ஏற்கனவே ஐடி ஊழியரகள் தங்கள் வேலையை காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் இனி வருங்காலத்தில், ஐடியில் வேலை வாய்ப்புகளே கணிசமாக குறையலாம் என எச்சரிக்கும் விதத்தில், பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.
அப்படி என்ன சொல்லி இருக்கிறார்கள்? இனி ஐடியைச் சார்ந்து தானே உலகமே இயங்கும், எப்படி திடீரென ஐடி துறையில் வேலை வாய்ப்புகள் குறையும்? என பல கேள்விகள் எழுகிறதா. வாருங்கள் விடை காண்போம்.
வேலை பிரச்சனை
ஐடியில் வேலை பார்ப்பவர்கள், அடுத்த மாதம் முழுமையாக சம்பளம் வருமா? பார்த்துக் கொண்டிருக்கும் வேலை நிலைக்குமா? என்கிற பயத்திலேயே இரவும் பகலுமாக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு மத்தியில், அலுவலகத்தில் இருக்கும் கம்பெனி ஊழியர்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கும் முதல் நபர்கள் சப் காண்டிராக்டர்கள்.
சப் காண்டிராக்டர்களா
ஆம். ஒரு பெரிய ஐடி கம்பெனிக்கு 100 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பெரிய ஐடி காண்டிராக்ட் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். அதில் ஒரு கணிசமான பகுதி வேலைகளை, அந்த குறிப்பிட்ட வேலையில் நல்ல அனுபவம் உள்ள, குட்டி கம்பெனிகளுக்கு சப் காண்டிராக்ட் கொடுத்து விடுகிறது பெரிய கம்பெனி. ஆக பெரிய ஐடி கம்பெனிக்கு இன்னும் லாபம் அதிகரிக்கும். ஊழியர்கள் செலவும் குறையும்.
எதார்த்தத்தில் நடக்கிறதா?
டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற பெரிய ஐடி ஜாம்பவான்களே, சப் காண்டிராக்டர்களுக்கு கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுப்பதைப் பாருங்கள். 2019 - 20 நிதி ஆண்டில், இந்தியாவின் மிகப் பெரிய ஐடி கம்பெனியான டிசிஎஸ்-ன் மொத்த செலவு 1.19 லட்சம் கோடி ரூபாய். அதில் 10.8 சதவிகிதம் என்றால் 12,937 கோடி ரூபாயை, சப் காண்டிராக்டர்களுக்கு பேமெண்ட் செய்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
மற்ற கம்பெனிகள்
அதே போல 2019 - 20 நிதி ஆண்டில், இன்ஃபோசிஸ் கம்பெனியின் மொத்த செலவு 71,547 கோடி ரூபாய். அதில் 6,714 கோடி ரூபாயை சப் காண்டிராக்டர்களுக்கு செலவழித்து இருக்கிறார்கள். விப்ரோ தான் இருப்பதிலேயே அதிகமாக, தன் மொத்த செலவில் 20.99 சதவிகிதத்தை சப் காண்டிராக்டர்களுக்கு செலவழித்து இருப்பதாக கணக்கு சொல்கிறது பிசினஸ் ஸ்டாண்டர்ட். அதாவது விப்ரோ ஏற்கனவே, சப் காண்டிராக்டர்களுக்கு அதிக வேலைகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
முதல் வில்லன்
ஆக ஏற்கனவே, ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஊழியர்களின் வேலை வாய்ப்புகளை, குட்டி குட்டி கம்பெனிகள் சப் காண்டிராக்ட் என்கிற பெயரில் பறிக்கத் தொடங்கிவிட்டார்கள். பெரிய ஐடி கம்பெனிகளும், ஊழியர்களுக்கான செலவைக் குறைத்துக் கொண்டு, தன் லாபத்தை பெருக்கிக் கொள்ள தயாராகிவிட்டார்கள். சப் காண்டிராக்டர்களுக்கு அடுத்து, தற்போது வந்திருக்கும் பெரிய பிரச்சனை Freelancer.
புதிய பிரச்சனை
Freelancer-களா? ஆம். இவர்கள் தான் அடுத்த பிரச்சனை. ஒரு கம்பெனியில் நிலையாக வேலை பார்க்க மாட்டார்கள். ஒரு வேலையை மட்டும் முடித்துக் கொடுக்க ஒப்புக் கொள்வார்கள். அந்த வேலையை முடித்துவிட்டு, அந்த வேலைக்கான காசை கம்பெனியில் இருந்து வாங்கிக் கொண்டு அடுத்த வேலையைத் தேட ஆரம்பித்துவிடுவார்கள். இப்போது ஐடி கம்பெனிகள் இந்த Freelancer-களை வைத்து வேலை வாங்கத் தொடங்குகிறார்களாம்.
15 - 20 சதவிகிதம் Freelancer தான்
ஐடி கம்பெனிகளில், சப் காண்டிராக்டர்கள் வழியாக வேலைக்கு எடுத்துக் கொண்டு இருந்தவர்களில், 15 - 20 சதவிகித ஊழியர்களின் பணி இடங்ளை, இந்த Freelancer-கள் நிரப்பிக் கொண்டு இருக்கிறார்கள் என ஒரு பெரிய ஐடி கம்பெனியின் அதிகாரி பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகைக்குச் சொல்லி இருக்கிறார். Topcoder, GitHub, Upwork எல்லாம் இந்த Freelancer-களுக்கான கோடிங் ப்ளாட்பார்ம்கள்.
அதிகரிக்கும் Freelancer-கள்
மேலே சொன்ன கோடிங் ப்ளாட்பார்ம்களில், டெய்லி ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை படு பயங்கரமாக அதிகரித்துக் கொண்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். குறிப்பாக கொரோனா வைரஸ் பிரச்சனை வந்ததில் இருந்து ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகச் சொல்கிறார்கள் கோடிங் ப்ளாட்பார்ம் கம்பெனிகள்.
நடைமுறை
ஆக, ஊழியர்களை நேரடியாக வேலைக்கு எடுப்பதில் இருந்து, சப் காண்டிராக்டர்கள் வந்தார்கள். இப்போது சப் காண்டிராக்டர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு, Freelancer-கள் தலை எடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஆக எதிர் காலத்தில், ஐடி கம்பெனிகளில் நிரந்தர ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது மிகவும் சிரமம் என்பதை தனியாகச் சொல்லத் தேவை இல்லை.
இதைத் தான் செய்வார்கள்
இந்த Freelancer-கள் வந்த பின், முதலில் சப் காண்டிராக்டர்களுக்கு வேலை இருக்காது. அதன் பின், மெல்ல ஊழியர்களையும் வெளியே அனுப்புவார்கள் என்கிறார் அவுட் சோர்ஸிங் ஆலோசகர் & பரேக் ஜெயின் கன்சல்டிங் கம்பெனியின் நிறுவனர் பரேக் ஜெயின். என்ன இருந்தாலும் கம்பெனிகளுக்கு லாபம் தானே முக்கியம்.
இயற்கை தான்
1990-களில், இந்தியா முழுக்க கணிணிமயமானது எப்படி பலரால் ஏற்றுக் கொள்ள முடியாத கசப்பான விஷயமாக இருந்ததோ, அதே போலத் தான் இன்று Freelancer மாற்றமும். இது ஒரு எதார்த்தமான இயற்கை வியாபார மாற்றம் தான். ஆனால் எத்தனை ஐடி ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பது தான் வருத்தமான கேள்வி. ஐடி ப்ரோஸ், இப்போதே, இந்த மாற்றத்துக்கு தயாராகிக் கொள்ளுங்கள்.