டெல்லி: பிரபல வேலைவாய்ப்பு தளமான நாக்குரி கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, கடந்த ஏப்ரல் மாதத்தில் 62% பணியமர்த்தல் வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியாக செய்தியில், நாக்குரி கணக்கெடுப்பின் படி, நாட்டில் பணியமர்த்தல் செயல்பாடு 62% வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று நோய் காரணமாக லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், நிறுவனங்களில் புதிய பணியமர்த்தல் வெகுவாக குறைந்துள்ளதாக இந்த இணைய நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோசமான பாதிப்பு
நாக்குரி கணக்கெடுப்பின் படி, ஹோட்டல்கள், உணவகங்கள், பயண நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது லாக்டவுன் காரணமாக புதிய பணியமர்த்தல் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளன. குறிப்பாக ஹோட்டல்கள், உணவகங்கள், பயண நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் 91% சரிவினைக் கண்டுள்ளதாக நாக்குரி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சற்று குறைவான தாக்கம்
இதே ஆட்டோ மற்றும் அதன் துணை நிறுவனங்களில் 82% பணியமர்த்தல் குறைந்துள்ளதாகவும், சில்லறை விற்பனை துறையில் 77% வீழ்ச்சியும், கணக்கியம் மற்றும் நிதி நிறுவனங்கள் 70% வீழ்ச்சியையும் கண்டுள்ளன. தகவல் தொழில் நுட்பம், மென்பொருள் சேவைகள், பார்மா துறை, பயோ டெக் நிறுவனங்கள், கிளினிக்கல் ரிசர்ச் மற்றும் காப்பீடு போன்ற துறைகளில் சற்று குறைவான தாக்கம் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நகரங்களில் இரட்டை இலக்க சரிவு
அதிலும் குறிப்பாக இந்த பணியமர்த்தல்கள் நகரங்களில் இரட்டை இலக்க சரிவுகளை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் டெல்லி 70% சரிவினையும், சென்னை 62% சரிவினையும், கொல்கத்தா மற்றும் மும்பை தலா 60% வீழ்ச்சியினையும் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையில் எப்படி?
இதே டெல்லியில் விருந்தோம்பல் துறையில் தேவை -97% வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், இதே கணக்கியல் துறையில் -78% வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், வங்கித் துறையில் -64% தேவை வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் நாக்குரி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதே சென்னையில் அதிகபட்சமாக விருந்தோம்பல் துறை மற்றும் ஐடி ஹார்டுவேர், ஐடி சாப்ட்வேர் துறையில் நிபுணர்களின் தேவை முறையே 98% மற்றும் 81%, 62% குறைந்துள்ளதாகவும் நாக்குரி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எந்த துறையில் எவ்வளவு?
இதே மும்பையில் ஏப்ரல் மாதத்தில் 60% பணியமர்த்தல் குறைந்ததாக கூறப்படுகிறது. அதிலும் விருந்தோம்பல் மற்றும் ஆட்டோ செக்டார் முறையே 94% மற்றும் 84% சரிந்துள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. இதே அனுபவம் அடிப்படையில் பணியமர்த்தல் சராசரியாக 61% சரிவினைக் கண்டுள்ளது. இதே முக்கிய நகரமாக கருதப்படும் பெங்களூரில் 57% பணியமர்த்தல் நடவடிக்கை சரிந்துள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
இந்த துறைகளில் கூட வீழ்ச்சி தான்
மேலும் டிக்கெட் /பயண /விமான நிறுவனங்கள் / ஹோட்டல்கள் மற்றும் மனித வள நிர்வாகத் துறைகளில் உள்ள நிபுணர்களுக்கான புதிய வேலை வாய்ப்ப்புகள் முறையே 95%, 89% மற்றும் 78% வீழ்ச்சியடைந்துள்ளன. கொள்முதல் / விநியோகச் சங்கிலி, மார்கெட்டிங் / விளம்பரங்கள், விற்பனை / வணிக மேம்பாடு மற்றூம் அக்கவுன்ட்ஸ்/ பைனான்ஸ் உள்ளிட்ட துறைகளில் 68 - 70% வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
சற்று குறைவு தான்
இருப்பினும் ஐடி சாப்ட்வேர்/பிபிஓ/ஐடி இ எஸ்/ கேபி ஓ, பார்மா/பயோடெக்/ஹெல்த்கேர் மற்றும் கற்பித்தல் துறை/ கல்வித் துறை உள்ளிட்ட பல துறைகளில், மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது பாதிப்பு குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளது. எப்படி இருப்பினும் இந்த கொரோனாவால் இருக்கும் வேலையே இருக்குமா? இருக்காதா என்ற நிலையில், புதிய வேலை வாய்ப்புகள் மட்டும் அவ்வளவு எளிதாக இருந்து விடுமா என்ன? ஆக அரசு வேலைவாய்ப்பினை அதிகரிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்கு அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.