டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அரசாங்கத்தின் முன்னுரிமையாக உள்ளது. அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருதல், வருவாயினை சமமாக பகிர்தல் தான் அரசின் முக்கிய கடமைகளாக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா அமெரிக்கா வர்த்தக கவுன்சிலின் உச்சி மாநாட்டில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய அரசின் முன்னுரிமை எதற்கு என்பது குறித்தான பலவற்றையும் பேசினார்.
மேலும் கடந்த சில மாதங்களோடு ஒப்பிடும்போது பணவீக்கம் என்பது மீண்டும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவை எட்டியுள்ளது என கூறியுள்ளார்.
நடவடிக்கை எடுக்கும்
மத்திய அரசு இந்தியாவின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கையை ரிசர்வ் வங்கியுடன் இணைந்து எடுக்கும். மத்திய அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் சமமான வருவாய் பகிர்தல் உள்ளிட்டவற்றை உறுதி செய்யும். தற்போதைய பணவீக்கம் என்பது உங்களில் பலரையும் ஆச்சரியப்படுத்தாது. எனினும் கடந்த சில மாதங்களாகவே அதனை சமாளிக்க கூடிய அளவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பணவீக்கம்
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை மாதம் பணவீக்க விகிதம் 6.71% ஆக குறைந்துள்ளது. எனினும் தொடர்ந்து 7வது மாதமாகவே ரிசர்வ் வங்கியின் இலக்கு விலையான 6% மேலாகவே இருந்து வருகின்றது.
இந்தியாவின் பலம்
இந்தியாவின் முக்கிய பலமே இந்திய பொருளாதாரத்தின் அளவு, அதன் பன்முகத் தன்மை, திறமையான மனித வளத்தின் இருப்பு மற்றும் டிஜிட்டல் மாற்றத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகும்.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் வளர்ச்சி அடுத்த 20 ஆண்டுகளில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% உள்ளடக்கும். இந்த செயல்பாட்டில் இந்தியாவும் அமெரிக்காவும் இரு இயந்திரங்களாக மாறும். இரு நாடுகளுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த கடினமான மற்றும் சவாலான காலகட்டங்களில் உலகளாவிய நன்மைக்காக ஒத்துழைக்க முடியும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆதரவளிக்கலாம்
நாங்கள் மிக நம்பிக்கையாக உள்ளோம். மத்திய வங்கிகள் பொருளாதார வளர்ச்சியினை பாதுகாக்கலாம். மத்திய வங்கிகள் பணவியல் கொள்கைகள் மூலம் ஆதாரவளிக்கலாம்.
தற்போது உக்ரைன் - ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில் எரிபொருள் நெருக்கடி இருந்து வருகின்றது. குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிடைப்பதில் நிச்சயமற்ற நிலையே இருந்து வருகின்றது.
புதுபிக்கதக்க ஆற்றலில் முதலீடு
நாம் நிலக்கரியில் இருந்து வெளியேறுவோம். பாரம்பரிய அனல் மின் நிலையங்களை விடுத்து, புதுபிக்கதக்க ஆற்றலில் முதலீடு செய்வோம். இதன் மூலம் உற்பத்தியினை அதிகரிப்போம் என கூறியுள்ளார்.