தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கி இயக்கத்துக்கு மத்திய நிதித்துறை கட்டுப்பாடுகளுடன் ஒரு மாதம் தடை விதித்துள்ளது.
Recommended Video
ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு, தற்போது மத்திய நிதித்துறை இயக்க தடை விதித்துள்ளது. இந்த வங்கியில் இருந்து அவசர தேவைகள் தவிர, ஒரு மாதத்திற்கு சேமிப்பு, நடப்பு என அனைத்து கணக்குகளில் இருந்தும் 25000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த அதிரடி நடவடிக்கையானது நவம்பர் 17, மாலை 6 மணி முதல் டிசம்பர் 16 வரை அமலில் இருக்கும் என்றும் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது கவனிக்கதக்க விஷயம்.
ரிசர்வ் வங்கியின் பிசிஏ நடவடிக்கை
சமீபத்தில் தான் லட்சுமி விலாஸ் வங்கி மீது பல்வேறு புகார்கள் எழுந்ததன் காரணமாக, ரிசர்வ் வங்கி அதிரடி இந்த வங்கியின் மீது PCA நடவடிக்கையினை எடுத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதிகளவிலான வாராக்கடன் மற்றும் பல பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு போதுமான நிதி வலிமை இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கி சற்றே பின் தங்கியிருந்தது.
எதற்காக இந்த நடவடிக்கை?
ரிசர்வ் வங்கியின் இந்த பிசிஏ நடவடிக்கை வங்கி நிதி செயல்பாடுகளில் திருப்தி இல்லாத நிலையில், அதன் செயல்திறனை மேம்படுத்த, ரிசர்வ் வங்கி எடுக்கும் முக்கிய நடவடிக்கையாகும். ஆனால் அரசின் நடவடிக்கை, வாராக்கடன், நிதி நெருக்கடி, நிதி திரட்டல் பின்னடைவு உள்ளிட்ட பல காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகளின் விலையானது, இன்று பிஎஸ்இ வர்த்தகத்தில் 20% சரிந்து லோவர் சர்கியூட் ஆகியுள்ளது.
யாரும் அச்சப்பட வேண்டாம்
எனினும் இவ்வங்கியில் செய்யப்பட்டுள்ள டெபாசிட்டுகள் பாதுகாப்பாக உள்ளது. மக்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். மோசமான நிலையில் இருந்து வங்கியினை மீட்டெடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்ல லட்சுமி விலாஸ் வங்கியின், நலன் கருதி அதனை DBS வங்கியுடன் இணைக்கும் திட்டத்தினை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆக அரசின் இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களின் நலன் கருதியும், வங்கியின் எதிர்காலம் கருதியும் எடுக்கப்பட்டாதால் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
முதலீட்டாளர்கள் இடையே பதற்றம்
ஒரு புறம் ரிசர்வ் வங்கி யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கூறினாலும், இந்த பதற்றத்திலேயே முதலீட்டாளர்கள் கிடைக்கும் வரையில் லாபம் என்ற நிலையில் அதன் பங்குகளை விற்க தொடங்கினர்.
இதனால் இவ்வங்கி பங்கின் விலையானது தற்போது 20 சதவீதம் குறைந்து லோவர் சர்க்யூட் ஆகியுள்ளது. தற்போது இதன் விலை 12.40 ரூபாயாகும்.
லட்சுமி விலாஸ் வங்கி பங்கின் முக மதிப்பு
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இவ்வங்கி பங்கின் முகமதிப்பு 10 ரூபாயாகும். பங்கு சந்தையில் உங்களுக்கு அனுபவம் இருந்திருந்தால், நிச்சயம் நீங்கள் இதனை பற்றி தெரிந்திருக்கலாம். ஒரு நிறுவனம் தனது மொத்த மதிப்பினை, ஒரு அடிப்படை மதிப்பினை வைத்து பங்குகளாக பிரிக்கலாம். இந்த அடிப்படை மதிப்பு தான் முக மதிப்பு என்று கூறுவார்கள். சரி இதற்கும் இந்த லட்சுமி விலாஸ் வங்கிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? வாருங்கள் பார்க்கலாம்.
