டெல்லி: ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்குவோரின் எண்ணிக்கை 40 கோடியை கடந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதோடு இந்த வங்கிக் கணக்கில் 1.30 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்குவோர் குறைந்தபட்ச இருப்பு என எதுவும் வைக்க தேவையில்லை. இந்த திட்டத்தின் நோக்கமே மத்திய அரசின் நேரடிப் பணப்பலன் பரிமாற்றம் நிதியுதவி நேரடியாகச் சென்று சேர வேண்டும் என்பதே.
இந்த நிலையில் இந்த திட்டத்தின் மூலம் இதுவரையில் 40.05 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 1.30 லட்சம் கோடிக்கு அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சகத்தின் கீழ் வரும் நிதிச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த திட்டமானது ஆகஸ்ட் 28, 2014 அன்று தொடங்கப்பட்ட நிலையில், வெற்றிகரமாக ஆறு ஆண்டுகள் முடிவடையவுள்ளது. இந்த திட்டமானது வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், கடந்த 2018ம் ஆண்டில் ஆகஸ்ட் 28ம் தேதி வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு விபத்துக் காப்பீடு 1 லட்சத்திலிருந்து, 2 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
எல்லாவற்றையும் விட இந்த திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கின் மூலம் பணம் இல்லாமலேயே 10,000 ரூபாய் ஓவர் டிராப்ட் பெறும் வசதியும் உள்ளது. இந்த கணக்கு வைத்திருப்பவர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் ஆகும்.
இதோடு அரசு பிரதான் மந்திரியின் கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் மூலம் மூன்று முறையாக 1,500 ரூபாய் டெபாசிட் செய்துள்ளது. இது கொரோனா காலத்தில் ஏழ்மையில் தவித்து வரும் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 26 முதல் மூன்று மாதங்களுக்கு மாதம் 500 ரூபாயாக மூன்று மாதங்களுக்கு கொடுத்துள்ளது.
ஆக மொத்தத்தில் இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு வகையான சலுகைகளையும் அறிவித்து வருகிறது. உண்மையில் இது அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களை நேரடியாக சென்றடையும். இதன் மூலம் மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் விரைவாகவும் சரியாகவும் சென்றடையும்.