இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் சாம்ராஜ்ஜியமான பிக் பஜார் நிறுவனத்தை நிறுவிய கிஷோர் பியானி, பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் செயல் தலைவர் மற்றும் இயக்குநர் பதவியைப் புதன்கிழமை ராஜினாமா செய்தார்.
ஜனவரி 23 முதல் இப்பதவியில் இருந்து முழுமையாகக் கிஷோர் பியானி வெளியேற உள்ளதாக நிர்வாகத்திடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.
பியூச்சர் ரீடைல் நிறுவனம் அதிகப்படியான கடன் நிலுவையில் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் பல வழக்குகளைத் தொடுத்தும் எதிர்கொண்டும் உள்ளது. இந்த நிலையில் திவால் மற்றும் நொடிப்பு விதிகள் 2016ன் படி கிஷோர் பியானி தனது ராஜினாமா கடிதத்தை Committee of Creditors அமைப்பு முன் வைத்துள்ளார்.
பியூச்சர் குழுமம்
பியூச்சர் குழுமத்தின் பியூச்சர் ரீடெய்ல் நிறுவனம் அதிகப்படியான கடனை நிலுவையில் வைத்துள்ளது மட்டும் அல்லாமல் அக்கடனுக்கான தவணைகளையும் செலுத்தாமல் உள்ளது. இதற்கிடையில் இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களும் இணைந்து வழக்கு தொடுத்துத் திவாலானதாக அறிவித்தது.
கிஷோர் பியானி
பியூச்சர் குழுமத்தின் பியூச்சர் ரீடெய்ல் நிறுவனம் நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டு இருக்கும் காரணத்தால் எவ்விதமான செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ்
ஆகஸ்ட் 2020 இல், ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சில்லறை, மொத்த விற்பனை, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கிடங்குப் பிரிவுகளில் செயல்படும் 19 நிறுவனங்களை விற்க 24,713 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அமேசான்
ஆனால் பியூச்சர் ரீடைல் நிறுவனம் உலகளாவிய ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசானிடம் பெற்ற முதலீட்டுக்கு செய்த ஒப்பந்த விதிகளை மீறிய காரணத்தால் அமேசான் நிறுவனம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் ரீடைல் ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்தது.
பியூச்சர்ஸ் கூப்பன்ஸ்
பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் ப்ரோமோட்டர் நிறுவனமான பியூச்சர்ஸ் கூப்பன்ஸ் நிறுவனத்தில் சுமார் 1,500 கோடி ரூபாய்க்கு 49 சதவீத பங்குகளை வாங்கியது அமேசான். இந்த முதலீட்டை பெரும் நிதி நெருக்கடியில் இருக்கும் போது கிஷோர் பியானி பெற்ற காரணத்தால் அமேசான் போட்ட அனைத்து விதிமுறைகளுக்கும் இணைங்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு 1500 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றது.
1500 கோடி ரூபாய் ஒப்பந்தம்
கடைசியில் இந்த 1500 கோடி ரூபாய் ஒப்பந்தம் அமேசானின் தலையீட்டால், ரிலையன்ஸ் உடனான பியூச்சர் ரீடைல்-ன் 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் தோல்வியடைந்தது மற்றும் நிறுவனம் திவாலாக அறிவிக்கும் செயல்முறைக்குக் கீழ் சென்றது.
பெரிய கூத்து
இதற்குப் பின்பு நடந்தது தான் பெரிய கூத்து பியூச்சர் ரீடைல் கீழ் இருக்கும் பல்வேறு வர்த்தகத்தை நடத்த போதுமான பணம் இல்லாத காரணத்தால் இரு நிறுவனங்கள் மத்தியிலான ஒப்பந்தம் முடியும் வரையில் அனைத்து வர்த்தகத்தையும் ரிலையன்ஸ் ரீடைல் நிர்வாகம் செய்தது.
ரிலையன்ஸ் ரீடைல்
இதற்காக இந்தியா முழுவதும் இருக்கும் பியூச்சர் ரீடைல் கடைகளில் ரிலையன்ஸ் ரீடைல் தனது சொந்த பணத்தில் பொருட்களை வாங்கி விற்பனை செய்தது மட்டும் அல்லாமல் இக்காலக்கட்டத்தில் பியூச்சர் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுத்தது ரிலையன்ஸ் தான். இதன் மூலம் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் கையில் எடுத்தது.
வழக்கு
இதேவேளையில் பியூச்சர் ரீடைல் மற்றும் அமேசான் மத்தியிலான வழக்கு பெரிய அளவில் வெடித்த நிலையில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் தனது கட்டுப்பாட்டில் இருந்து பியூச்சர் ரீடைல் கடைகளின் குத்தகை ஒப்பந்தத்தைப் புதுப்பிப்புச் செய்யாமல் இருந்தது.
வர்த்தகம், கடைகள் கைப்பற்றல்
பியூச்சர் ரீடைல்-ஐ கைப்பற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் ஒரு சில நாட்களில் குத்தகை ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பு செய்யாத அனைத்து கடைகளையும் நோட்டீஸ் காலத்துடன் கைப்பற்றியது. இதனால் பியூச்சர் ரீடைல் பல கடைகளை முக்கியப் பகுதிகளில் இழந்தது மட்டும் அல்லாமல் அனைத்தும் ரிலையன்ஸ் ரீடைல் கடைகளாக மாறியது.