டெல்லி அரசு சுமார் 10 வருடங்களாக ரீடைல் மதுபான கடைகளை நிர்வாகம் செய்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவுடன் மொத்தமாக இத்துறை விற்பனையில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் டெல்லி அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 100 சதவீத மதுபான கடைகளும் தனியாருக்குக் கொடுக்கப்படுகிறது.
இந்த மாற்றம் மூலம் மதுபானம் வாங்க வருபவர்களுக்கு மேம்பட்ட அனுபவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் கடைக்குள் சென்று வாங்கும் வசதியையும், ஏசி மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பையும் டெல்லி அரசு விதித்துள்ளது.
849 மதுபான கடைகள்
டெல்லியில் இருக்கும் 849 மதுபான கடைகளில் 60 சதவீதம் அரசு கட்டுப்பாட்டிலும், 40 சதவீதம் தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாட்டிலும் உள்ளது. இதில் பெரும்பாலான கடைகள் மிகவும் மோசமான வாடிக்கையாளர்கள் சேவை அளிக்கப்படுகிறது. குறிப்பாக அனைத்து கடைகளிலும் இரும்பு கிரில் உடன் தான் உள்ளது.
டெல்லி அரசு
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவும், அதேவேளையில் மதுபான விற்பனை மூலம் அதிகப்படியான வருமானத்தை டெல்லி அரசு பெற வேண்டும் என்பதற்காக டெல்லி அரசு புதிய கலால் வரி கொள்கையைக் கொண்டு வந்தது. இந்தப் புதிய திட்டத்துடன் டெல்லியில் இருக்கும் மதுபான மாஃபியாவையும் ஒழிக்க வேண்டும் என்பது டெல்லி அரசின் திட்டம்.
5 சூப்பர் ப்ரீமியம் மதுபான கடைகள்
இந்தப் புதிய மாற்றங்கள் உடன் வாடிக்கையாளர் சேவை பெரிய அளவில் மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் 32 பகுதிகளில் புதிய கடைகளும் திறக்கப்பட உள்ளது. மேலும் 5 சூப்பர் ப்ரீமியம் ரீடைல் மதுபான கடைகள் 2500 சதுரடியில் திறக்கப்பட உள்ளது. இதேபோல் சூப்பர் ப்ரீமியம் ரீடைல் மதுபான கடைகளில் பார் வசதியும் கொண்டு வரப்பட உள்ளது.
ஒப்பன் டென்டர்
இதற்காக டெல்லி அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 849 மதுபான கடைகளைத் தனியார் நிறுவனத்திற்கு அளிக்க ஒப்பன் டென்டர் முறையில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இந்த ஏலமும் ஜூன் மாதம் அமலாக்கம் செய்யப்பட்ட புதிய கலால் வரி கொள்கை-யின் கீழ் செய்யப்பட்டு உள்ளது.
MRP விலை நிர்ணயம்
அனைத்திற்கும் மேலாக டெல்லி அரசு தனது கலால் வரிக் கொள்கை 2021-22 கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள 200 மதுபானத்தில் 184 மதுபானத்திற்கு MRP விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் மதுபான கடைகளில் MRP விலைக்குக் கூடுதலான விலைக்கு இனி மதுபானத்தை விற்பனை செய்ய முடியாது.
மதுபான விலை
இதேபோல் மதுபான கடைகளை ஏலத்தில் எடுத்த நிறுவனங்கள் சந்தையில் நிலவும் போட்டிக்கு ஏற்ப MRP விலையை விடவும் குறைவான விலைக்கு விற்பனை செய்ய முடியும். இதனால் மதுபான விற்பனை கூடுவது மட்டும் அல்லாமல் மதுபான கடைகளில் வாடிக்கையாளர் சேவை மேம்படுத்த முடியும்.
5,500 கோடி ரூபாய்
டெல்லி அரசுக்கு கடந்த 3 வருடத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 5,500 கோடி ரூபாய் அளவிலான வருமானம் மதுபான விற்பனை மூலம் பெற்றுள்ளது. இப்புதிய கலால் வரிக் கொள்கை மூலம் துவக்கத்தில் விலை சற்றுக் கூடுதலாக இருந்தாலும் விரைவில் இது நிலைப்பெறும் என நம்பப்படுகிறது.
ஸ்டாலினே நினைத்தாலும்.. டாஸ்மாக் கடைகளை அரசால் மூட முடியாது.. ஏன் தெரியுமா?