திருவனந்தபுரம்: தமிழகத்தில் இருந்து வெங்காயம், தக்காளி உட்பட உணவு பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய கேரளா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் எழுதி இருக்கிறார்.
வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் பெரிய வெங்காயம் 100 ரூபாய்க்க மேல் விற்கிறது. சின்ன வெங்காயம் 150 ரூபாய் வரை விற்கிறது
மழை அதிகரிப்பால் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் விலை அதிகமாக உயர்ந்து வருகிறது.
நேரடி கொள்முதல்
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து வெங்காயம், தக்காளி உட்பட உணவு பொருட்களை நேரடியாக கேரள அரசே கொள்முதல் செய்ய விரும்புவதாக முதல்வர் பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் எழுதி இருக்கிறார்.
கேரள அரசு
அந்த கடிதத்தில் அண்மைக்காலமாக வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஆகவே விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் நலனை காக்கவும் கொள்முதல் மூலமாக கேரள அரசு இவ்விஷயத்தில் தீர்வு காண முடிவு செய்துள்ளது. கேரளாவை பொறுத்த வரை, காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விநியோகத்தில் மற்ற மாநிலங்களையே அதிகம் சார்ந்து இருக்கிறது.
தமிழகத்தில் கொள்முதல்
மத்திய அரசின் திட்டத்தின் படி தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருட்களை மற்ற மாநிலங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள முடியும். இதன்படி, தமிழக விவசாயிகள் மற்றும் வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் கேரளாவின் விநியோக அமைப்புகள் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வேண்டுகோள்
எனவே, தமிழகத்தில் இருந்து உணவு பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார். இதே போல, மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
கேரள அரசு நம்பிக்கை
முதல்கட்டமாக கேரள அரசின் சப்ளைக்கோ 1,000 டன் வெங்காயம் கொள்முதல் செய்ய உள்ளது. , நுகர்வோர் மற்றும் ஹார்டிகாப் முறையே 300 மற்றும் 500 டன் வெங்காயம் கொள்முதல் செய்ய உள்ளன.. நவம்பர் 3 முதல் விநியோகம் தொடங்கலாம் என்று கேரள அரசாங்கம் நம்புகிறது.