5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்தது என்பதும் இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, அதானி நிறுவனம், ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டன என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுத்த நிறுவனங்கள் அதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு காலக்கெடுவை ஒருநாள் நீடித்து தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த ஒரு நாள் காலக்கெடு நீட்டிக்க என்ன காரணம் என்பதை தற்போது பார்ப்போம்.
5ஜி அலைக்கற்றை ஏலம்
5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த அலைக்கற்றையை வாங்கிய நிறுவனங்கள் ஏலத்திற்கான கட்டணத்தை செலுத்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி கடைசி தேதி என்று இருந்தது. இந்த நிலையில் தற்போது அது ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நீட்டித்து தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.
வங்கி விடுமுறை
மும்பை உள்பட மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வங்கி முறை என்பதால் இந்த காலக்கெடு ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது என தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
4 நிறுவனங்கள்
ஆகஸ்ட் 1ஆம் தேதி 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிவடைந்தது என்பதும் இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, அதானி டேட்டா நெட்வொர்க், பாரதி ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஆகிய நான்கு நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளன.
ஏலத்தொகை
இந்த நிலையில் ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் வாங்கியதற்கான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான ஏலத்தொகையை ஆகஸ்ட் 16 ஆம் தேதி செலுத்த வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கோரிக்கை
இந்த நிலையில் மும்பை உள்பட மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வங்கி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் காலக்கெடுவை ஒருநாள் நீட்டிக்க வேண்டும் என நான்கு நிறுவனங்களும் கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு தற்போது ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை கட்டுவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 17ஆம் தேதி என மாற்றி அமைக்க தொலைத்தொடர்பு நிறுவனம் முடிவு செய்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
ரூ. 1.5 லட்சம் கோடி
5ஜி அலைக்கற்றை ஏலம் ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்பில் விடப்பட்டது என்பதும், முகேஷ் அம்பானியின் ஜியோ ரூ. 87,946.93 கோடிக்கு ஏலம் எடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கௌதம் அதானியின் குழு 400 மெகா ஹெர்ட்ஸுக்கு ரூ. 211.86 கோடி மதிப்பிலான ஏலம் எடுத்துள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.43,039.63 கோடிக்கும், வோடபோன் ஐடியா லிமிடெட் ரூ.18,786.25 கோடிக்கும் 5ஜி அலைக்கற்றையை வாங்கின.
தவணை முறை
5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்த நிறுவனங்கள் முழுத் தொகையையும் முன்பணமாக செலுத்தலாம் அல்லது 20 சம வருடாந்திர தவணைகளில் பணம் செலுத்தலாம் என கூறப்பட்டிருந்த நிலையில் அனைத்து நிறுவனங்களும் தவணை முறையில் பணம் செலுத்துவதை தேர்வுசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.