இந்தியாவில் செல்போன் வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதாகச் செய்திகள் நிறைய வருகின்றன. இந்திய டெலிகாம் வியாபாரம் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து நிறைய மாற்றங்களை அதிவிரைவாகச் சந்தித்துக் கொண்டு இருக்கின்றன.
ஒரு காலத்தில் இந்தியாவில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த ஏர்செல், யுனினார், டாடா டொகொமோ போன்ற பல கம்பெனிகளும், இன்று டெலிகாம் வியாபாரத்தில் இல்லை.
கடந்த 20 ஆண்டுகளில் டெலிகாமில் வியாபாரம் செய்யாத ரிலையன்ஸ் ஜியோ, கடந்த 5 ஆண்டுகளாக மிகப் பெரிய புரட்சியைச் செய்து கொண்டு இருக்கிறது.
டேட்டா வியாபாரம்
இந்தியாவில் ஒரு காலத்தில் (5 வருடம் முன்) ஒரு ஜிபிக்கு 150 ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்த நாம். இன்று 5 - 7 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா வாங்குகிறோம். நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி போதவில்லை என புகார் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். இதற்கு எல்லாம் ரிலையன்ஸ் ஜியோவின் வருகை ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
எல்லாமே டேட்டா தான்
வெறுமனே பேசுவதற்கு மட்டுமே செல்போன், என்கிற காலம் எல்லாம் ஜியோவின் வருகைக்குப் பின் மலை ஏறிவிட்டது. அத்தியாவசிய தேவை தொடங்கி, அலுவலக வேலை, பொழுது போக்கு, வாழ்த்து சொல்வது, வருத்தம் தெரிவிப்பது, கல்வி கற்பது வரை எல்லாமே ஸ்மார்ட்போன்களில் அடங்கிவிட்டது. அப்படி என்றால் டெலிகாம் கம்பெனிகள் கோடி கணக்கில் சம்பாதித்து இருக்க வேண்டுமே? வளர்ந்து இருக்கிறதா என்றால் இல்லை.
டெக்னாலஜி வளர்ச்சி
ஒரு காலத்தில் இந்தியாவின் 2ஜியில் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்தியா இன்று 5ஜி டெக்னாலஜியோடு, அலைக் கற்றைக்காக காத்துக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு முறை அலைவரிசை அப்கிரேட் ஆகும் போதும், டெலிகாம் கம்பெனிகள் பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய வேண்டி இருக்கிறது. எனவே டெலிகாம் கம்பெனிகளால் பெரிய லாபங்களை எல்லாம் பார்க்க முடியவில்லை. அப்படி என்றால் டெலிகம கம்பெனிகள் நன்றாக் அவருவாய் ஈட்டுகிறார்கள் என எதை வைத்துச் சொல்வது?
முக்கிய போட்டி
இருப்பினும் ஒரு டெலிகாம கம்பெனி, எவ்வளவு வலுவாக இருக்கிறது. எவ்வளவு சிறப்பாக வருவாய் ஈட்டுகிறது என்பதை, ARPU (Average Revenue Per User) வழியாக பார்க்கலாம். ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து ஒரு டெலிகாம் கம்பெனி எவ்வளவு ரூபாயை வருவாயாக ஈட்டுகிறார்கள் என்பது தான் ARPU.
ஏர்டெல் முன்னணி
அப்படிப்பட்ட ARPU போட்டியில் இப்போதும் ஏர்டெல் தான் ராஜாவாக நிற்கிறது. ஜூன் 2020 காலாண்டு கணக்குப் படி ஏர்டெல்லின் ARPU 157 ரூபாயாக இருக்கிறது. ஆனால் நம் ரிலையன்ஸ் ஜியோவின் ஜூன் 2020 காலாண்டு கணக்குபடி ARPU 140 ரூபாயாகத் தான் இருக்கிறது.
போட்டி அதிகரிப்பு
ரிலையன்ஸ் ஜியோ இன்னும் 12 சதவிகிதம் தான் ஏர்டெல்லின் ARPU-வை விட பின் தங்கி இருக்கிறது. ஏர்டெல் இந்த நேரத்திலும் சுதாரித்துக் கொள்ளவில்லை என்றால், விரைவில் ரிலையன்ஸ் ஜியோ, ARPU கணக்கிலும் ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளிவிடும் என எதிர்பார்க்கலாம்.
எப்படி ஜியோவின் ARPU அதிகரிக்கும்
முகேஷ் அம்பானி வழி நடத்தும் ரிலையன்ஸ் ஜியோவின் வருவாய், பார்தி எர்டெல்லின் வருவாயை விட அதிகமாக இருக்கிறது. அதோடு, ஜியோவின் வருவாய் வளர்ச்சியும் நன்றாக இருக்கிறதாம். எனவே ஒட்டு மொத்தமாக வருவாய் அதிகரித்தால் தானாக ARPU கணக்கும் அதிகரித்தும் விடும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை
வருவாய் கணக்கு அதிகரிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், ரிலையன்ஸ் ஜியோவில், கடந்த காலாண்டில் 10.8 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்து இருக்கிறார்கள். ஆனால் ஏர்டெல் 3.8 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்து இருக்கிறது. இப்படி தொடர்ந்து ஜியோவின் வாடிக்கையாளர்கள் அதிகரித்தால் ARPU கணக்கும் கூடத் தானே செய்யும்?
ரீசார்ஜ் பேக் விலை
கடந்த டிசம்பர் 2019-ல், இந்தியாவின் 3 பெரிய டெலிகாம் கம்பெனிகளும் (பார்தி ஏர்டெல், வொடாபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ) தங்கள் ரீசார்ஜ் பேக்குகளின் விலையை சுமாராக 30 - 40 சதவிகிதம் வரை உயர்த்தினார்கள். இந்த விலை உயர்வுக்குப் பிறகும் கூட, ரிலையன்ஸ் ஜியொவின் ரீசார்ஜ் திட்டங்களின் விலை, மற்ற கம்பெனிகளை விட குறைவாகத் தான் இருக்கின்றன. எனவே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.
மேலும் விலை ஏறலாம்
சமீபத்தில் தான் ஏர்டெல் கம்பெனியின் தலைவர் கோபால் விட்டல், ரீசார்ஜ் திட்டங்களுக்கான விலை மேற்கொண்டு அதிகரிப்பது தொடர்பாக பேசி இருந்தார். இந்த விலை ஏற்றம் 2020 - 21 நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நிகழலாம் எனவும் அனலிஸ்ட்கள் கணித்து இருக்கிறார்கள். எனவே இந்த விலை ஏற்றம் வந்தால் ஏர்டெல் & ஜியோ ஆகிய இரண்டு கம்பெனிக்கும் ARPU அதிகரிக்கும், ஆனால் இரண்டு கம்பெனிகளுக்கும் இடையில் இருக்கும் 17 ரூபாய் இடைவெளி, கணிசமாக குறையும் என எதிர்பார்க்கலாம்.