ரிலையன்ஸ் ஜியோ என்றாலே என்ன ஆஃபர், என்ன சலுகை என்று கேட்கும் அளவுக்கு, அடுத்தடுத்த சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது அந்த நிறுவனம்.
இந்த நிலையில் தற்போது தனது முக்கிய அம்சமாக விளங்கும் ஜியோ பைபர் திட்டத்தினை, தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் இலவசமாக டிரையலுக்காக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டமானது செப்டம்பர் 1 முதல் இணையும் புதிய வாடிக்கையாளர்களுக்கானது எனவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தொலைத் தொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்கு பின்னர், பின்னடைவை சந்தித்துள்ள மற்ற நிறுவனங்கள், தற்போது ஜியோவின் இந்த அதிரடி சலுகையினால் இன்னும் பின்னடைவை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதோடு இந்த அதிரடியான சலுகையானது பிராண்ட்பேன்ட் சந்தாதாரர்களை அதிகளவில் சேர்க்க பயன்படும் என கூறப்படுகிறது.
ஜியோ பைபர் ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நிலையில், இந்த சலுகையானது இன்னும் மேற்கொண்டு வாடிக்கையாளர்களை சேர்க்க பயன்படும் என நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே 1,600 நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் தனது சேவையை ஜியோ வழங்கி வருகிறது. மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தியும் வருகிறது.
இந்த இலவச டிரையல் திட்டமானது 30 நாட்களுக்கு எந்த நிபந்தனையும் கட்டணமும் இன்றி சேவையை பெற்றுக் கொள்ளலாம்.
புதிய டாரிப் திட்டத்தின் படி, 399 ரூபாய்க்கான இந்த திட்டத்தில் 30 Mbps வேகத்திலான அன்லிமிடெட் இண்டர்நெட் சேவையினையும், இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது. இதே 699 ரூபாய்க்கான பிளானில் 100 Mbps அதிவேகத்திலான அன்லிமிடெட் இணைய சேவையினையும், அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையினையும் பெற்றுக் கொள்ளலாம்.
இதே 999 ரூபாய்க்கான புதிய திட்டத்தில் இணைபவர்களுக்கு 150 Mbps அதிவேகத்திலான இணைய சேவையினையும், அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையினையும் பெற்றுக் கொள்ளலாம். இதோடு 11 ஓடிடி தளங்களுக்கான சப்ஸ்கிரிப்ஷனும் (ரூ.1000 மதிப்பிலான) பெற்றுக் கொள்ளலாம்.
இதுவே 1499 ரூபாய்க்கான திட்டத்தில், 300 Mbps அதிவேக இணைய சேவையும், வரம்பில்லா வாய்ஸ் கால் சேவையினையும் பெற முடியும். இதோடு 12 ஓடிடி தளங்களில் சப்ஸ்கிரிப்ஷனும் (ரூ.1500 மதிப்பிலான) பெற்றுக் கொள்ள முடியும்.
புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை எனில், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களும் இந்த புதிய டாரிப் பிளானுக்கு மாறிக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 15 முதல் 30 வரையில் இணைந்தவர்கள், இந்த சேவையினை மை ஜியோ செயலி வழியாகவும் பெற்றும் கொள்ளலாம்.