இந்தியாவில் அறிவிக்கப்பட்ட 21 நாள் முழுமையான லாக்டவுன் மூலம் தொழிற்சாலைகள், வர்த்தகம், விமானங்கள், ரயில், வாகனங்கள் என அனைத்தும் முடங்கியது. சொல்லப்போனால் நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்த லாக்டவுன் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் சுமார் 7 முதல் 8 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனச் சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மார்ச் 25
பிரதமர் மோடி மார்ச் 25ஆம் தேதி அறிவித்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு மூலம் நாட்டின் 70 சதவீத பொருளாதார நடவடிக்கை, முதலீடு, ஏற்றுமதி, நுகர்வு சந்தை முடங்கியது. இக்காலகட்டத்தில் மக்களின் தினசரி வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள், விவசாயம், சுரங்க உற்பத்தி, சில வங்கி சேவைகள் மற்றும் ஐடி நிறுவனங்கள் மட்டும் தான் இயங்கியது.
இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் மோசமான கட்டத்தில் இருந்து பல்வேறு மாற்றங்கள், அதிரடி முடிவுகள் மூலம் மீண்டு வரும் காலத்தில் கொரோனா பாதிப்பு இந்தியாவைத் தாக்கியது. இதனால் எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் வீண் ஆகியுள்ளது.
இதன் எதிரொலியாக ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021ஆம் நிதியாண்டில் மிகவும் குறைவான ஒற்றை இலக்கு வளர்ச்சியைத் தான் இந்திய பொருளாதாரம் அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
35,000 கோடி ரூபாய்
ஏப்ரல் மாத துவக்கத்தில் Acuite Ratings & Research Ltd இந்த லாக்டவுன் காலத்தில் தினமும் 35,000 கோடி ரூபாய் அளவிலான பொருளாதாரப் பாதிப்பை எதிர்கொள்ளும் எனக் கணித்திருந்தது. இதனால் 21 நாள் முடிவில் இந்திய பொருளாதாரம் கிட்டதட்ட 7.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
நீட்டிப்பு
இந்நிலையில் நாட்டில் பல்வேறு மாநிலங்கள் லாக்டவுன் காலத்தை நீட்டித்து வரும் நிலையில் இந்தப் பொருளாதாரப் பாதிப்பு மேலும் அதிகமாகும் எனக் கூறப்படுகிறது.
மேலும் இந்த லாக்டவுன் காலத்தில் போக்குவரத்து, ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் துறை தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகிறது.
போக்குவரத்து
இந்தியாவில் தற்போது சுமார் 90 சதவீத லாரிகள் இயங்காமல் முடங்கியிருக்கும் நிலையில் லாக்டவுன் காலத்தில் முதல் 15 நாளில் மட்டும் ஒரு நாளுக்கு ஒரு லாரிக்கு 2,200 ரூபாய் எனச் சுமார் 35,200 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக All India Motor Transport Congress பொதுச் செயலாளர் நவீன் குப்தா தெரிவித்துள்ளார்.