பெங்களூரு: நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமெடுத்து வரும் நிலையில், ஒவ்வொரு துறையிலும் பணியமர்த்தல் என்பது குறைந்து வருகிறது.
எனினும் இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் இந்த கொரோனா காலத்தில் வளர்ச்சி கண்ட சில துறைகளில் ஐடி துறையும் அடங்கும். ஏனெனில் ஊழியர்கள் வீட்டில் இருந்தே தங்களது வேலைகளை செய்து வருகின்றனர். அதன் பலனை ஐடி நிறுவனங்களின் காலாண்டு அறிக்கையிலேயே காண முடிந்தது.
இருப்பினும் புதிய பணியமர்த்தல் என்பது குறைவாகவே உள்ளது. அதிலும் திறன் மிக்க பணியாளர்களை ஐடி நிறுவனங்கள் தேர்தெடுத்து பணியமர்த்தி வருகின்றன.
திறன் வாய்ந்த ஊழியர்களுக்கே அதிக வாய்ப்பு
அதிலும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்கு ஏற்பவும், கிளவுட் கம்யூட்டிங், டெக்னாலஜி என தங்களது திறனை காலத்திற்கு ஏற்ப வளர்த்துக் கொள்ளும் ஐடி ஊழியர்களுக்கு தேவை அதிகம் உள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன. இது குறித்து முன்னதாகவே https://tamil.goodreturns.in/news/demand-for-it-talent-employees-may-rise-in-future/articlecontent-pf99351-019886.html என்ற கட்டுரையில் படித்திருந்தோம்.
புதிய டிஜிட்டல் திறன்களுக்கான தேவை அதிகரிப்பு
இதற்கிடையில் இன்று வெளியான இடி செய்தியொன்றில், ஐடி சேவை வழக்குனர்கள், கடந்த 3-4 மாதங்களில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட மந்த நிலை காரணமாக, புதிய டிஜிட்டல் திறன்களுக்கான தேவை அதிகரித்து வருகின்றது. அதே நேரம் லீகசி ஸ்கில்ஸ் எனும் மரபு திறன்கள் உள்ளவர்களை குறைவாக வேலைக்கு அமர்த்தி வருகின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர்.
என்னென்ன துறை?
இது குறிப்பாக ஐடி துறையில் டேட்டா அனலிஸ்டிக்ஸ் (data analytics), டேட்டா சயின்ஸ் (data science), கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் சில வளர்ந்து வரும் தொழில்நுட்ப திறன் கொண்டவர்களையே அதிகமாக பணியமர்த்தியுள்ளனவாம். இதே C, C++, VLSI design உள்ளிட்ட துறைகளில் ஓரளவு டிமாண்ட் இருப்பதாகவும், இதே மற்ற மரபு (legacy) திறன்களைக் கொண்டவர்களுக்கு தேவை அதிகம் இல்லை என்றும் டீம்லீஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், துணைத் தலைவருமான ரிதுபர்ண சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
டிஜிட்டல் சேவைக்கு மாறி வரும் உலகம்
தொழில்நுட்பம் மற்றும் தொழில் நுட்பம் அல்லாத துறையில் பாரம்பரிய திறன்களுக்கான தேவை குறைவாகவே உள்ளது. ஆக இந்த தொற்று நோய் இன்னும் தொழில்துறைகளில் ஒட்டுமொத்த பணியமர்த்தலையும் பாதித்துள்ளது. நிறுவனங்கள் தங்களது சேவைகளை ஆன்லைனுக்கு மாற்றும் போது, ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களும், இந்த தொழில்நுட்பம் சார்ந்த திறன் வாய்ந்த பணியாளார்களை, பணியில் அமர்த்த ஒப்பந்தம் செய்து வருகின்றன.
எதிர்காலத்தில் தேவை அதிகரிக்கலாம்
இது குறித்து டெக் மகேந்திராவின் உலகளாவிய தலைமை மக்கள் அதிகாரியும், சந்தைப்படுத்துதல் தலைவருமான ஹர்ஷ்வேந்திரா சோய்ன், டிஜிட்டல் திறன்களில் திறமையான ஊழியர்களுக்கான தேவை எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது. ஏனெனில் நிறுவனங்கள் புதிய தொழில் நுட்பங்களை சேர்க்கின்றன. இதனால் திறன் உள்ளவர்களுக்கு தேவை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பு இது தான்
டெக் மகேந்திரா தற்போது டெக்னிக்கல் திறன் அதிகம் உள்ளவர்களை தேவைக்கு ஏற்ப பணியமர்த்தி வருவதாகவும், அதோடு திறன் அடிப்படையில் பணியமர்த்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பணியமர்த்தலானது குறிப்பாக வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது டிஜிட்டல் டெக்னாலஜி, செயற்கை நுண்ணறிவு, கிளவுட், ரோபோடிக் செயல்முறை, ஆட்டோமேஷன், சைபர் செக்யூரிட்டி, 5ஜி தொழில் நுட்பம் உள்ளிட்ட டிஜிட்டல் தொழில் நுட்பங்களில் பணியமர்த்துவதையும் எதிர்பார்க்கிறோம் என டெக் மகேந்திரா தெரிவித்துள்ளது.
திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்
ஆக மொத்தத்தில் இந்த அறிக்கைகள் அனைத்தும் சொல்வது திறன் வாய்ந்த, காலத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் பணியாளர்களுக்கு என்றும் தேவை அதிகம் என்பது தான். அவர்களுக்கு தான் பணி வாய்ப்புகளும் காத்துக் கொண்டுதான் உள்ளன. ஆக நாமும் காலத்திற்கு ஏற்றவாறு நமது திறனை வளர்த்துக் கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்பது இங்கு தெளிவாகிறது.