டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலையில் மத்தியில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த முறை சிலிண்டருக்கு 19 ரூபாய் அதிகரித்துள்ளது. அதிலும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களின் விலை டிசம்பர் 31 வரை டெல்லியில் 695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆனால் இந்த விலையேற்றத்துக்கு பின்னர் தற்போது டெல்லியில் 714 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாதம் ஒரு முறை விலை மாற்றம்
அரசு நடத்தும் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் ஒவ்வொரு மாதமும் சர்வதேச விலை நிலவரத்தை பொறுத்து, இங்கு விலையில் மாற்றம் செய்வார்கள். அந்த வகையில் வருடத்தின் முதல் நாளான இன்று எல்பிஜி கேஸின் விலை அதிகரித்துள்ளது. இதில் சந்தோஷப்படக் கூடிய விஷயம் என்னவெனில் பெட்ரோல், டீசல் போன்று விலையை போல் அனுதினமும் மாற்றாமல், இந்த எரிபொருள் நிறுவனங்கள் மாதம் ஒரு முறை மாற்றம் செய்வது தான்.
இன்று முதல்
இந்த விலை அதிகரிப்பானது இன்று ஜனவரி 1, 2020 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் மாற்றம் செய்யப்படும் இந்த சிலிண்டர்களின் விலை, இந்திய ரூபாயின் மாற்றத்தைத் பொறுத்தும் மாறும் என்பதால், இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஐந்து மாதம்
நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து இது ஐந்தாவது முறையாக விலை ஏற்றம் செய்து வரும் நிலையில், ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் விலையானது மக்களின் அன்றாட செலவில் இன்னும் கூடுதல் செலவுகளை செய்ய வைக்கும் என்பதால், இது மாத பட்ஜெட்டில் இன்னும் கையை கடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
மற்ற இடங்களில் விலை எப்படி?
இந்தியன் ஆயில் மற்றும் இன்டேண் விற்பனை செய்யும் நகரங்களில் டெல்லியில் 14.2 கிலோ சிலிண்டரின் விலை 714 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 747 ரூபாய்க்கும், இதே மும்பையில் 684 ரூபாய்க்கும், இதே சென்னையில் 734 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 கிலோ சிலிண்டர் விலை
இதே 19 கிலோ சிலிண்டரின் விலை டெல்லியில் 1,241 ரூபாய்க்கும், இதே கொல்கத்தாவில் 1,308 ரூபாய்க்கும், இதே சென்னையில் 1,363 ரூபாய்க்கும், இதெ மும்பையில் 1,190 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடியான விலையேற்றம் ஜனவரி 1, 2020 முதல் அமலுக்கு வந்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வு அதிகரிப்பு
எல்பிஜி நுகர்வு 6 சதவிகிதம் அதிகரித்து 2.18 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாசுபாட்டை தவிர்க்கவும், பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும், விறகுக்கு பதிலாக கிராமப்புறங்களில் உள்ள வீட்டு சமலறைகளில் தூய்மையான எரிபொருளை பயன்படுத்துவதற்கான உந்துதலினால், இந்தியாவில் 95 சதவிகிதத்திற்கும் அதிகமான வீடுகளில் இப்போது எல்பிஜி உபயோகப்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.