இந்தியாவில் அனைத்து அரசு சேவைகளும், நிறுவனங்களும் அடுத்தடுத்து தனியார்மயமாக்கப்பட்டு வரும் நிலையில் Gods Own Country எனச் செல்லமாக அழைக்கப்படும் கேரளாவில் தனியார் துறை நிறுவனங்கள், அந்த மாநில மக்களை நம்பி இயக்க கூடிய வர்த்தகமான ஆன்லைன் டாக்ஸி சேவை துறையில் இறங்க முடிவு செய்துள்ளது.
இன்று பல டிஜிட்டல் மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் மக்களின் வாழ்க்கை முறையைப் பெரிய அளவில் எளிமையாக்கினாலும் மனிதர்களை அதிகம் நம்பி இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இந்த இடைவெளியை தற்போது கேரள அரசும் வர்த்தகமாக மாற்ற முடிவு செய்துள்ளது.
கேரள அரசின் முடிவால் இத்துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஓலா, உபர் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் நெருக்கடி உருவாகியுள்ளது.
கேரள அரசு
இந்தியாவிலேயே எந்த ஒரு மாநில அரசும் மேற்கொள்ளாத முதல் முயற்சியாகக் கேரள அரசு தனது சொந்த இ-டாக்ஸி சேவை அதாவது ஆன்லைன் டாக்சி புக் செய்யும் சேவையை அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது. இதன் மூலம் பிரபலமான கார்ப்பரேட் ஆன்லைன்
டாக்சி சேவை நிறுவனங்களுக்கு மாற்றாக அரசு தனது சேவையைக் கொண்டு வர உள்ளது.
கேரள சவாரி
கேரளா மாநில அரசு "கேரள சவாரி" என்று பெயரிடப்பட்ட ஆன்லைன் டாக்ஸி வாடகை சேவையானது, மாநிலத்தில் தற்போதுள்ள ஆட்டோ-டாக்ஸி நெட்வொர்க்குகளை இணைத்து, மலிவு விலையில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் பிரச்சனை இல்லாத பயணத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் அம்மாநில தொழிலாளர் துறையால் வெளியிடப்படுகிறது.
ஆட்டோ-டாக்சி தொழிலாளர்கள்
கேரள மாநிலத்தின் கல்வி, தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் வி சிவன்குட்டி கூறுகையில், தற்போது நடைமுறையில் பல்வேறு சவால்களைச் சந்தித்து வரும் ஆட்டோ-டாக்சி தொழிலாளர் துறைக்கு இந்தத் தனித்துவமான சேவை உதவிக்கரமாக இருக்கும் எனத் தான் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 17 அறிமுகம்
ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரும் புனித காலகட்டமாகப் பார்க்கப்படும் மலையாள மாதமான சிங்கத்தின் தொடக்க நாளில் கேரளாவில் இங்குள்ள கனகக்குன்னு அரண்மனையில் (Kanakakkunnu) நடைபெறும் விழாவில் இப்புதிய ஆன்லைன் டாக்சி சேவை தொடங்கப்பட உள்ளது.
20 - 30 சதவீத வித்தியாசம்
தற்போது வெளிநாட்டு நிறுவனங்கள் அளிக்கும் ஆன்லைன் டாக்சி சேவை கட்டணத்திற்கும், கேரளாவில் ஆட்டோ மற்றும் கார் டாக்சி சேவையில் இருப்பவர்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 20 - 30 சதவீத வித்தியாசம் உள்ளதைக் கேரள அரசு அறிந்த காரணத்தால் தற்போது இத்துறை சேவையில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
கேரள அரசின் முடிவு
மேலும் கேரள அரசின் இந்த முடிவு இத்துறையில் இருக்கும் ஊழியர்களுக்குக் கூடுதலாக வர்த்தகம், வருமானம் கிடைக்கும். இதேபோல் தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் கூடுதலான பாதுகாப்பு மக்களுக்கும் சரி, ஒட்டுநர்களுக்கும் சரி. இதேபோல் எரிபொருள் விலைக்கு ஏற்ப விலையும் அவ்வப்போது மாற்றிக்கொள்ள முடியும். மேலும் தனியார் நிறுவனங்களுக்குச் செல்லும் வருமானத்தை அரசு பெற வாய்ப்பு உள்ளது.
திருவனந்தபுரம்
தற்போது கேரள சவாரி என்னும் திட்டத்தில் திருவனந்தபுரம் மாநகராட்சி வரம்புக்குள் இருக்கும் 500 ஆட்டோ-டாக்சி ஓட்டுனர்கள் இத்திட்டத்தின் முதல் டிரைவர் பார்ட்னர் ஆக உள்ளனர். இதேபோன்ற திட்டத்தைத் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தால் எப்படி இருக்கும்.. உங்க கருத்து என்ன..? மறக்காம கமெண்ட் பண்ணுங்க...