இந்திய வேலைவாய்ப்பு சந்தையானது கடந்த ஆண்டில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இது இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுக்க அப்படி தான் இருந்தது.
இந்த நிலையில் கடந்த மாதத்தில் இந்திய வேலை வாய்ப்பு சந்தையில் முக்கிய இடம் வகிக்கும் ஐடி துறையானது, வழக்கம்போல பிப்ரவரி மாதத்திலும் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப சேவையால், ஐடி துறையில் பணியமர்த்தல் அதிகரித்து வருகின்றது. அதிலும் கொரோனாவுக்கு பிறகு இந்த விகிதமானது கணிசமான வளர்ச்சியினைக் கண்டுள்ளது.
வளர்ச்சி பாதையில் ஐடி துறை
இது கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, பிப்ரவரி மாதத்தில் 33% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளதாக Naukri JobSpeak குறியீடு கூறியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, பிப்ரவரி மாதத்தில் ஒட்டுமொத்த பணியமர்த்தல் நடவடிக்கையானது 22% அதிகரித்துள்ளது. எனினும் இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது -2% வீழ்ச்சி கண்டுள்ளது.
வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு
கொரோனாவின் காரணமாக முடங்கியிருந்த தொழிற்துறைகள், தற்போது வேகமாக வளர்ச்சி காண தொடங்கியுள்ளது. இதனால் பணியமர்த்தல் விகிதமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது ஐடி துறை மட்டும் அல்ல, மற்ற முன்னணி துறைகளிலும் அதிகரித்து வருகின்றது. அது மட்டும் அல்ல, ஐடி துறையில் 88% துறையினர் வரவிருக்கும் மாதங்களில் புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்றும் உறுதிபடுத்தியுள்ளன.
மற்ற துறைகளில் எப்படி?
டிஜிட்டல் தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஐடி துறையினரின் தேவையானது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதே தொலைத் தொடர்பு துறையில் பணியமர்த்தல், கடந்த பிப்ரவரி மாதத்தில் 24% அதிகரித்துள்ளது. இதே மருத்துவம் மற்றும் சுகாதார துறையில் 28%மும், இதே கல்வி மற்றும் கல்வித்துறையில் 25% ஆகவும், வேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள் அல்லது எஃப் எம் சி ஜி பொருட்கள் துறையானது 20%மும் வளர்ச்சி கண்டுள்ளது.
நிதித்துறையில் வளர்ச்சி எப்படியுள்ளது
இதே நிதித்துறை மற்றும் இன்சூரன்ஸ், வங்கி மற்றும் நிதிசார்ந்த துறைகளில் 17% வளர்ச்சியும் கண்டுள்ளது. எனினும் இன்சூரன்ஸ் துறையில் மட்டும் குறிப்பாக பார்க்கும்போது -1%மும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த பணியமர்த்தலானது ஆறு மெட்ரோ நகரங்கள் மற்றும் டயர் 2 நகரங்களிலும் நேர்மறையான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.
தூள் கிளப்பிய மெட்ரோ நகரங்கள்
குறிப்பாக மெட்ரோ நகரங்களில் இரு இலக்க வளர்ச்சி கண்டுள்ளது, குறிப்பாக பெங்களூரில் 31%மும், இதே ஹைதராபாத்தில் 28%மும், இதே புனேவில் 24%மும், இதே அகமதாபாத்தில் 31%மும் வதோதராவில் 20% வளர்ச்சியும் கண்டுள்ளது. ஆக மொத்தத்தில் பிப்ரவரி மாதத்தில் செழிப்பான வளர்ச்சியே கண்டுள்ள நிலையில், இனி வரும் மாதங்களிலும் நல்ல வளர்ச்சி காண வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.