இந்திய டெலிகாம் துறை புதிய உயரத்தை எட்ட இருக்கும் நிலையில் அனைத்து முன்னணி நிறுவனங்களுக்குள் 5ஜி சேவையை யார் முதலில் அறிமுகம் செய்வது என்பதில் மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் புதிய 5ஜி சேவையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், விளம்பரப்படுத்தவும் பல புதிய முறைகளைக் கையாள முடிவு செய்துள்ளது டெலிகாம் நிறுவனங்கள். 4ஜி சேவையைப் போலவே யார் முதலில் 5ஜி சேவையில் முந்துகிறதோ அவர்கள் தான் அடுத்த 5 - 10 வருடத்திற்கு ஆட்சி செய்ய முடியும் என்பதால் போட்டி அதிகரித்துள்ளது.
வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவே அதிகப்படியான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது
400 கோடி ரூபாய்
பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் வோடாபோன் ஐடியா-வை சேர்த்து இந்தப் பண்டிகை காலத்தில் தங்களது 5ஜி சேவை அறிமுகத்தைக் குறித்து விளம்பரம் செய்யச் சுமார் 350 முதல் 400 கோடி ரூபாய் வரையிலான தொகையை ஒதுக்கி வைத்துள்ளது. இதில் ஏர்டெல் அதிகப்படியான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பண்டிகை காலம்
இந்தப் பண்டிகை காலத்தில் டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைப் பெற 3 இடத்தில் அதிகளவில் முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. FIFA உலகக் கோப்பை, ஐசிசி டி20 உலகக் கோப்பை, Kaun Banega Crorepati ஆகியவை உள்ளது. இது டெலிகாம் நிறுவனங்களுக்கு முக்கிய டார்கெட் ஆகவும் விளங்குகிறது.
2023 ஆம் நிதியாண்டு
இதன் மூலம் 2023 ஆம் நிதியாண்டு முடிவதற்குள் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடாபோன் ஐடியா ஆகிய 3 நிறுவனங்களும் சுமார் 700 கோடி ரூபாய் வரையிலான தொகையை விளம்பரத்திற்காகச் செலவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வோடாபோன் ஐடியா
வோடாபோன் ஐடியா தனது 5ஜி திட்டம் குறித்துப் பெரிய அளவில் தெரிவிக்காத நிலையில் இந்த 700 கோடி ரூபாய் அளவில் சிறு மாற்றங்கள் கூட ஏற்படலாம்.
வங்கி கடன்
சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் புதிய வங்கி கடன் பெற்ற பிறகு தான் 5ஜி சேவை அறிமுகம் குறித்து முடிவு செய்ய முடியும் என அறிவித்துள்ளது. காரணம் இந்தக் கடன் தொகையை வைத்து தான் 5ஜி டெலிகாம் சேவைக்கான டெலிகாம் கருவிகளை வாங்க முடியும் என்பது தான் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வோடபோன் ஐடியாவின் நிலை.