இந்தியாவில் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தின் அளவு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது, இனி பட்டனை தட்டினால் எல்லாமே வீட்டுக்கு வந்துவிடும் என மக்கள் அனைவரும் நினைத்திருந்த நிலையில் கொரோனா அனைத்தையும் உடைந்து எது நிரந்தரமானது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
ஆம், ஆன்லைன் ஷாப்பிங், சூப்பர் மார்க்கெட், மொக மார்கெட் என விதவிதமான பெயர்களில் பெரும் நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக இந்திய ரீடைல் சந்தையின் சிறு குறு விற்பனையாளர்களைத் திக்குமுக்காடவைத்து நாம் மறக்க முடியாது. ஆனால் தெருவுக்குத் தெரு என நாடு முழுவதும் விரிந்திருக்கும் இந்தக் குட்டி குட்டி விற்பனையாளர்கள் தான் நாட்டின் முதுகெலும்பு என்பது தற்போது உண்மையாகியுள்ளது.
கொரோனா
இந்தியாவை முழுவதும் கொரோனா தாக்கத்தின் காரணமாக விநியோக சந்தை பாதிப்படைந்த நிலையில் ஈகாமர்ஸ் மற்றும் ஆன்லைன் விற்பனை தளங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது என்பதை விட மொத்தமாக முடங்கியுள்ளது என்றாலும் மிகையில்லை. குறிப்பாக நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து வந்த அமேசான், பிளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்களும் இதனால் முடங்கியுள்ளது.
மக்களுக்கான சேவை
கொரோனா தாக்கியுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களின் தினசரி தேவைகளைப் பூர்த்திச் செய்வது நாடு முழுவதும் விரிந்து இருக்கும் 1.1 கோடி சின்னச் சின்ன மளிகை கடைகளும், இவர்களுக்கு நாடு முழுவதும் உதவும் 3 லட்ச விநியோகஸ்தர்களும் மற்றும் மொத்த விற்பனையாளர்களும் தான். இதை யாராலும் மறுக்க முடியாது, மக்கள் உணவிற்காகவும், தினசரி தேவையைத் தீர்க்க தற்போது எந்த ஆன்லைன் நிறுவனமும் இல்லை.
வெறும் 2.5 பில்லியன் டாலர்
நாம் இன்று மிகப்பெரிய சேவை தளமாகப் பார்த்து வரும் ஈகாமர்ஸ் துறையின் மொத்த உணவு மற்றும் மளிகை பொருட்களின் அளவு வெறும் 2.5 பில்லியன் டாலர் தான். ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மொத்த உணவு மற்றும் மளிகை பொருட்களின் மதிப்பு 550 பில்லியன் டாலர். இன்றைய ஆன்லைன் வர்த்தகம் நெருங்கக் கூட முடியாத உயரத்தில் உள்ளது.
பெரு நகரங்கள்
இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 பெரு நகரங்களிலும் ஆன்லைன் உணவு மற்றும் மளிகை பொருட்களின் மொத்த சந்தை மதிப்பு 2 பில்லியன் டாலர். ஆனால் இந்நகரங்களில் மொத்த வர்த்தகச் சந்தையின் மதிப்பு 192 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரச்சனை
இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டுமே ஈகாமர்ஸ் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது. நாட்டில் ஈகாமர்ஸ் சந்தையின் வளர்ச்சி வேகமாக இருந்தாலும் நாட்டை இயங்க வைப்பது இந்தச் சின்னச் சின்ன மளிகைக் கடைகளும், ரீடைல் கடைகளும் தான். ஆனால் ஈகாமர்ஸ் வந்த பின்பு இக்கடைகளின் மதிப்பு மக்கள் மத்தியில் அதிகளவில் குறைந்துள்ளது என்றால் மிகையில்லை.
ஈகாமர்ஸ் துறை வளர்ச்சி அடைவது இல்லை, ஆனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மன மாற்றம் தான் தவறு.
கூர்கிராம்
KSA டெக்னோபாக் தலைவர் அரவிந்த் சிங்ஹால் கூறுகையில், தற்போது ஸ்மார்ட்சிட்டி கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள கூர்கிராம் போன்ற நகரங்களில் மளிகைக் கடைகள் இயங்குவதற்காகத் தளம் இல்லாமல் அனைத்தையும் மால் வடிவில் கட்டப்பட்டு உள்ளது. இதனால் உணவு மற்றும் மளிகை பொருட்களுக்கா மக்கள் மால்களுக்குத் தான் சென்று வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பு அடைந்துள்ள இந்த நேரத்தில் மால்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் மக்கள் உணவு பொருட்களுக்காகத் தவித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கிறார்.
யாருக்குப் பாதிப்பு
கொரோனா பாதிப்பின் காரணமாக மளிகை மற்றும் உணவு பொருட்களின் வர்த்தகத்திற்கும் சந்தைக்கும் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் கணிசமான பாதிப்பு இருக்கிறது.
ஆனால் உணவுக்குப் பின் மக்கள் அதிகமாகச் செலவு செய்யும் ஆடைக்கு விற்பனை துறைக்குத் தான் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் விற்பனையாளர்கள் அதிகம் லாபம் இல்லாமல் சரியான விலைக்கு விற்பனை செய்தால் விரைவில் இத்துறை மீண்டு வந்துவிடும். ஆனால் பெரிய பிராண்டுகள் அனைத்து அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் என அரவிந்த் சிங்ஹால் கூறுகிறார்.