ஒரு பெரிய கம்பெனியில் உயர் அதிகாரிகள் மற்றும் இயக்குநர்களை எல்லாம் நியமிக்கும் போது, பங்குதாரர்கள், பெரும்பாலும் ஆதரித்து வாங்களிப்பார்கள்.
ஆனால் கடந்த சில வாரங்களாக, இந்தியாவில் இந்த வழக்கம் மாறிக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் லட்சுமி விலாஸ் வங்கியில் ஏழு இயக்குநர்கள் நியமனத்துக்கு எதிராக, பங்குதாரர்கள் வாக்களித்தது தலைப்புச் செய்தியானது.
அதே போல தற்போது தனலட்சுமி வங்கியில் சுனில் குருபக்ஷானி (Sunil Gurubaxani) நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு எதிராக, பங்குதாரர்கள், ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வாக்களித்து இருக்கிறார்கள்.
90 சதவிகித ஓட்டுக்கள்
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 93 ஆண்டு பாரம்பரியமான தனலட்சுமி வங்கி கொண்டு வந்த 10 தீர்மானங்களில், ஒரே ஒரு தீர்மானம் மட்டுமே பங்குதாரர்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. சுனில் குருபக்ஷானி முதன்மைச் செயல் அதிகாரி & நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு எதிராக 90 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கிறதாம்.
இயக்குநர்கள் நியமனம் ஓகே
கோபிநாத் சி கே, ஜி சுப்ரமணிய ஐயர், கேப்டன் சுசீலா மேனன், ஜி ராஜகோபாலன் நாயர், பி கே விஜய குமார் போன்றவர்கள் இயக்குநர்களாக நியமிக்கப்படுவதற்கான ரெசல்யூஷன்களுக்கு பங்குதாரர்கள் ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள். சரி ஏன் சுனில் குருபக்ஷானி முதன்மைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு பங்குதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்?
காரணம் என்ன?
சுனில் குருபக்ஷானி, கடந்த பிப்ரவரி 2020-ல் தான் தனலட்சுமி வங்கியின் முதன்மைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். சுனில், ஒரு preferential issue-வை வெளியிட யோசனை சொன்னாராம். Preferential issue கொண்டு வந்தால், தற்போது தனலட்சுமி வங்கியில் பங்குதாரர்களாக இருப்பவர்கள் கைவசம் வைத்திருக்கும் பங்குகள் (shareholders' stake) குறைந்துவிடும். இதனால் பங்குதாரர்கள் சுனிலின் நியமனத்துக்கு எதிராக வாக்களித்து இருப்பதாகச் சொல்கிறது பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை.
வட இந்தியாவில் 25 கிளைகள்
அதோடு, சுனில் குருபக்ஷானி, வட இந்தியாவில் 25 வங்கிக் கிளைகளை நிறுவவும் யோசனை சொனாராம். இதுவும் பங்குதாரர்கள், சுனிலுக்கு எதிராக வாக்களிக்க ஒரு காரணம் என்கிறது பிசினஸ் ஸ்டாண்டர்ட் வலைதளச் செய்திகள். இதில் ஒரே ஆறுதலான விஷயம், தனலட்சுமி வங்கியின் நிதி நிலை, லட்சுமி விலாஸ் வங்கி அளவுக்கு மோசமாக இல்லை என்பது தான். சமீபத்தில் தான்.
சரமாரியாக ராஜினாமா
கடந்த ஜூன் 2020-ல் இருந்து சஜீவ் கிருஷ்ணா, கே என் முரளி, ஜி வெங்கடநாராயணன் என மூன்று இயக்குநர்கள் வெளியேறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் 2019-ல் தனலட்சுமி வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் & முதன்மைச் செயல் அதிகாரி டி லதா, பொறுப்பேற்றுக் கொண்டு 15 மாதங்களிலேயே ராஜினாமா செய்து வெளியேறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், ஆர்பிஐ, டி கே கஸ்யப் என்பவரை, தனலட்சுமி வங்கியில் கூடுதல் இயக்குநராக நியமித்தது குறிப்பிடத்தகக்து.