மூன்லைட்டிங் என்பது சமீபத்திய மாதங்களாகவே தொடர்ந்து பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக ஐடி துறையில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. ஒரு தரப்பு இது மிகப்பெரிய தவறு என கூறி பணி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. மற்றொரு தரப்பு இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனை இல்லை என கூறுகின்றது.
இது குறித்து மூன்லைட்டிங்கினை செய்தவர்களின் கருத்து என்ன? உண்மையில் இது எந்தளவுக்கு ஊழியர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது வாருங்கள் பார்க்கலாம்.
தொழில் மீதான ஆர்வம்
இந்த கட்டுரை BT செய்தியினை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. பெரும்பாலும் இன்றைய காலகட்டத்தில் படிக்கும் காலத்திலேயே இளைஞர்களுக்கு தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு இது மிக அதிகளவில் அதிகரித்துள்ளது.
அனுபவத்திற்காக பணிபுரியும் இளைஞர்கள்
போதிய அனுபவம் இல்லை என்ற காரணிகளுக்கு மத்தியில், பெரும்பாலும் தங்களது அனுபவத்தினை மேம்படுத்திக் கொள்ள நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். அப்படி தான் சொந்த தொழில் செய்ய நினைத்தாலும் அதற்காக போதிய அனுபவம் இல்லாததால் தொழில் செய்ய தொடங்கிய பின்னர், ஒரு நிறுவனத்திலும் பணிபுரிய தொடங்குகின்றார் அருண்.
முதுகெலும்பாக அமைந்த மூன்லைட்டிங்
எனினும் தனது தொழிலையும் பகுதி நேரமாக தொடர்கின்றார். தன்னுடைய அலுவலகத்தில் பெறும் அனுபவத்தினை வைத்து, தனது தொழிலை மேம்படுத்தும் திறனை பெறுகின்றார். குறிப்பாக சமூக வலைதளத்தில் எப்படி தங்களது பிராண்டுகளை மேம்படுத்துவது என்பது குறித்தான திறனை அருண் கற்றுக் கொள்கிறார். தனக்கு போதிய அனுபவத்தினை கிடைத்ததையடுத்து, அந்த பணியில் இருந்தும் விலகியுள்ளார். இதுவே தற்போது தனது தொழிலை வளர்க்க தனக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளதாக கூறியுள்ளார். தான் மூன்லைட்டிங்கில் 6 மாதம் இருந்ததாகவும் ஒப்புக் கொள்கிறார்.
மூன்லைட்டிங் விவாதம்
சமீபத்திய மாதங்களாகவே தொழிற்துறையில் மூன்லைட்டிங் என்பது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இது குறித்து பற்பல நிறுவனங்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. இரண்டாவது வேலை செய்வது மிக பெரிய ஏமாற்று வேலை. இது மோசடி வேலை என்றெல்லாம் கூறப்படுகின்றது. பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக விப்ரோ நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 300 பேரை பணி நீக்கம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
நிறுவனங்களின் கருத்து
விப்ரோ நிறுவனம் மட்டும் அல்ல, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களும் இது குறித்து கவலை எழுப்பி வருகின்றன. இது குறித்து ஏற்கனவே பணி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ளன. அதேசமயம் இன்ஃபோசிஸ் நிறுவனம் அனுமதியுடன் இரண்டாவது வேலையினை தொடரலாம் என தெரிவித்துள்ளது. இதே இது குறித்து டிசிஎஸ் நிறுவனம் ஒரு கட்டமைப்பினை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இன்றைய தலைமுறை வேறு
இது குறித்து நிபுணர்கள் மூன்லைட்டிங் என்பது விசுவாசமின்மையை அதிகரிக்கிறது என்கின்றனர். விசுவாசம் என்பது போய்விட்டது. நமது பெற்றோர் ஒரே வங்கியில், ஒரு நிறுவனத்தில் தங்களது வாழ் நாள் முழுவதும் பணி புரிந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையினர் அப்படி இல்லை. 6 - 7 ஆண்டுகளில் 3 - 4 வேலைகளுக்கு மாறி விடுகின்றனர். 2 ஆண்டுகள் கூட அதிக நேரம் என உணர்கின்றனர்.
சிறந்த அனுபவம்
ஒருவர் ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகின்றார் எனில், அவரின் அனுபவத்தை வைத்து அந்த டீமை நல்வழிபடுத்த முடியும். அவர்களின் இலக்கினை அடைய இது உதவிகரமாக இருக்கும். ஒரு ஊழியர்கள் ஒரு எட்டெக் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, மற்றொரு எட்டெக் நிறுவனத்தில் இணைந்தால் அது ஒப்பந்த மீறல். மார்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர், கிராஃபிக் டிசைனராக இரவில் பணிபுரிந்தால் அதில் தவறு இல்லை. ஆனால் ஒரே துறையில் பணி புரிந்தால் அது தவறாகும் என கூறுகின்றனர்.
வருமானம் அதிகரிப்பு
மேலும் ஒருவர் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மற்றொரு மூன்லைட்டிங் நபர் தான் முன்னதாக எழுத்தாளராக பணிபுரிந்து வந்ததாகவும், பின்னர் வேலையை ராஜினாமா செய்து விட்டு இரண்டு நிறுவனத்திற்கு ப்ரீலான்சிங் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு பயண நேரம் மிச்சம். செலவு மிச்சம், இன்னும் பல சாதகமான காரணிகள் உள்ளதாக கூறுகின்றார்.
சாதக, பாதகம்
தற்போது இரண்டு வேலை செய்வதால் வருமானமும் அதிகம். நேரமும் மிச்சமாவதாக தெரிவித்துள்ளார். மூன்னதாக ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தவர், தற்போது 8 - 20 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மூன்லைட்டிங் என்பது பற்பல சாதக பாதகமான காரணிகளை கொண்டுள்ளது. அது நீங்கள் தேர்ந்தெடுக்கும் பணியினை பொறுத்தது. உங்களது 2வது வேலையால் உங்களது நிறுவனம் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது உங்களது கடமையாகும்.