இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி உடனான கூட்டணியில் ஜப்பான் நாட்டின் சுசூகி மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தும் நிலையில், அடுத்த 15 வருடத்திற்கான மாபெரும் வளர்ச்சியை இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு அமைக்க முடிவு செய்துள்ளது ஜப்பான் நாட்டின் சுசூகி.
இந்தியாவில் ஏற்கனவே இரண்டு பெரிய தொழிற்சாலைகளை அமைக்கத் திட்டமிட்டு இருக்கும் மாருதி சுசூகி கூட்டணி தற்போது 3வதாக ஒரு தளத்தை அமைக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்த அறிவிப்பால் இந்திய ஆட்டோமொபைல் சந்தை புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசூகி
மாருதி சுசூகி இந்தியாவில் 2025 முதல் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்காகப் புதிதாக ஒரு கார் உற்பத்தி தொழிற்சாலையை ஹரியானா-வில் நிறுவ உள்ளது. இதேபோல் எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி தொழிற்சாலையைச் சுசூகி தனியாகச் சொந்த முதலீட்டில் குஜராத் மாநிலத்தின் ஹன்சல்பூர்-ல் அமைக்க உள்ளது. இது 2026 முதல் செயல்படத் துவங்கும்.
அடிக்கல் நாட்டு விழா
இவ்விரு தொழிற்சாலைகளில் அடிக்கல் நாட்டு விழா-வில் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் நாட்டுக்கான இந்திய தூதர் satoshi suzuki முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. மாருதி சுசூகி கூட்டணியில் சுசூகி தான் அதிகப்படியான பங்குகளை வைத்துள்ளது.
ஜப்பான்
இந்நிலையில் ஜப்பான் நாட்டின் சுசூகி மோட்டார் இந்தியாவில் புதிதாகக் குளோபல் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் நிறுவனத்தை அமைக்கத் திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே சுசூகி இந்தியாவில் 104.4 பில்லியன் டாலர் அளவிலான தொகையை எலக்ட்ரிக் வாகனம் மற்றும் பேட்டரி தொழிற்சாலைக்காக முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் நிறுவனம்
இந்த நிலையில் குளோபல் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் நிறுவனத்தை அமைக்கப் புதிதாக முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய நிறுவனம் சுசூகி ஜப்பான் நிறுவனத்தின் நேரடி கிளை நிறுவனமாக இருக்கும், இதன் வாயிலாக இந்திய கார்கள் மட்டும் அல்லாமல் உலகளாவிய கார்களின் தரமும், வர்த்தகமும் இந்தியாவில் அமைக்கப்படும் புதிய குளோபல் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் நிறுவனம் முக்கியப் பங்காற்றும்.
28 லட்சம் கார்கள்
சுசூகி குரூப் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 28 லட்சம் கார்களை உற்பத்தி செய்துள்ளது, இதில் 60 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் பகுதி வர்த்தகத்தை மாருதி சுசூகி நிறுவனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.