இந்திய வர்த்தகச் சந்தையில் தொடர்ந்து புதிய வர்த்தகத்தில் இறங்கி வரும் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானியை தொடர்ந்து ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்களம் பிர்லாவும் தற்போது புதிய வர்த்தகத்தில் குதிக்க முடிவு செய்துள்ளார்.
இந்தியாவில் முன்னணி நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் எப்போதும் ஒரு போட்டி நிலவும், அந்த வகையில் கடந்த ஒரு வருடமாக (குறிப்பாக லாக்டவுன்) நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள் மத்தியில் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதிலும், புதிய வர்த்தகத்தைத் துவங்குவதிலும் மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது.
இதன் ஒரு பகுதியாகத் தற்போது ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்களம் பிர்லா பெயிண்ட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இறங்க முடிவு செய்துள்ளார்.
ஆதித்யா பிர்லா குரூப்
45 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆதித்யா பிர்லா குரூப் ஏற்கனவே கட்டுமான துறைக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்கும் பல வர்த்தகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், இப்பிரிவு வர்த்தகத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள இக்குழுமத்தின் தலைவரான குமார் மங்களம் பிர்லா பெயிண்ட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இறங்க முடிவு செய்துள்ளார்.
குமார் மங்களம் பிர்லா
குமார் மங்களம் பிர்லாவின் அறிவிப்பு, பெயிண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் ஏசியன் பெயிண்ட்ஸ், பெர்ஜர், நெரோலாக் ஆகிய நிறுவனங்களுக்கு அதிர்ச்சியாக மட்டும் அல்லாமல் வர்த்தகத்தில் பெருமளவிலான பாதிப்பும் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 7.5 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்திய பெயிண்ட்ஸ் விற்பனை சந்தையில் சுமார் 60 சதவீத வர்த்தகத்தை இந்த 3 நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது.
இண்டிகோ பெயிண்ட்ஸ்
இதுமட்டும் அல்லாமல் புதிதாக ஐபிஓ வெளியிட்டுள்ள இண்டிகோ பெயிண்ட்ஸ் நிறுவனத்திற்கும் இது அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தும், 1,488 ரூபாய் முதல் 1490 ரூபாய் வரையிலான விலையில் ஐபிஓ வெளியிட்டுள்ள நிலையில் சுமார் 117.02 மடங்கு அதிகப் பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்குகளைக் கோரியுள்ளனர்.
முதலீட்டாளர்கள் கண்ணோட்டம்
இந்நிலையில் இப்பங்குகள் 790 முதல் 800 ரூபாய் வரையிலான ப்ரீமியம் விலையில் பட்டியலிடுப்படும் என (Grey market) எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 80 ரூபாய் இதன் கணிப்பில் குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ஆதித்யா பிர்லா குழுமத்தின் முடிவு எனப் பெரிய அளவில் நம்பப்படுகிறது. இதே ஐபிஓ பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்டு இருந்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த அளவிற்கு டிமாண்ட் இருந்திருக்காது எனவும் கூறப்படுகிறது.
5000 கோடி ரூபாய் முதலீடு
ஆதித்யா பிர்லா குழுமம் ஏற்கனவே சிமெண்ட் மற்றும் அலுமினியம் உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையில் இருக்கும் நிலையில், சுமார் 5000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை பெயிண்ட்ஸ் தயாரிப்பு வர்த்தகத்தைத் துவங்க கிராசிம் நிறுவனத்தின் வாயிலாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதேவேளையில் பெர்ஜர் மற்றும் நெரோலாக் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களது வர்த்தகத்தை இணைக்கத் திட்டமிட்டு வருவது குறிப்பிடதக்கது.
வர்த்தகம் பெருகும், லாபம் குறையும்
தற்போதைய இந்தியா பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை சூழ்நிலையில் புதிதாக வரும் நிறுவனத்திற்கு அதிகளவிலான வர்த்தக வாய்ப்புகள் உள்ளது, ஆனால் லாப அளவீடுகள் என்பது மிகவும் குறைவு. ஏற்கனவே இழந்த வர்த்தகத்தை மீண்டும் பெற நிறுவனங்கள் மத்தியில் அதிகளவிலான வர்த்தகப் போட்டி இருக்கும் நிலையில் புதிய நிறுவனத்தின் வருகை பெரிய அளவிலான போட்டியை உருவாக்கி லாப அளவீடுகளைக் குறைக்கும்.
பிற நிறுவனங்கள்
இந்திய பெயிண்ட் விற்பனை சந்தையில் Sherwin Williams, Jotun மற்றும் Nippon ஆகிய நிறுவனங்கள் 2 சதவீத வர்த்தகத்தைக் கூட அடைய முடியாமல் தோல்வி அடைந்த நிலையில் பிர்லா-வின் வெற்றியும் கேள்விக்குறியாகியுள்ளது.
அல்டிராடெக் பிர்லா புட்டி
ஆனால் பிர்லா குழுமம் கட்டுமான துறைக்குப் புதியது இல்லை அலுமினியம், சிமெண்ட் ஆகியவற்றைத் தாண்டி அல்டிராடெக் பிர்லா புட்டி விற்பனையில் இந்நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் 2வது பெரிய நிறுவனமாகவும் இப்பிரிவில் விளங்குகிறது.
மேலும் அல்டிராடெக் பிர்லா புட்டி-யை விற்பனை செய்யும் 4ல் 3 கடைகள் பெயிண்ட் விற்பனை செய்கிறது என்பதால் ஏற்கனவே பிர்லா குழுமம் விநியோகம் மற்றும் விற்பனையாளர்களை அடைவதில் வென்றுவிட்டது என்பது தான் உண்மை.
ஜியோவின் வருகையால் பிர்லாவின் வோடபோன் ஐடியா பெரிய அளவிலான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டது மறக்க முடியாத ஒன்று. இதேபோல் ஏசியன் பெயிண்ட்ஸ், பெர்ஜர், நெரோலாக் ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் பெயிண்ட் விற்பனை துறையில் பிர்லா-வின் வருகை டெலிகாம் சந்தையைப் போல் விலை போர்-ஐ உருவாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2020 இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் 2020 கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் லாக்டவுனுக்குப் பின் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வருவதில் பெரிய அளவில் நம்பிக்கை வைத்துள்ளார் குமார் மங்களம் பிர்லா, குறிப்பாகக் கட்டுமான துறையில் பெரிய அளவில் நம்பிக்கை வைத்துள்ளார் பிர்லா.
அலுமினியம் மற்றும் சிமெண்ட் வர்த்தகம்
இந்தியாவில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பிற்கான முதலீடுகள் அதிகரிக்கும் எனப் பெரிய அளவில் நம்பப்படுகிறது. அப்படிப் பார்க்கும் போது எங்களுடைய அலுமினியம் மற்றும் சிமெண்ட் வர்த்தகம் ஏற்கனவே கொரோனாவுக்கு முந்தைய வர்த்தக அளவீட்டை அடைந்துள்ளது எனவும் குமார் மங்களம் பிர்லா பிஸ்னஸ் இன்சைடர்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.