ஐடி துறையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பல அதிரடியான மாற்றங்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக பணி நீக்கம், சம்பள குறைப்பு என பல மாற்றங்கள் இருந்து வருகின்றது.
குறிப்பாக சொல்லவேண்டுமெனில் கடந்த டிசம்பர் வரையில் சுமார் 40% சம்பளம் அதிகரிப்பு குறைந்துள்ளது. இது மந்த நிலை மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக தேவை குறைந்துள்ளது.
முந்தைய காலாண்டுகளில் அதிகளவிலான அட்ரிஷன் விகிதம் காரணமாக திறமையான ஊழியர்களை ஈர்பதற்காக நிறுவனங்கள், பெரும் சம்பள உயர்வைக் கொடுத்தன.
அட்ரிஷன் விகிதம்
கடந்த ஆண்டில் அட்ரிஷன் விகிதம் 25 - 30% என்ற அளவுக்கு உச்சத்தில் இருந்த நிலையில், இது டிசம்பர் காலாண்டில் சுமார் 20% ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் அட்ரிஷன் காரணமாக ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக சம்பள உயர்வானது அதிகளவில் இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் அப்படியில்லை. ஐடி தேவையானது சர்வதேச அளவில் சரிவினைக் கண்டுள்ளது.
சம்பள உயர்வு
இதன் காரணமாக ஐடி நிறுவனங்களின் ஒப்பந்தமானது குறைந்துள்ளது. இதனால் ஏற்கனவே மார்ஜின் விகிதமானது சரியத் தொடங்கி விட்டது. இதற்கிடையில் ஐடி நிறுவனங்கள் செலவு குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இதன் காரணமாக சம்பளம் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. சில நிறுவனங்கள் சம்பள உயர்வை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
சமீர் செக்ஸாரியா
எங்களின் முக்கிய சவால் என்பது அதிகளவிலான அட்ரிஷன் விகிதம் மற்றும் ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தல், துணை ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ளுதல் என பல செலவினங்களும் இருந்தன. ஆனால் தற்போதைய நிலை அப்படி இல்லை என டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சமீர் செக்ஸாரியா தெரிவித்துள்ளார்.
அட்ரிஷன் சரிவு
சிறந்த 4 ஐடி நிறுவனங்களும் முந்தைய காலாண்டுகளை காட்டிலும், அட்ரிஷன் விகிதமானது குறைந்து வருவதை பார்க்க முடிகிறது. தொடர்ந்து சர்வதேச சந்தையில் நிலவி வரும், பதற்றமான நிலைக்கு மத்தியில் பணி நீக்கம் என்பது இருந்து வருகின்றது. பல டெக் ஜாம்பவான்கள் தொடங்கி, ஸ்டார்ட் அப்கள் வரையில் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. ஆக இந்த காலகட்டத்தில் பெரியளவிலான சம்பள அதிகரிப்பு என்பது யோசிக்க வேண்டிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஏன் சரிவு?
சம்பள அதிகரிப்பு என்பது தற்போது பெரியளவில் சாதாரணமாகி விட்டன. இதில் 3 - 7 வருட அனுபவமுள்ள விண்ணப்பதாரர்களின் சம்பள எதிர்பார்ப்பு ஒரு வருடத்திற்கு முன்பு 75% உயர்வு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது தற்போது 30% பிளஸ் என்ற நிலைக்கு குறைந்துள்ளது. இது தேவை சரிவு, குறைவான வாய்ப்புகள், சம்பள ஸ்திரத்தன்மை என பலவும் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தன. இந்த நிலையில் தான் சம்பள அதிகரிப்பும் குறைந்துள்ளது.
இனியும் நீடிக்கலாம்
கடந்த டிசம்பர் 2022 நிலவரப்படி சம்பள உயர்வு 40% சரிவினைக் கண்டுள்ளது. டெக் அல்லாத நிறுவனங்களிலும் இதே நிலை தான் இருந்து வருகின்றது எனலாம். நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் ஊழியர்கள் வெளியேற்றம் என்பது கணிசமாக குறைந்துள்ளது. மொத்தத்தில் இந்த போக்கே இன்னும் சிறிது காலத்திற்கு தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக ஊழியர்களின் வெளியேற்றமும் குறையலாம். இதன் காரணமாக முந்தைய ஆண்டினை போல சம்பள அதிகரிப்பும் இருக்காது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.