இந்திய பங்குச் சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நேற்று எதிர்பாராத வகையில் காலமானார் என்ற செய்தி இந்திய தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தியாவின் வாரன் பஃபெட் என்று போற்றப்படும் பங்கு சந்தை நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவு பங்குச்சந்தை மற்றும் தொழில் துறைக்கு மிகப் பெரிய இழப்பு என்று கூறப்பட்டது.
பிரதமர் மோடி உள்பட பலர் அவரது மறைவிற்கு தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா சொத்து மதிப்பு
இந்தியாவின் 36ஆவது பணக்காரர் என அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அவர்களை பட்டியலிட்டது என்பதும் அவருடைய சொத்து மதிப்பு சுமார் 40 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்குச்சந்தையில் 36 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்தார் என்பதும் டாடா குழுமத்தின் நகை தயாரிப்பு நிறுவனமான டைட்டன் நிறுவனத்தில் மட்டும் அவர் 11 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்டார் ஹெல்த், கனரா வங்கி, இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி உள்பட பல நிறுவனங்களில் அவர் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளார் என்பதும் அவர் முதலீடு செய்த பெரும்பாலான நிறுவனங்கள் அவருக்கு மிகப்பெரிய லாபத்தை தந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகாசா ஏர்
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆகாசா ஏர் என்ற விமான நிறுவனத்தை தொடங்கினார் என்பதும் அந்த நிறுவனத்தின் தொடக்க நாள் அன்றே அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சக்கர நாற்காலியில் வந்து தான் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடாக் தலைமை நிர்வாக அதிகாரி
இந்த நிலையில் தொழில்துறையிலும், பங்குச் சந்தையிலும் பல்வேறு சாதனைகள் செய்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தனது பள்ளி மற்றும் கல்லூரி தோழர் என கோட்டக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி உதய் கோடக் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, அவரது மறைவுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரி தோழர்
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தனது பள்ளி மற்றும் கல்லூரி தோழர் என்றும் அவரை விட தான் ஒரு வருடம் இளையவர் என்றும், கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாகி உதய் கோடாக் தனது ட்விட்டரில் கூறியுள்ளார். மேலும் அவர் ட்விட்டில் நிதி சந்தைகளை அவர் புரிந்துகொள்ளும் தன்மை மிகவும் வியக்கத்தக்கது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
மிஸ் செய்கிறேன் ராகேஷ்
கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாகி உதய் கோடாக் தனது ட்விட்டரில் எனது பள்ளி மற்றும் கல்லூரி தோழர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, என்னை விட ஒரு வருடம் மூத்தவர். அவருடய மறைவு எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாங்கள் பலமுறை நேரில் சந்தித்து இந்தியாவின் நிதி நிலைமை மற்றும் பங்குச் சந்தை குறித்து பல மணிநேரம் பேசி உள்ளோம். 'உங்களை மிஸ் செய்கிறேன் ராகேஷ்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.