும் பில் கூறியுள்ளார். ஆக இத்தகைய செலவுக் குறைப்புகள் இந்திய நிறுவனங்களில் எதிரொலிக்கக் கூடும். அதன் விளைவு இந்திய ஐடி துறையிலும் எதிரொலிக்கும்.