இங்கிலாந்து நாட்டின் ராணியான 2வது எலிசபெத் மறைவு அந்நாட்டு மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. 2வது எலிசபெத்-ன் இறுதி காரியங்கள் முடிந்த நிலையில் அரச குடும்பத்தின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.
ராணி எலிசபெத் மறைந்த உடனேயே அவரது மகன் 3ஆம் சார்லஸ் முடிசூட்டப்பட்டு மன்னராக அறிவிக்கப்பட்டார். இதனால் பிரிட்டன் நாட்டின் பல மாற்றங்கள் அடுத்தடுத்து நடக்க உள்ளது. இதில் முக்கியமாக அந்நாட்டின் தேசிய கீதமும், கரன்சியும் முக்கிய மாற்றத்தைச் சந்திக்க உள்ளது.
குறிப்பாக உலகில் அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட பிரிட்டன் பவுண்ட் கரன்சியில் 3ஆம் சார்லஸ் முகம் எப்போது வரும் என்பதற்காக விடை தற்போது கிடைத்துள்ளது.
ராணி எலிசபெத்
2ஆம் உலகப் போர் முடிந்த பின்பு பல முக்கியமான சூழ்நிலைக்கு மத்தியில் பிரிட்டன் நாட்டின் ராணியாக அரியணை ஏறிய எலிசபெத் தனது 96 வயதில் காலமானார். 1952ல் அரியணைக்கு வந்த ராணி இரண்டாம் எலிசபெத், ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பிரிட்டன் வரலாற்றில் அதிகக் காலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத்.
3ஆம் சார்லஸ்
தற்போது 3ஆம் சார்லஸ் முடிசூட்டப்பட்டு மன்னராக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டின் தேசிய கீதத்தில் 'God Save the Queen' என இதுநாள் வரையில் பாடப்பட்ட நிலையில் 'God Save the King' எனத் தற்போது மாற்றப்பட்டு உள்ளது. இதுதான் எலிசபெத் மறைவிற்குப் பின் நடந்த முதலும் முக்கிய மாற்றம்.
பிரிட்டன் கரன்சி
இந்நிலையில் ராணி எலிசபெத் மறைவிற்குப் பின்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்த முக்கியமான கேள்வி 3ஆம் சார்லஸ் புகைப்படம் பிரிட்டன் கரன்சியில் அச்சிடப்படுமா..? எப்போது அச்சிடப்படும்..? என்பது தான். இதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.
பேங்க் ஆப் இங்கிலாந்து
பிரிட்டன் நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆப் இங்கிலாந்து வெளியிட்ட அறிவிப்பில் மன்னர் 3ஆம் சார்லஸ் புகைப்படம் கொண்ட பிரிட்டன் கரன்சி 2024 ஆம் ஆண்டு மத்தியில் புழக்கத்திற்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
பவுண்ட் கரன்சி
விரைவில் பிரிட்டன் கரன்சியில் இடம்பெறப்போகும் 3ஆம் சார்லஸ் மன்னரின் புகைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும், இந்தப் புகைப்படம் 5, 10, 20, 50 பவுண்ட் கரன்சி நோட்டுகளில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 1960 முதல் ராணி 2வது எலிசபெத் முகம் அந்நாட்டுக் கரன்சியில் உள்ளது.
புதிய கரன்சி
இதேபோல் தற்போது புழக்கத்தில் இருக்கும் எலிசபெத் முகம் கொண்ட கரன்சி அனைத்தும் புழக்கத்தில் இருக்கும், தற்போது இருப்பில் இருக்கும் கரன்சிகளும் புழக்கத்திற்கு வரும். மன்னர் 3ஆம் சார்லஸ் புகைப்படம் கொண்ட பிரிட்டன் கரன்சி பழைய மற்றும் கிழிந்த கரன்சிகளுக்கு மாறாக அளிக்கப்பட்டுப் புழக்கத்திற்கு வரும் என்று பேங்க் ஆப் இங்கிலாந்து அறிவித்துள்ளது.