முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இந்திய மக்களுக்கான அடுத்தத் தலைமுறை டிஜிட்டல் சேவையை உருவாக்கி வருகிறது. இதற்காகப் பேமெண்ட், பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு, டெலிகாம், எண்டர்டெயின்மெண்ட் பிரிவுகளும், தொழில்நுட்பத்திலும் பல்வேறு டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறது.
இவை அனைத்திற்கும் தேவையான அதிவேக இண்டர்நெட் சேவையை ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனத்தின் மூலம் மிகவும் குறைந்த காலகட்டத்தில் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது.
இந்நிலையில் நிறுவனத்தையும், சேவைகளையும் அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல பல்வேறு தொழில்நுட்ப ஜாம்பவான்களைப் பங்கு விற்பனை மூலம் கூட்டாளியாகச் சேர்ந்து வருகிறது.
60,000 கோடி ரூபாய்
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவு வர்த்தகம் கடந்த 30 நாட்களில் வெறும் 13.37 சதவீத பங்குகளை விற்பனை செய்து 60,596.37 கோடி ரூபாய் முதலீட்டினை பெற்றுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தப் புதிய முதலீடுகளால் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 5.15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஆனால் ஜியோவின் திட்டம் இதோடு நிற்கவில்லை என்பது தான் ஆச்சரியம்.
5.68 சதவீத பங்குகளை விற்பனை
முகேஷ் அம்பானி ஜியோ நிறுவனத்தின் சேவை மற்றும் வர்த்தக வளர்ச்சியை வலிமையாக்க வேண்டும் என நோக்கத்தில், சில நாட்களுக்கு முன்பு ஒரு முக்கியமான ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளது.
இக்கூட்டத்தில் ஜியோ தனது வர்த்தகத்தை வலிமையாக இன்னும் 8 சதவீத பங்குகளை விற்பனை செய்யலாம் என்றும், இப்பங்கு விற்பனை மூலம் ஜியோ அடுத்த தலைமுறை இண்டர்நெட் சேவை வழங்க 5G அலைக்கற்றை வாங்கவும், தற்போது இருக்கும் 850 MHz அலைக்கற்றை மறுபதிவு செய்யவும், கூடுதலாக வாங்கவும் முடியும் என ஆலோசனை செய்துள்ளது.
இதன் பின்பு தான் விஸ்டா ஈக்விட்டி 2.32 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது, ஆனால் இது முன்பே திட்டமிட்டிருந்த முதலீடு என்றால் ஜியோ இன்னும் 8 சதவீத பங்குகளை விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.
ஐபிஓ
இந்த முதலீடுகள் மூலம் ரிலையன்ஸ் ஜியோ இன்னும் சில ஆண்டுகளுக்கு முதலீட்டுக்காகப் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டிய அவசியம் இல்லை என்பது முகேஷ் அம்பானிக்கு மிகப்பெரிய ஜாக்பாட்.
ஜியோ பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என்றால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலிருந்து ஜியோவை தனியாகப் பிரித்துப் பட்டியலிட வேண்டும். இது தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மதிப்பை அதிகளவில் பாதிக்கும்.
சவுதி ஆராம்கோ
இவை அனைத்தையும் தாண்டி ரிலையன்ஸ் நிறுவனத்தில் சவுதி எண்ணெய் நிறுவனமான ஆராம்கோ முதலீடு செய்யக் காத்திருக்கிறது. ஜியோவை தனியாகப் பிரிக்கும் போதும் முதலீட்டாளர்கள் வேகமாக வளரும் ஜியோ நிறுவனத்தின் மீது தான் இருக்கும். இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தகம் மற்றும் சந்தை மதிப்பைப் பாதிக்கும்.
ஆராம்கோ முதலீடு வந்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 2000 ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஸ்டா ஈக்விட்டி
அமெரிக்க முதலீட்டு நிறுவனமான விஸ்டா ஈக்விட்டி நிறுவனம் ஜியோ நிறுவனத்தில் 2.32% பங்குகளை 11,367 கோடி ரூபாய் முதலீடு செய்து கைப்பற்றியுள்ளது.
பேஸ்புக்
பேஸ்புக் நிறுவனம் ஜியோ மற்றும் அதன் டிஜிட்டல் சேவை தளத்தில், இந்தியாவில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறவும், விளம்பர வருவாய் பெறவும், அதிக வாடிக்கையாளர்களை அடைய வேண்டும் என முக்கியமான நோக்கத்துடன் ஜியோ நிறுவனத்தில் 43,574 கோடி ரூபாய் முதலீடு செய்தது 9.9 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது
பேஸ்புக் இதுவரையில் எந்த ஒரு தனியார் நிறுவனத்திலும் சில சதவீத பங்குகளுக்காக இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தது இல்லை. இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல் இந்திய டெக்னாலஜி துறையில் இது தான் மிகப்பெரிய முதலீடு என்ற வரலாற்றையும் படைத்துள்ளது.
சில்வர் லேக்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் ஜியோ தளத்தில் அமெரிக்கத் தனியார் பங்கு முதலீடு நிறுவனமான சில்வர் லேக் சுமார் 5,655.75 கோடி ரூபாய் முதலீடு செய்து 1.15 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.
இந்த முதலீட்டின் படி ஜியோ தளத்தின் மொத்த பங்கு மதிப்பு 4.90 லட்சம் கோடி ரூபாயும், மொத்த நிறுவனத்தின் மதிப்பு 5.15 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.