இந்திய டெலிகாம் சந்தையில் செப்டம்பர் மாதம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது, தொடர்ந்து வாடிக்கையாளர்களைப் பெற்று வந்த ரிலையன்ஸ் ஜியோ பெருமளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தத் துவங்கியது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் செப்டம்பர் மாதம் ஜியோ நிறுவனம் கிட்டதட்ட 2 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்த 4 வருட மோரோடோரியம் காலத்தைப் பெற்றுள்ள நிலையில், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா தனது டெலிகாம் சேவை கட்டணத்தை 15 முதல் 25 சதவீதம் வரையில் உயர்த்த முடிவு செய்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் செப்டம்பர் மாத தரவுகள் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 19 மில்லியன் அதாவது 1.9 கோடி வையர்லெஸ் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதன் மூலம் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 424.83 மில்லியனாகக் குறைந்துள்ளது.
ஏர்டெல் - வோடபோன் ஐடியா
இதேவேளையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 2.7 லட்சம் புதிய வையர்லெஸ் வாடிக்கையாளர்களைத் தனது நெட்வொர்க் கீழ் இணைத்துள்ளது. இதன் மூலம் ஏர்டெல்-ன் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 354.46 மில்லியன் ஆக உள்ளது. மேலும் வோடபோன் ஐடியா 10.7 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து 269.99 மில்லியன் வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது.
20.7 மில்லியன் வாடிக்கையாளர்
இதன் மூலம் செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 20.7 மில்லியன் வாடிக்கையாளர் வெளியேறி நாட்டின் மொத்த டெலிகாம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1.16 பில்லியன் ஆக உள்ளது. என டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமாக டிராய் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ திட்டம்
சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத் தனது குறைவான விலை கொண்ட டெலிகாம் சேவை திட்டங்களைப் பலவற்றை நீக்கியது. இதனாலேயே செப்டம்பர் மாதத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்தது.
சராசரி வருமானம்
ஆனாலே இதே வேளையில் ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டபடி தனது ஒரு வாடிக்கையாளரின் சராசரி வருமானத்தின் (ARPU) அளவை 138 ரூபாயில் இருந்து 144 ரூபாய் வரையில் அதிகரித்தது. இது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்குச் சாதகமாக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் ஜியோ நகரத்து வாடிக்கையாளர்களை விடவும் கிராமம் மற்றும் டவுன் பகுதி வாடிக்கையாளர்களையே அதிகளவில் இழந்துள்ளது.