முக மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1 கோடி ரூபாய் என வைத்துக் கொள்வோம். அதன் முக மதிப்பு 10 ரூபாய் என பிரித்தால், அந்த நிறுவனம் 10,00,000 பங்குகளை வைத்துள்ளதாக தெரிந்து கொள்ளலாம். மேற்கணக்கிடப்பட்ட 10 ரூபாய் என்பது தான் ஒரு நிறுவனத்தின் முக மதிப்பாக கணக்கிடப்படுகின்றது.
எதற்காக இந்த முக மதிப்பு?
சரி இந்த முக மதிப்பால் நிறுவனத்திற்கு என்ன லாபம் நஷ்டம்? முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்? ஒரு நிறுவனம் தங்களுக்கு ஏதுவான, வசதிற்கேற்ப ஒரு மதிப்பினை முக மதிப்பினை நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆனால் பெரும்பாலும் நிறுவனங்கள் முகமதிப்புகளை அதிகம் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. ஏனெனில் ஒரு நிறுவனத்தின் பங்கினை நீங்கள் 100 ரூபாய்க்கு வாங்கி வைத்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். அதன் முகமதிப்பு 10 ரூபாய் என வைத்துக் கொள்வோம். அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது ஏதோ ஒரு காரத்தினால் 10 ரூபாய்க்கு கீழாக குறைந்து விடுகிறது. அல்லது நிறுவனம் டி-லிஸ்ட் செய்வதாக அறிவிக்கிறது எனில், நிறுவனம் ஒரு பங்கிற்கு குறைந்தபட்சம் முக மதிப்பினை முதலீட்டாளர்களுக்கு வழங்கியாக வேண்டும்.
நிறுவனத்திற்கு இப்படி ஒரு செக் உண்டு
ஒரு வேளை நிறுவனத்தின் பங்கு 1 ரூபாய்கு சென்றாலும் கூட, முதலீட்டாளர்களுக்கு 10 ரூபாய் வழங்க வேண்டும். அதனால் தான் நிறுவனங்கள் பெரும்பாலும் 1 ரூபாய் முக மதிப்பாக வைத்துள்ளன. ஒரு வேளை நஷ்டமே கண்டாலும், கடினமான நேரங்களில் குறைவான நஷ்ட ஈட்டை கொடுக்கலாம். ஆக தற்போது இந்த நிலையில் தான் லட்சுமி விலாஸ் வங்கியும் உள்ளது. ஏனெனில் அதன் முக மதிப்பு 10 ரூபாய் ஆகும். அதன் விலை தற்போது 12.40 ரூபாய். ஏற்கனவே லோவர் சர்க்யூட் ஆன நிலையில் தான் இவ்வங்கி பங்கின் விலையானது மேற்கொண்டு குறையாமல் உள்ளது.
முதலீட்டாளர்களுக்கும் நஷ்டம் & வங்கிக்கும் அழுத்தம்
ஒரு வேளை இந்த லோவர் சர்க்யூட் ஓபன் ஆகிவிட்டால், இந்த பங்கின் விலை பூஜ்ஜியத்திற்கு கூட செல்லலாம். ஆனால் இவ்வங்கி முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குகிற்கு கட்டாயம் 10 ரூபாய் கொடுத்தாக வேண்டும். எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே இந்த வங்கி பங்கின் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லாமல் தான் காணப்படுகிறது. ஆக முதலீட்டாளர்களுக்கும் நஷ்டம் இருக்கும். அதே வேளை பூஜ்ஜியத்திற்கே சென்றாலும் வங்கிக்கு மேற்கொண்டு அழுத்தம் தான் அதிகரிக்கும். ஏற்கனவே பெரும் நஷ்டத்தில் உள்ள வங்கிக்கு, இது மேற்கொண்டு நிதி நெருக்கடியை தான் தரும்.
சிறு முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் தான்
கடந்த செவ்வாய்கிழமையன்று இவ்வங்கி பங்கின் விலையானது 15.60 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இந்த பங்கின் விலையானது ஜூன் மாத இறுதியில் இருந்து 35% வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது. எனினும் இதில் நல்ல விஷயம் என்னவெனில் ரிசர்வ் வங்கி சொன்னது போல டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படும்போது இவ்வங்கியின் பங்கு மேம்படலாம். ஆனால் தற்போது சிறிய அளவிலான முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் தான் என்று எம்கே குளோபல் தனது அறிக்கையில் கூறியுள்ளது.