இந்தியாவில் 5 மாநில தேர்தல் நடந்து முடிந்த நிலையில் புதிதாகப் பதவியேற்ற அரசுகள் அனைத்தும் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தயார் செய்யும் பணியில் தீவிரமாக இருக்கும் வேளையில் நேற்று கேரள அரசு 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
கேரள மாநிலத்தைப் புரட்டிப்போட்டு உள்ள கொரோனா தொற்று அலை மற்றும் அதன் மூலம் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளைச் சரி செய்ய வேண்டும் என்பதைத் தான் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் மிக முக்கிய இலக்காக நிர்ணயம் செய்துள்ளார் கேரள நிதியமைச்சர் கே.என் பாலகோபாலன்.
கேரள அரசு நேற்று தாக்கல் செய்யப்பட்டு உள்ள பட்ஜெட் அறிக்கையில் 20000 கோடி ரூபாய் மதிப்புள்ள கொரோனா ஊக்க திட்டத்தை அறிவித்துள்ளார் பாலகோபால்.
கேரளா எல்டிஎப் கட்சி
கேரளாவில் எல்டிஎப் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்திருந்தாலும் முன்னாள் நிதியமைச்சரான டிஎம் தாமஸுக்கு இப்பதவி மீண்டும் கொடுக்கப்படவில்லை. இதற்கு மாறாக கே.என்.பாலகோபால் இப்பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் கேரள மக்கள் மத்தியில் இந்தப் பட்ஜெட் அறிக்கை மீது அதிகளவிலான எதிர்பார்ப்பு நிலவியது.
வேக்சின்-க்கு 1000 கோடி ரூபாய்
இந்நிலையில் கேரள நிதியமைச்சர் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் 18 வயதுக்கு அதிகமாக இருப்போருக்கு வேக்சின் அளிப்பதற்காக 1000 கோடி ரூபாயும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோஸ்டல் பகுதிகளை மேம்படுத்த 1,500 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கேரள மாநிலத்தின் வறுமை
இதைத்தொடர்ந்து கேரள மாநிலத்தில் வறுமையைப் போக்க புதிய திட்டத்தை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மக்களுக்குக் கூடுதலாகச் சுமை அளிக்கக் கூடாது என்பதற்காக எவ்விதமான புதிய வரியையும் கேரள அரசு விதிக்கவில்லை.
திரவ ஆக்சிஜன் உற்பத்தி தளத்தை
மேலும் தற்போது இம்மாநிலத்தின் முக்கியத் தேவையாக விளங்கும் ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய 150 மெட்ரிக் டன் லிக்விட் ஆக்சிஜன் தயாரிக்கும் புதிய உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளதாகப் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவிட் ஊக்க திட்டம்
இதைவிட முக்கியமாகப் பார்க்கப்படும் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவிட் ஊக்க திட்டத்தின் கீழ் மாநிலத்தின் ஹெல்த் எமர்ஜென்சி நிலையைச் சரி செய்ய 2800 கோடி ரூபாயும், கொரோனாவில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு நேரடியாக உதவும் வகையில் 8,900 கோடி ரூபாயும், கேரளா பொருளாதாரத்தை மேம்படுத்த 8,300 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது கேரள அரசு.
கேரளா சுற்றுலா
மேலும் குடும்பஸ்திரி திட்டத்திற்கு 100 கோடி ரூபாயும், சுற்றுலா துறையை மேம்படுத்தக் கூடுதலாக 50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளார் பாலகோபால். இதன் மூலம் கொரோனா தொற்றுக்குப் பின் சுற்றுலா துறை கேரள அரசின் மிகப்பெரிய வர்த்தக இலக்காக இருக்கப்போகிறது என்பது தெரிகிறது.