ஒரு பக்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மக்களைக் கடுமையாகப் பாதித்து வரும் நிலையில், மறுபக்கம் எல்பிஜி சிலிண்டர் விலை இந்தியக் குடும்பங்களைப் பாதித்து வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் காரணமாகப் போக்குவரத்துக் கட்டணங்கள் செலவுகள் கடுமையாக உயர்ந்து உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாகச் சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் தினமும் வாங்கும் காய்கறிகள், உணவுப் பொருட்கள், பால் போன்ற மிகவும் அத்தியாவசியமான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
புதிய விலை உயர்வு
இந்நிலையில் திங்கட்கிழமை (இன்று) எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் சமையல் சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வீடுகளில் பயன்படுத்தும் 14.2 கிலோ சிலிண்டர் விலை நாட்டின் தலைநகரில் 794 ரூபாயில் இருந்து 819 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.
19 கிலோ எல்பிஜி சிலிண்டர்
இதேபோல் 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை 95 ரூபாய் அதிகரித்து 1,614 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இந்த விலை டெல்லியில் மட்டும் அல்லாமல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அமலாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
விலை நிலவரம்
இதன் மூலம் புதிய விலை உயர்வின் படி டெல்லியில் சமையல் சிலிண்ட் விலை 819 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 845 ரூபாயாகவும், மும்பையில் 819 ரூபாயாகவும், சென்னையில் 835 ரூபாயாகவும், ஹைதராபாத்-ல் 871 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.
மோசமான பிப்ரவரி
பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்யும் சமையல் 3 முறை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஒரு மாதத்தில் மட்டும் சமையல் சிலிண்டர் விலை 100 ரூபாய் அதிகரித்தது.
பிப்ரவரி 4 - 25 ரூபாய்
பிப்ரவரி 14 - 50 ரூபாய்
பிப்ரவரி 25 - 25 ரூபாய்
225 ரூபாய் உயர்வு
பிப்ரவரி மாதத்தைப் போல் அரசு கச்சா எண்ணெய் நிறுவனங்கள் டிசம்பர் மாதம் 2 முறைத் தலா 50 ரூபாய் வீதம் சுமார் 100 ரூபாய் சமையல் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் டிசம்பர் மாதம் 100 ரூபாய், பிப்ரவரி மாதம் 100 ரூபாய், மார்ச் மாதம் முதல் முறையாக 25 ரூபாய் என டிசம்பர் மாதம் முதல் எல்பிஜி சிலிண்டர் விலை மொத்தம் 225 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
மானிய விலை
எல்பிஜி சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் வருடத்திற்கு 12 சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் வாங்கும் நிலை இருக்கும் போது சிலிண்டருக்கான மானிய தொகை அளவும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் மக்கள் சிலிண்டர் விலையில் பெரும் பகுதி தொகையைச் செலுத்தியாக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
சர்வதேச சந்தை விலை
இந்தியாவில் தற்போது அதிகரிக்கப்பட்டு வரும் பெட்ரோல், டீசல், எல்பிஜி விலை உயர்வு அனைத்தும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டு வரும் விலை உயர்வு தான் முதலும் முக்கியக் காரணமாகக் கூறப்பட்டாலும், மத்திய அரசு இதன் மீதான வரியை குறைத்து விலைவாசியைக் குறைக்க முடியும். ஆனால் வரி வருமானத்திற்காக மத்திய அரசு வரியை குறைக்க எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பெட்ரோல், டீசல், எல்பிஜி விலை
தற்போது சந்தையில் பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு நாட்டின் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைக் கடுமையாகப் பாதிக்கும் எனப் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்தியாவில் காய்கறி, உணவு பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் பால் விலையும் உயரும் எதிர்பார்க்கப்படுகிறது.
நுகர்வோர் சந்தை
இதுமட்டும் அல்லால் பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையில் ஏற்பட்டு உள்ள உயர்வு நேரடியாகவும், மறைமுகமாகவும் நாட்டின் வர்த்தகச் சந்தையில் நுகர்வோர் தலையில் தான் விழும் என்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பொருளாதாரம்
இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பின் நாட்டின் வர்த்தகச் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது, வட்டி விகிதம், சந்தையில் டிமாண்ட், புதிய வேலைவாய்ப்புகள் என அனைத்து காரணிகளும் நாட்டின் வளர்ச்சிக்குச் சாதகமாக இருக்கும் வேளையில் வர்த்தகச் சந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் இந்தப் பெட்ரோல், டீசல், எல்பிஜி விலை உயர்வு உள்ளது.