நிதி நெருக்கடியின் காரணமாக ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட யெஸ் வங்கியில் புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலுக்குச் சொந்தமான 545 கோடி ரூபாய் நிதி சிக்கிக்கொண்டுள்ளது.
இந்திய வங்கித்துறையில் ஹாட் டாப்பிக் ஆக விளங்கும் யெஸ் வங்கியின் நிர்வாகக் கைப்பற்றல் மூலம் அடுத்த சில நாட்களில் யெஸ் வங்கியின் கணக்குகளை ஆய்வு செய்து புதிய தீர்வு கொள்கை திட்டத்தை வடிவமைக்க உள்ளது ரிசர்வ் வங்கி.
இதுமட்டும் அல்லாமல் 30 நாட்களுக்குச் சில முக்கியமான கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், அதில் முக்கியமாக யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் 50000 ரூபாய் மட்டுமே வித்டிரா செய்ய அனுமதி கொடுத்துள்ளது.
பூரி ஜெகநாதர்
பூரி ஜெகநாதர் கோவிலில் காணிக்கை மூலமாக வந்த நிதியை இக்கோவில் நிர்வாகம் 2 வைப்பு நிதியாக பிரித்து மொத்தம் 545 கோடி ரூபாய் டெப்பாசிட் செய்துள்ளது. இந்த வைப்பு நிதிகளிள் ஒன்று மார்ச் 16ஆம் தேதியும், மற்றொன்று மார்ச் 29ஆம் தேதி முதிர்வு அடைகிறது.
தற்போது யெஸ் வங்கி நிதி நெருக்கடியின் காரணமாக முழுமையாக இயங்கி முடியாமல் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் இந்தி 545 கோடி ரூபாய் எப்படி வித்டிரா செய்ய முடியும்..?
பிரதாப் ஜெனா
இதுகுறித்து ஓடிஷா சட்ட அமைச்சர் பிரதாப் ஜெனா கூறுகையில் 545 கோடி ரூபாய் மதிப்பிலான 2 வைப்பு நிதிகளும் முதிர்வு அடைந்த உடன் அதை முழுமையாக வித்டிரா செய்து அரசு வங்கிகளில் டெப்பாசிட் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வைப்பு நிதியை யெஸ் வங்கி நிர்வாகம் 3 பகுதிகளாக அதாவது மார்ச் 19, மார்ச் 23, மார்ச் 29 ஆகிய தேதிகளில் பூரி ஜெகநாதர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
தனியார் வங்கி
பொதுவாக அரசு, கோவில் நிதிகள் அனைத்தும் அரசு வங்கிகளில் தான் வைப்பு செய்யப்பட்டும், ஆனால் பூரி ஜெகநாதர் கோவில் நிர்வாக கிட்டதட்ட 624 கோடி கோடி ரூபாய் அளவிலான நிதியை தனியார் வங்கியில் வைப்பு செய்யப்பட்டது மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
மேலும் இந்த மொத்த தொகையில் சுமார் 47 கோடி ரூபாய் அளவிலான நிதியை பூரி ஜெகநாதர் கோவில் நிர்வாகம் flexi account முறையில் திரும்ப பெற்றுள்ளது.
திருப்பதி தப்பித்தது
யெஸ் வங்கியில் இந்தியாவின் பணக்கார கடவுள் திருப்பதி தேவஸ்தானம் சுமார் 1,300 கோடி ரூபாய் டெபாசிட் செய்திருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னரே டெப்பாசிட்-ஐ வித்டிரா செய்து தப்பித்துக்கொண்டது.
திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் ஆந்திரா அரசாங்கம் மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதனையடுத்து தேவஸ்தானத்தின் டெபாசிட் தொகைகள் குறித்து ஆராயப்பட்டது. அப்போது யெஸ் பேங்கின் நிதி நெருக்கடி குறித்த செய்திகளை முன்கூட்டியே கணித்த திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர ஜெகன் அரசு முன்னெச்சரிக்கையாக மொத்தமாக அதாவது 1,300 கோடி ரூபாய் மதிப்பிலான டெபாசிட் பணத்தை திருப்ப பெற்றுக் கொண்டது.
நிதி திரட்டல்
யெஸ் வங்கி கொடுக்கப்பட்ட கடன்களில் ஏற்பட்ட ஏமாற்றத்தைச் சமாளிக்க 2 பில்லியன் டாலர் அளவிலான நிதியை பங்கு விற்பனை மூலம் திரட்ட திட்டமிட்டது ஆனால் அது நடக்காமல் போனது. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் அதிகமான காலத்திற்கு நிதி திரட்ட முயற்சி செய்து வருகிறது யெஸ் வங்கி.
இதன் எதிரொலியாகத் தான் ரிசர்வ் வங்கி தற்போது யெஸ் வங்கியின் நிர்வாகத்தைத் தற்காலிகமாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துள்ளது.
50000 ரூபாய் லிமிட்
யெஸ் வங்கியின் நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டிற்குள் எடுத்த ரிசர்வ் வங்கி, இவ்வங்கி வாடிக்கையாளர்களுக்கு 50000 ரூபாய் மட்டுமே வித்டிரா செய்யும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இது ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்துள்ளவர்களுக்கும் பொருந்தும். அதாவது எவ்வளவு கணக்கு வைத்திருந்தாலும் 50000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என அரசு ஆணையாக அறிவித்துள்ளது (gazette notification).
5 லட்சம் வரை
இதேவேளையில் மருத்து அவசரம், உயர் கல்வி கட்டணம், திருமணச் செலவு ஆகிய காரணங்களுக்காக 5 லட்சம் ரூபாய் வரையில் பணம் திரும்பப் பெற வழிவகைச் செய்துள்ளது ரிசர்வ் வங்கி.