கச்சா எண்ணெய் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் நிலையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது எலக்ட்ரிக் வாகனங்கள் திட்டத்தை வேகப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே பல முன்னணி மற்றும் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் கார்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக எலகட்ரிக் கார்கள் தயாரிப்புக்கு மாறி வரும் நிலையில் ஜப்பான் நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா மிக முக்கியமான மற்றும் பிரம்மாண்ட திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டம் மூலம் இந்தியா எந்த அளவிற்குப் பயன்பெறப் போகிறது..?
ஹோண்டா மோட்டார்ஸ்
ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார்ஸ் அடுத்த 10 வருடத்தில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (R&D) திட்டத்தில் மட்டும் சுமார் 8 டிரில்லியன் யென் அதாவது 64 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்ய உள்ளது.
30 எலக்ட்ரிக் கார்
ஹோண்டா நிறுவனம் 2030க்குள் புதிதாக 30 எலக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த மாபெரும் திட்டத்திற்கு இப்புதிய முதலீட்டுத் திட்டம் ஹோண்டா நிறுவனத்திற்குப் பெரிய அளவில் உதவும்.
டெஸ்லா
ஜெர்மனி நிறுவனங்களைப் போலவே கார் உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள், எலக்ட்ரிக் கார்களின் எழுச்சியைச் சரியாகக் கணிக்காத நிலையில், பெரும் பகுதி எலக்ட்ரிக் வாகன சந்தையைத் தற்போது டெஸ்லா நிறுவனத்திடம் இழந்துள்ளது.
முதலீடு, உற்பத்தி
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவும், மீண்டும் ஆட்டோமொபைல் துறையில் ஹோண்டா ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும் 2030க்குள் புதிதாக 30 எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வது மட்டும் அல்லாமல் வருடத்திற்கு 20 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் அளவிற்குத் தனது கட்டமைப்பை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
64 பில்லியன் டாலர் முதலீடு
தற்போது அறிவித்துள்ள 64 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்தில் பெரும் பகுதி தொகை தனது ஆஸ்தான மாடல் கார்களை எலக்ட்ரிக் வாகனங்களாக மற்றவும், தொழில்நுட்ப மேம்பாடுகளில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டரி
இதோடு தற்போது எலக்ட்ரிக் கார்களில் புதுமை, எதிர்காலம் எனப் போற்றப்படும் solid-state battery-ஐ தயாரிக்கச் சுமார் 64 பில்லியன் யென் அளவிலான முதலீட்டை செய்ய முடிவு செய்துள்ளது. solid-state battery தயாரிப்புப் பணிகள் 2024 முதல் துவங்க உள்ளது.
உற்பத்தி தொழிற்சாலை
ஹோண்டா இந்தியாவில் 4 இரு சக்கர வாகன உற்பத்தி தளம் வைத்திருப்பதைப் போலவே ராஜஸ்தான் மாநிலத்தின் ஆழ்வார் மாவட்டத்தில் கார் தயாரிப்பு தொழிற்சாலையை வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 64 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்தில் இந்தியாவிலும் கணிசமான முதலீடு குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.