கொரோனா வைரஸ்-ன் தாக்கம் அமெரிக்கா, ரஷ்யா முதல் இந்தியா, பிரேசில் வரையில் அனைத்து உலக நாடுகளையும் வரலாறு காணாத ஒரு நிதிநெருக்கடியில் சிக்கவைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் மக்கள் எவ்விதமான செலவு செய்யாமல் இருந்தால் மோசமான நிதிநிலையை எதிர்கொள்ள வேண்டி வரும் என அச்சத்திலும் உலக நாடுகள் உள்ளது.
உலகப் பொருளாதாரம் எவ்வளவு வேகமாக மீண்டு வர முடியும் என்பது குறித்து YouGov என்கிற சர்வதேச வர்த்தகச் சந்தை ஆய்வு நிறுவனம் சுமார் 26 நாடுகளில் நுகர்வோர் ஆகிய மக்கள் மத்தியில் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வு உலக நாடுகள் எதிர்கொள்ளப் போகும் நிலையைப் புட்டுபுட்டு வைத்துள்ளது.
மக்கள்
கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் 50 சதவீதம் வர்த்தகம் மட்டுமே நடந்து வரும் நிலையில், அதிகளவிலான மக்கள் வேலைவாய்ப்பை இழந்தும், முழுமையான சம்பளம் பெறாத நிலையிலும் இருக்கிறார்கள். இது மட்டும் அல்லாமல் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் வேலை இழக்க நேரிடம் என்ற அச்சத்திலும் உள்ளனர்.
இதன் காரணமாக உலக நாடுகளில் இருக்கும் மக்கள், கையில் இருக்கும் பணத்தை அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இதுமட்டும் அல்லாமல் முதலீடு செய்யவோ, எதிர்காலத் திட்டத்திற்காகவோ செலவு செய்யத் தற்போது மக்கள் தயாராக இல்லை.
காலம் தேவை
இதோடு விமானம், ஹோட்டல், சேவைத் துறை சார்ந்த கடைகள் 100% சதவீதம் திரும்பவும் இயங்க வேண்டும் என்பது விரைவில் நடக்கக் கூடிய காரியமில்லை. இதனால் மொத்த வர்த்தகச் சந்தையும் முழுமையாக இயங்க நீண்ட காலம் ஆகும் என இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் தெரிவிக்கிறது.
வேலைவாய்ப்பு சந்தை
உலகம் முழுவதும் பல கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வரும் வேளையில், தற்போது வேலையில் இருக்கும் மக்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேலை குறித்த பயத்தில் தான் இருக்கின்றனர்.
இதுமட்டும் அல்லாமல் கிட்டதட்ட 80 சதவீத மக்கள் தேவையற்ற பொருட்களை வாங்குவதை முழுமையாகக் குறைத்துள்ளனர்.
உலகம் முழுவதும் சுமார் 40 கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகச் சர்வதேச ஊழியர்கள் அமைப்புக் கூறுகிறது.
சேமிப்பு
மேலும் YouGov அமைப்பு சுமார் 27,681 பேரிடம் ஆய்வு செய்தது செய்தது. இதில் உங்கள் சம்பளத்திற்கு நிகரான ஒரு தொகை கிடைத்தால் என்ன செய்வீர்கள் எனக் கேட்டபோது வெறும் 13 சதவீதம் பேர் தான் செலவு செய்வதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 37% பேரும், பிரிட்டனில் 58% பேரும், ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ், இந்தோனேசியா, நார்வே, கனடா ஆகிய நாடுகளில் 40% பேரும் சேமிப்பு செய்யவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
முதலீடு மற்றும் கடன்
அதேபோல் 20 சதவீத மக்கள் பங்குச்சந்தை போன்றவற்றில் முதலீடு செய்யும், 10 சதவீதம் பேர் கடனை தீர்க்கவும் முற்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகச் சந்தை
மக்களின் மனநிலை இப்படியிருக்கும் போது வர்த்தகச் சந்தை வேகமாக மீண்டு வருவது இப்போதைய சூழ்நிலை சாத்தியமற்ற ஒன்று என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.