இந்தியாவின் ஸ்டீல் மனிதர் என்று அழைக்கப்படும் ஜாம்ஷெட் ஜே இரானி, திங்கள்கிழமை இரவு ஜாம்ஷெட்பூரில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் காலமானார் என்று டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது. ஜாம்ஷெட் ஜே இரானி-யின் வயது 85.
யார் இந்த ஜாம்ஷெட் ஜே இரானி..? இவருக்கும் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு..?
ஜாம்ஷெட் ஜே இரானி
ஜாம்ஷெட் ஜே இரானி 40 வருடங்களுக்கு மேலாக டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றியவர். ஜூன் 2011 இல் டாடா ஸ்டீல் நிர்வாகக் குழுவில் இருந்து ஓய்வு பெற்றார். சுமார் 43 ஆண்டுக் கால வாழ்க்கை, பணியை டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு அர்ப்பணித்தார்.
ஸ்டீல் மேன் ஆப் இந்தியா
டாடா குழுமத்தின் இன்றைய பிரம்மாண்ட வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது டாடா ஸ்டீல் என்றால் மிகையில்லை, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவியவர் ஜாம்ஷெட் ஜே இரானி. இதனாலேயே இவர் ஸ்டீல் மேன் ஆப் இந்தியா என செல்லமாக அழைக்கப்பட்டார்.
கல்லூரி
ஜூன் 2, 1936 இல் நாக்பூரில் ஜிஜி இரானி மற்றும் கோர்ஷெட் இரானிக்கு மகனாகப் பிறந்த டாக்டர் ஜாம்ஷெட் ஜே இரானி, 1956 இல் நாக்பூரில் உள்ள அறிவியல் கல்லூரியில் BSc மற்றும் 1958 இல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் புவியியலில் MSc பட்டப்படிப்பை முடித்தார்.
இங்கிலாந்து
இதைத் தொடர்ந்து ஜாம்ஷெட் ஜே இரானி இங்கிலாந்தில் உள்ள ஷெஃபீல்டு பல்கலைக்கழகத்திற்கு ஜே என் டாடா அமைப்பின் ஸ்காலர்ஷிப் உடன் சென்றார். இதைத் தொடர்ந்து ஜாம்ஷெட் ஜே இரானி 1960 இல் உலோகவியல் பிரிவில் முதுகலைப் பட்டமும், 1963 இல் உலோகவியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.
இந்தியா பயணம்
ஜாம்ஷெட் ஜே இரானி தனது படிப்பை முடித்த பின்பு 1963 இல் ஷெஃபீல்டில் உள்ள பிரிட்டிஷ் அயர்ன் மற்றும் ஸ்டீல் ஆராய்ச்சி சங்கத்துடன் தனது முதல் பணியைத் தொடங்கினார். சில வருடம் மட்டுமே பணியாற்றிய ஜாம்ஷெட் ஜே இரானி இந்தியாவின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தியா வந்தார்.
TISCO பணி
இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய ஜாம்ஷெட் ஜே இரானி 1968 ஆம் ஆண்டில் அப்போதைய டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் நிறுவனத்தில் (TISCO) இப்போதைய டாடா ஸ்டீல் நிறுவனத்தில் சேர முடிவு செய்தார். மேலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவின் இயக்குனரின் உதவியாளராக ஜாம்ஷெட் ஜே இரானி டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் நிறுவனத்தில் சேர்ந்தார்.
டாடா ஸ்டீல் பதவி
அவர் 1978 இல் பொதுக் கண்காணிப்பாளராகவும், 1979 இல் பொது மேலாளராகவும், 1985 இல் டாடா ஸ்டீல் தலைவராகவும் உயர்ந்தார் ஜாம்ஷெட் ஜே இரானி. 1988 இல் டாடா ஸ்டீலின் இணை நிர்வாக இயக்குநராகவும், 1992 இல் நிர்வாக இயக்குநராகவும் உயர்ந்து 2001 இல் ஓய்வு பெற்றார்.
நிர்வாகக் குழு
இதுமட்டும் அல்லாமல் ஜாம்ஷெட் ஜே இரானி 1981 இல் டாடா ஸ்டீல் நிர்வாகக் குழுவிலும் சேர்ந்தார், 2001 முதல் சுமார் 10 வருடம் Non-Executive இயக்குனராகவும் இருந்தார். டாடா ஸ்டீல் மற்றும் டாடா சன்ஸ் தவிர, டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட பல டாடா குழும நிறுவனங்களின் இயக்குநராகவும் ஜாம்ஷெட் ஜே இரானி பணியாற்றினார்.
விருதுகள்
அவர் லக்னோவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் கவர்னர்கள் குழுவின் தலைவராக இருந்தார். இரானிக்கு 1997 ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மகாராணியால் கெளரவ நைட் பட்டம் (KBE) வழங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து பத்ம பூஷன் விருதைப் பெற்றார். அவர் 1996 இல் ராயல் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் இன் இன்டர்நேஷனல் ஃபெலோவாக நியமிக்கப்பட்டார்.
கிரிக்கெட்
ஜாம்ஷெட் ஜே இரானி மற்றும் அவரது சகோதரி டயானா ஹோர்முஸ்ஜியும் ஜிஜி இரானி இணைந்து அவர்களின் தந்தையின் நினைவாகச் சேலஞ்ச் கோப்பை கிரிக்கெட் போட்டி-யை செகந்திராபாத்-ல் உள்ள ஜோரோஸ்ட்ரியன் கிளப் மூலம் நிறுவினர்.