டெல்லி: கொரோனாவின் தாக்கம் மக்களை ஆட்டிப்படைத்து வரும் அதே நேரம், பொருளாதாரத்திலும் தனது பங்கிற்கு மோசமாக்கி வருகிறது.
இதற்கு சிறந்த உதாரணம் தான் கச்சா எண்ணெய் விலை. வரலாற்றில் முதன் முறையாக பூஜ்ஜியம் டாலருக்கும் கீழே, கச்சா எண்ணெய் விலையானது சென்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் எரிபொருளுக்கான தேவை குறைந்துள்ளதே என்றும் கூறப்படுகிறது.
இது எரிபொருள் துறையில் மட்டும் அல்ல, ஒவ்வொரு துறையிலும் இத்தகைய பாதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றது.
மத்திய அரசு சில தளர்வு
எனினும் தகவல் தொழில்நுட்ப துறையை பொறுத்தவரையில், அதே அளவு தாக்கம் இல்லாவிட்டாலும், நிச்சயம் தாக்கம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த நிறுவனங்கள் லாக்டவுன் முதல் முறையாக செய்யப்பட்டபோதே தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கூறின. எனினும் மே 3 வரை இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டாலும், ஏப்ரல் 20 முதல் சில துறைகளுக்கு சற்று தளர்வு அளிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியது.
மக்கள் நலனே முக்கியம்
அதாவது ஐடி நிறுவனங்கள் 50% ஊழியர்களை வைத்து தங்களது சேவையினை தொடரலாம் என்று கூறின. ஆனால் மாநில அரசுகளோ மக்கள் நலன் கருதி, ஐடி ஊழியர்களை இன்னும் அடுத்த சில வாரங்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றன. இந்த நிலையில் ஐடி துறையில் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் பிற ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து தனது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
லாக்டவுன் நீட்டிப்பு
மேலும் மே 3 வரை எந்தவித தளர்வும் இன்றி லாடவுன் கடைபிடிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் உத்திர பிரதேசம், டெல்லி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் லாக்டவுன் காலத்தில் நிறுவனங்கள் வளாகங்களை மூட வேண்டும் என்றும் கூறியுள்ளன. இதே தெலுங்கானா அரசு மே 7 வரை லாக்டவுனை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
படிப்படியாக ஊழியர்களுக்கு அனுமதி
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சிஓஓ பிரவீன் ராவ், படிப்படியாக திரும்பி வருவதே எங்கள் திட்டம். நாங்கள் அவசரப்படவில்லை, முதல் கட்டத்தில் 5% குறைவானவர்கள் மட்டுமே 3-4 வாரங்களுக்கு மீண்டும் வேலைக்கு படிப்படியாக வருவார்கள். அடுத்த 4-8 வாரங்களில் 15 -20% பேர் வேலைக்கு வருவார்கள். இப்படி படிப்படியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, வெப்ப நிலை சோதனை, பாதுகாப்பு, சமூக இடைவெளியையும் நாங்கள் பராமரிப்போம் என்றும் ராவ் கூறியுள்ளார்.
நாஸ்காம் பரிந்துரை
இதே டெக் மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து சூழ்நிலையை கண்கானித்து வருவதாகவும், அரசின் உத்தரவின் படி செயல்படுவதாகவும் அந்த நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரி தெரிவித்துள்ளார். இதே தகவல் தொழில் நுட்ப துறை அமைப்பான நாஸ்காம், 15-20% ஊழியர்களை மட்டுமே வைத்து பணியாற்ற அனுமதிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.