உலகளவில் நிலவி வரும் மந்த நிலையால் ஐடி நிறுவனங்கள் செலவு குறைப்பு செய்து வருகின்றன. இதனால் இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களும் செலவு குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ, டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் செலவு குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்கள் சம்பள அதிகரிப்பு இல்லை. மேலும் போக்குவரத்து செலவு மற்றும் ஸ்பான்சர்சிப்களையும் குறைத்து வருகின்றன. அதோடு வீட்டில் இருந்து பணி புரியவும் அறிவுறுத்து வருகின்றன. இதனால் ஐடி நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.
பெரும் ஐடி நிறுவனங்கள் செயல்பாட்டு மூலதனத்தினை குறைத்து வருகின்றன. இதில் விப்ரோ தற்காலிகமாக விடுமுறை அளிக்க ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதே விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் தற்போதைக்கு புதிய பணியமர்த்தல் மற்றும் சம்பள அதிகரிப்பினை முடக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
டாப் ஐடி நிறுவனங்களில் சம்பள குறைப்பில் 30 சதவீதம் முதல் 54%வரை இருக்கலாம் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. இந்த நிலையில் 2020ம் நிதியாண்டில் ஹெச்சிஎல் டெக்னாலஜியின் ஊழியர்கள் செலவு 9,916 கோடி ரூபாயாகும். இது மொத்த வருவாயில் 30.4% ஆகும்.
இதே 2020ம் நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் அதன் மொத்த ஊழியர்களின் செலவு விகிதம் 64,906 கோடி ரூபாயாகும். இது அதன் வருவாயில் 49.4% ஆகும். இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 42,434 கோடி ரூபாய் ஊழியர்களின் சம்பள செலவாக இருந்துள்ளது. இது வருவாயில் 53.7% ஆகும். இதே டெக் மகேந்திராவின் மொத்த ஊழியர்களின் செலவு விகிதம் 9,282.70 கோடி ரூபாயாகும். இது வருவாயில் 31.8% ஆகும். இதே விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்களின் செலவு விகிதம் 26,171.80 கோடி ரூபாயாகும். இது அதன் மொத்த வருவாயில் 51.9% ஆகும்.
ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது மிகப்பெரிய செலவு சேமிப்பாளராக இருக்கலாம். ஆக இப்படி இருக்கையில் ஐடி நிறுவனங்கள் செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடலாம். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் செலவு அதிகரிப்பு என்பது நடக்காத ஒரு விஷயமே..