சென்னை: ஐடி பூங்காங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருக்கும் நிறுவனங்கள், கிட்டதட்ட 50 நாட்களுக்கும் மேலாக கொரோனா லாக்டவுன் காரணமாக முடங்கி கிடக்கின்றன.
எப்போது அரசின் உத்தரவு வரும் மீண்டும் திறக்கலாம். மத்திய மாநில அரசுகளிடம் இருந்து ஏதேனும் அறிவிப்புகள் வந்திடாதா என்று ஏங்கி நிற்பது ஒரு புறம் இருந்தாலும், அனுமதியே கிடைத்திருந்தாலும் சில நிறுவனங்கள் செயல்பட தொடங்கவில்லை.
அதிலும் இன்று தமிழகத்தின் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக இருக்கும் சென்னையில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாடுகளுடன் அனுமதி
எனினும் தமிழகத்தின் பிற பகுதிகளில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊழியர்களை வைத்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதிலும் ஐடி நிறுவனங்களை பொறுத்தவரையில் சமூக இடைவெளியுடன், சானிடைசர், உடல் வெப்பத்தினை அறிய பயன்படும் கருவிகள் உட்பட பல பாதுகாப்பு அம்சங்களுடனும், கட்டுப்பாடுகளுடனும் அனுமதித்துள்ளது. இது ஐடி நிறுவனங்கள் மட்டும் அல்ல அனைத்து தரப்பு நிறுவனங்களுக்கும் அதே நிலை தான்.
ஐடி நிறுவனங்களுக்கு அனுமதி
மாநில அரசும் ஐடி பூங்கா மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், கிரேட்டர் கார்ப்பரேஷன் எல்லைக்குள் 10% ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதே மற்ற பகுதிகளில் 30 - 50% ஊழியர்களுடன் செயல்பட ஐடி துறை அனுமதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது0. இதனையடுத்து சில ஐடி நிறுவனங்கள் மே 11 முதல் செயல்பட தொடங்கிய நிலையில், நிறுவனங்கள் செயல்பட தொடங்கியிருந்தாலும் சில ஊழியர்களே பணிக்கு வருவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
பல வசதிகள்
சென்னையில் உள்ள ஐடி பூங்காக்களில் உள்ள நிறுவனங்களில் உடல் வெப்ப நிலையை சோதிக்கும் ஸ்கேன்கர்கள், சானிடைசர்கள் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதிலும் ஊழியர்களுக்கு பயன்படும் வகையில், தனிமைப்படுத்த பகுதிகள் என பல வசதிகளை செய்துள்ளதாகவும் அங்குள்ள மூத்த அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன?
மேலும் இதனை சென்னை கார்ப்பரேஷன் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தும் சில கண்கானிப்பு அதிகாரிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இந்த பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவ்வாறு பலவேறு வகையான வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், குறைவான ஊழியர்களே பணிக்கு வருவதாகவும் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஊழியர்களின் நலன் தான் முக்கியம்
இன்னும் பல நிறுவனங்கள் அனுமதியே கிடைத்திருந்தாலும், ஊழியர்களின் நலன் கருதி திறக்கவில்லை என்றே கூறுகின்றன. ஏனெனில் யாரேனும் ஒருவருக்கு தொற்று இருந்தால் கூட மொத்த நிறுவனமும் மூட வேண்டியிருக்கும், ஏன் ஒரு பில்டிங்கில் ஒருவருக்கு தொற்று இருந்தாலும், மொத்தமாக அந்த பில்டிங்கினையே மூட வேண்டிருயிருக்கும். மேலும் ஒரு ஊழியருக்கு இருந்தாலும், அது பலருக்கும் பரவ வாய்ப்புள்ளது.
‘செயல்பட ஆரம்பிக்கவில்லை
ஆக 80 - 90% நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கவில்லை என்றே கூறலாம். ஏனெனில் அவர்களில் ஒருவர் கூட நிறுவனத்தினை திறக்க நினைக்கவில்லை என்றும் கூறுகிறார்களாம். அதனால் இந்த மாதம் இறுதிவரையில் நிறுவனங்களை தொடங்க விரும்பவில்லை என சில நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் கூறுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தொற்று எளிதில் பரவக்கூடும்
அதிலும் சென்னையில் தான் தற்போது அதிகம் தொற்று உள்ள நிலையில், அது எளிதில் பரவுவதற்க்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், நிறுவனங்கள் மூடியே இருப்பது நல்லது. ஏனெனில் இந்த மாதம் இறுதிக்கு மேல் தாக்கம் குறைந்தால், அப்போது செயல்படத் தொடங்கலாம். இன்னும் சிலர் ஏற்கனவே வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டு தான் உள்ளோம். அதனால் பெரும் பிரச்சனை ஏதும் இல்லை என்றும் கூறி வருகின்றனராம்.