கொரோன வைரஸ் பிரச்சனையால், பல்வேறு ஐடி கம்பெனிகளில் லே ஆஃப் பூதம் தலை விரித்தாடியதைப் பார்த்தோம்.
சில கம்பெனிகள், ஒரு சில மணி நேரம் மட்டுமே கால அவகாசம் கொடுத்து, ஊழியர்களை, வேலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பியதையும் செய்திகளில் படித்தோம்.
இப்போது மெல்ல ஐடி துறை, மீண்டும் பழைய நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் சில ஆன்லைன் மோசடிக் காரர்கள், ஐடி இளைஞர்களைக் குறி வைத்து ஏமாற்றத் தொடங்கி இருக்கிறார்கள்.
ஐடி வேலை
இந்தியாவில் இப்போது வரை பல இளைஞர்களுக்கு, நல்ல ஐடி கம்பெனியில் சேர்ந்து, வாழ்கையில் செட்டில் ஆக வேண்டும், நிறைய முன்னேற வேண்டும், என்கிற எண்ணம் இருக்கிறது. அதை சில மோசடிதாரர்கள் பயன்படுத்தி, பணம் பறிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். எப்படி மோசடி செய்கிறார்கள்.
போலி ப்ளேஸ்மெண்ட் ஏஜென்சிகள்
Information Technology Association of Andhra Pradesh (ITAAP) என்கிற அமைப்பின் தலைவர் ஸ்ரீதர் கொசராஜு இந்த மோசடி பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசி இருக்கிறார். காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் இருக்கும் சில ஐடி கம்பெனிகள், சைபர் க்ரைம் காவலர்களிடம், போலி ப்ளேஸ்மெண்ட் ஏஜென்சிக்களை குறித்துப் பேசி இருக்கிறார்களாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சொல்லி இருக்கிறார்களாம்.
எப்படி ஏமாற்றுகிறார்கள்
முதலில் இந்தியாவில் பிரபலமாக இருக்கும் வேலை தேடும் வலைதளங்களில் இருந்து, வேலை தேடி விண்ணப்பித்து இருக்கும் இளைஞர்களின் விவரங்களை பதிவிரக்கம் செய்து கொள்கிறார்கள். அதன் பின் உண்மையாகவே, ஐடி கம்பெனிகளின் ப்ளேஸ்மெண்ட் ஏஜென்சிக்களைப் போல, வேலைக்கான ஆஃபர் கடிதங்களைத் தயாரிக்கிறார்கள். இந்த ஆஃபர் கடிதங்கள், வேலை தேடி விண்ணப்பித்து இருக்கும் இளைஞர்களின் விண்ணப்பத்துக்குத் தகுந்தாற் போல் தயாரிக்கிறார்கள்.
மீண்டு வரும் ஐடி
கொரோனா வைரஸ் பிரச்சனையால், ஐடி கம்பெனிகளில், வேலைக்கு எடுப்பது தற்காலிகமாக குறைந்தது. அந்த வாய்ப்பை, போலி ப்ளேஸ்மெண்ட் கம்பெனிகள் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கி இருக்கின்றன. ஒரு நபரிடம் இருந்து 1,000 - 5,000 ரூபாய் வரை கட்டணங்களை வசூலிப்பதாகச் சொல்லி இருக்கிறார் ஸ்ரீதர்.
நடைமுறை
போலி ப்ளேஸ்மெண்ட் ஏஜென்சிகள், போலியான வேலை வாய்ப்புக்கான கடிதங்களைக் (Job Offer) கொடுக்கும் போது, போலி நேர்காணல்களை நடத்தி, பணம் பறிக்கிறார்கள். பணத்தை டிஜிட்டல் வேலட்கள் வழியாக அனுப்பச் சொல்கிறார்களாம். எல்லா வேலையும் முடிந்து, பணத்தைப் பறித்துக் கொண்ட பின், பணம் செலுத்திய இளைஞர்களின் போன் நம்பர்களை பிளாக் செய்துவிடுகிறார்களாம்.
ஜாக்கிரதை இளைஞர்களே
இந்த நெருக்கடியான கால கட்டத்தில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமங்கள் இருக்கின்றன. அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், வேலைக்காக இப்படி மோசடி செய்பவர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். யாராவது வேலை கொடுக்கிறேன், பணத்தைச் செலுத்துங்கள் என்றால், ஒன்றுக்கு பல முறை யோசித்து முடிவு செய்யுங்கள், அவசரப்பட்டு பணத்தை இழந்துவிடாதீர்கள்.